வறுமையோடு விளையாடும் ஆட்சியாளர்கள்
சத்திஸ்கர் மாநிலத்தில் மக்களின் வறுமையோடு விளையாடி வருகின்றனர் அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர். கடந்த டிசம்பர் மாதம் அந்த மாநில அரசு கணக்கீட்டின்படி 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். ஆனால் அதற்கு அடுத்த மாதமே இந்த எண்ணிக்கையை பாரதிய ஜனதா அரசு மாற்றி அறிவித்தது. மொத்தம் 34 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதாக அறிவித்தனர்.
ஒரே மாதத்தில் 12 லட்சத்து 60 ஆயிரம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே போய்விட்டார்கள் என்று அவசரப்பட்டு நினைத்து விடாதீர்கள். (ஆட்சியாளர் கொள்கைகளால் அப்படி நேர்ந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை!) வரும் நவம்பர் மாதம் அங்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே ‘வாக்குகளை’ குறி வைத்து, பாரதிய ஜனதா அரசு இந்த எண்ணிக்கையில் மோசடி செய்துள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் என்ற பெயரில் டாம்பீகமாக ஒரு விழாவை நடத்தியுள்ளது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி, ‘மரண வியாபாரி’ நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் ‘துப்பாக்கி சூடு’ புகழ் வசுந்தரா ராஜே என பெரிய பட்டாளமே கலந்து கொண்டது.
இந்த உணவுத் திட்டப்படி வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிலோ ரூ.3 வீதம் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுமாம். ‘ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கை 46 சதவீதத்துக்கு மிகக்கூடாது’ என்று மத்திய திட்டக் குழு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சத்திஸ்கர் பாஜக அரசு தயாரித்துள்ள புள்ளிவிபரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 80 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்றனராம்! அதிலும் ராய்கார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 94 சதவீதம்!
முதல்வரின் உணவுத் திட்டத்தைக் காரணம் காட்டி மத்திய அரசின் வேறு பல உதவித் திட்டங்களை ரத்து செய்துவிட்டது மாநில பாஜக அரசு. அதில், மலைவாழ் மக்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம், மிகவும் வறிய நிலையில் இருக்கும் 15 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ ரூ.2 வீதம் மாதம் 35 கிலோ அரிசி வழங்கும் அந்தி யோதயா அன்ன யோஜனா என்ற வேலைக்கு உணவுத் திட்டமும் அடங்கும். இது மட்டுமல்ல 65 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வந்த திட்டத்தையும் ரத்து செய்து விட்டனர்.
இவர்களின் திட்டத்துக்காக வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவது என்ற பெயரில் ஏராளமாக வாரி இறைத்துள்ளனர். கோர்பா மாவட்டத்தில் செல்வச் சீமான்களான ரவிபூசன் சிங், சுனில் சிங் ஆகிய இருவரது பெயர்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்போருக்கான பட்டியலில் உள்ளன. சுனில் சிங் பெயரில் 20 ஹெக்டேர் நிலமும், பல லட்சம் ரூபாய் சொத்தும் இருக்கிறது. இந்த பட்டியலில் தனது பெயரைப் பார்த்த அவர், ‘இது ஒரு மிகப் பெரிய காமெடி’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.
இது போல் எண்ணற்ற குளறுபடிகளை உள்ளூர் பத்திரிகைகள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. இதுதான் பாரதிய ஜனதாவின் ஒளிரும் சத்திஸ்கார். பாஜக அரசின் பாசாங்குத்தனம் என்னவென்றால், மத்திய அரசு வழங்கும் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மானியத்தைப் பெற்றுக் கொண்டு, வெறும் 10 சதவீதம் மட்டுமே மாநில அரசு செலவு செய்து விட்டு, தமது பெயரில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொள்வதுதான். அங்குள்ள காங்கிரசார் இதைச் சொல்லி புலம்பி வருகின்றனர். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும் வறுமைக் கோட்டை பற்றி ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்து, ரேசன் முறையை முடித்துக் கட்ட வேண்டும் என்று துடித்து வருகிறது. பாரதிய ஜனதாவும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தான் மேலே சொல்லியுள்ள சத்திஸ்கர் அனுபவம் காட்டுகிறது. ஆக மக்களின் வறுமையோடு விளையாடுவதே இந்த ஆட்சியாளர்களின் வாடிக்கையாகப் போய்விட்டது!
(டவுன் டூ எர்த்தில் இருந்து என்.டி.எம் - பிப்.2008)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|