புத்துயிரூட்டப்பட வேண்டிய பொது சுகாதாரம்
சமூக மருத்துவன்
முதலாளித்துவ சமூக அமைப்பு உருவான போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நகர் மயமாக்கலையும், அதன் விளைவாக அதிக மக்கள் நெருக்கடியையும், ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழலையும் உருவாக்கியதோடு, அதன் விளைவாக அதிக அளவிலான தொற்று நோய்களையும் உருவாக்க காரணமாக இருந்து வந்திருக்கிறது. சோசலிச நாடுகளில் ஏற்பட்ட சமுக மாற்றங்கள், காலனி அடிமை நாடுகளில் உருவான எதிர்ப்புகள், மற்றும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் எழுச்சிகளின் விளைவாக அனைத்து துறைகளிலும் (சுகாதார துறையிலும்) சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு சுகாதாரத்துறை கணிசமான முன்னேற்றங்களை கண்டிருந்தாலும் வாழ்நாள் 54லிருந்து 65 வருடங்களாக அதிகரிப்பு (1981 _2000), பிறப்பு விகிதம் 1000 மக்கள் தொகைக்கு 41லிருந்து 26 ஆக குறைந்தது (1951 _1998) இனப்பெருக்க விகிதம் 6லிருந்து 2.9ஆக குறைந்தது (1960 _1997), சிசுமரண விகிதம் 1000 பிறப்பிற்கு 146லிருந்து 60 ஆக குறைந்தது (1951_2003), ஒட்டு மொத்த சுகாதாரம் மற்ற வளரும் நாடுகளை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தையும், உலக நோயாளிகளின் சுமையில் 20 சதவீதத்தையும், குழந்தைகள் மரண விகிதத்தில் 23 சதவீதத்தையும், தாய் மரண விகிதத்தில் 20 சதவீதத்தையும், காச நோயளிகளின் பங்கில் 30 சதவீதத்தையும், எச்.ஐ.வி. தொற்றில் 14 சதவீதத்தை கொண்டுள்ளதன் மூலம் உலக அளவில் நோயளிகளின் சுமையில் பெரும் பகுதியை கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்தும், ஒவ்வொரு வருடமும் தொற்று நோயில் 2.5 மில்லியன் குழந்தைகளும், 2.5 மில்லியன் பெரியவர்களும் இறக்கின்ற அவல நிலை தான் நிலவுகின்றது.
ஒரு இந்தியக் குடிமகன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் தன்னுடைய ஆண்டு வருமானத்தில் 50 சதவீதத்தை அதற்காக செலவிட வேண்டியுள்ளது. மருத்துவமனைக்கு வந்தவர்களில் 24 சதவீதம் பேர் பொருளாதார நெருக்கடியில் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறார்கள். அரசின் ஒதுக்கீடு இல்லாமல் சுகாதாரத்திற்காக தன் கையிலிருந்து செலவழிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம், ஆரோக்கியமான இருப்பிடம் மற்றும் கழிப்பிடம், தரமான ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் அடிப்படை கல்வி இவைகளுடன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருவதற்குப் பதிலாக, நோய்கள் ஏற்பட்ட பின்பு அதை குணப்படுத்தும் மருத்துவமனைகள் மற்றும் அதிநவீன கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதன் விளைவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள அவல நிலைக்கு பிரதானக் காரணம்.
உதாரணமாக, கொசுக்களின் மூலம் பல தொற்று நோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகள் மற்றும் அதற்கான போதியளவிலான தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாமல், அதன் மூலம் பரவும் தொற்றுநோய்களை குணப்படுத்தக் கூடிய மருந்துகள் வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படாததால் அதிக மக்கள் தொற்று நோய்களுக்கு ஆட்படுவதோடு, அந்த தொற்று நோய்களை குணப்படுத்த அதிக நிதியை மேலும் மேலும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கித் தவிக்கிறோம். இது மறைமுகமாக மருந்து தயாரிக்கும் பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான லாபவேட்டைக்கு நம் மக்களை பலியிடக் கூடிய நடவடிக்கை என பல சமுக நோக்குள்ள இயக்கங்கள் குரல் எழுப்பியும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவை குறித்து வரும் இதழ்களில் விவாதிப்போம்.
பரிமாற்றம் தொடரும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|