சமச்சீர் கல்வி - கைக்கு எட்டியது...
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
சமச்சீர் கல்வி அமலாகுமா? சமச்சீர் கல்வி எப்படி இருக்கும்? சமச்சீர் கல்வி என்றால் என்ன? பொதுப்பள்ளி என்றால் என்ன? என்று பலவித கேள்விகளை எழுப்பி எதுவுமே நடக்காமல் பார்த்துக்கொள்ள தமிழகத்தில் ஒரு கூட்டம் உலவி வருவது யாவரும் அறிந்ததே. இதில் கல்வியாளர்களில் ஒரு பகுதியினரும் அடங்குவர். இந்தியாவின் கடைகோடி இந்தியன் தான் குடிக்கும் கஞ்சியில் சேர்க்கும் உப்புக்குச் செலுத்தும் வரி உட்பட மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட ஏராளமான கல்விக்குழுக்கள் அளித்துள்ள எந்தப் பரிந்துரையையும் முழுமையாக ஒருமுறை கூட வாசிக்காதவர்கள் “பார்வையற்றவர்கள் யானையை வர்ணித்ததைப்போல’’ பொதுப்பள்ளி முறையைப்பற்றி பேசிவருவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
‘அருகாமைப் பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழி வழி பொதுப்பள்ளி முறை’ என்ற கோரிக்கை நேற்றோ இன்றோ எழவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழி. இந்தியா அளவில் அமைக்கப்பட்ட அனைத்து கல்விக் குழுக்களின் பரிந்துரையும் அதுவே. மேலும், சென்னை இலயோலா கல்லூரியின் தமிழ்த்துறை சமீபத்தில் நடத்திய ‘அருகாமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழி வழி பொதுக்கல்வியும் சமூக மாற்றமும்’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு அமெரிக்க ஜரோப்பிய கல்வி வல்லூநர்களுக்குக் கட்டுரைகளைக் கேட்டு கடிதம் எழுதிய போது, அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, ‘எங்களுக்குத் தாய்மொழி வழி அருகாமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட பொதுப்பள்ளி, என்ற ஒரு கல்விமுறை தான் தெரியும். அத்தகைய பள்ளிமுறையின் மூலமே எங்கள் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. பள்ளிகல்வி என்பது அரசின் முழுசெலவில், அரசின் பொறுப்பில் இயங்குவதின் மூலமே மக்கள் கூட்டத்தை மனித வளமாக மாற்ற இயலும். எனவே, பொதுப்பள்ளி முறைதான் எங்கள் நாட்டில் உள்ள கல்வி முறை. உங்களிடம் வேறு ஏதாவது கல்வி முறை சிறந்ததாக இருந்தால் நீங்கள் தான் எங்களுக்குக் கட்டுரை அனுப்ப வேண்டும்’ என்று அன்றைய தமிழ்த்துறை தலைவர் முனைவர். செ.தனரசுவிடம் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்றும் கூட பொதுப்பள்ளி பற்றிய பாலம்பாடம் தமிழகத்தில் தேவைப்படுவது தான் பரிதாபத்துக்குரியது. அருகாமைப்பள்ளி என்பது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மாணவர் யாராக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தான் சேர்க்க முடியும். வேறு குடியிருப்பில் எள்ள பள்ளியில் சேர்ப்பதாக இருந்தால் அப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்புக்குத் தன் குடியிருப்பை மாற்றி செல்ல வேண்டும். இது தான் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ள நிலை.
பொதுப்பள்ளி என்றால்? கல்வி தரும் முழு பொறுப்பையும் அரசே ஏற்கும். மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான பாடத்திட்டமும், தேர்வு முறையும் அமைவதால் மாணவர் எந்த பள்ளியில் பயின்றாலும் சமச்சீர் கல்வி கிடைக்கும்.
தற்போது தமிழ்நாடு அரசு அமைத்த முனைவர் முத்துக்குமரன் குழு தன் அறிக்கையை தமிழக அரசிடம் தந்து, அது சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி கொண்டு வர பாடத்திட்டம் உருவாக்கப் பணிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
SFI, DYFI உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகள் பல ஆண்டுகளாக நடத்திவந்த தொடர் போராட்டத்தின் விளைவே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ‘சமச்சீர்கல்வி’ கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ‘சமச்சீர்கல்வி’ என்ற நெடும்பயணத்தில் ஒரு சில அடி முன்னெடுத்து வைத்துள்ளோம்.
தற்போதைய நிலையில் உடனடியாக செய்யக்கூடியது என்ன என்று ஆராய்ந்தால்
1) தமிழகத்தில் உள்ள பலவகையான கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து ஒரே பள்ளிக்கல்வி வாரியம், உருவாக்கப்பட வேண்டும்.
2) பலவகை பள்ளி என நிலைமாறி, ஒரே வகைப்பள்ளி, அனைத்துப்பள்ளியிலும் மாணவர்களின் முழு கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரே பாடத்திட்டம் - அதற்கான பாடப்புத்தகம் அரசே அச்சிட்டு வழங்க வேண்டும்.
3) பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை கற்றலுக்கான சூழலுக்கு ஏற்ப உருவாக்குவது.
4) பள்ளிக்கல்வியின் இறுதியில் ஒரே (பத்தாம் வகுப்பு) தேர்வுமுறை.
5) தற்போது தமிழ்நாடு நீங்கலாக எல்லா மாநிலத்திலும் மாநில அரசு நடத்தும் பள்ளி இறுதித் தேர்வு ஒன்றே ஒன்று தான்.
மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக அமலாகக்கூடியதே. ஆனால் அரசின் கொள்கையில் தெளிவு இல்லாத காரணத்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்படியும் நிகழ வாய்ப்புள்ளது. இதுவரை நடந்துள்ளது அனைத்தும் நம் இயக்கங்களின் தொடர் போராட்டமும் தியாங்களுக்கு கிடைத்த பலனே என்பதை உணர்ந்து. மேலும் அடைய வேண்டியதற்கு நம் போராட்டங்களை தீவிரப்படுத்தி அரசிற்கு நிர்பந்தத்தை உருவாக்கினால் மட்டுமே பொதுப்பள்ளி முறை சாத்தியமாகும் என்பதை உணர்ந்து நம்மை நாமே பலி கொடுக்கவும் தயாராக வேண்டும்.
சமூகத்தில், மெட்ரிக் பள்ளிதான் சிறந்தது என்ற கருத்து வாதத்தை உடைத்தெறிந்து மெட்ரிக் மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளைப் பயன்படுத்தி, பன்னாட்டு புத்தக நிறுவனங்கள், ஆடைநிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைப்பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும். கட்டணக் கொள்ளையுடன், ஒவ்வொறு மெட்ரிக் பள்ளியும் ஒரு தொழிற்பேட்டையைப் (Industrial Estate) போல் இயங்குவதையும், வணிக நலனுக்காகவும், லாபத்திற்காகவும் அப்பாவி மாணவர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்திட வேண்டும்.
மாநிலப் பாடத்திட்டத்தை (SSLC) விட மெட்ரிக் பாடத்திட்டம் சிறந்தது என்ற கருத்துருவாக்கத்தையும், மெட்ரிக் பள்ளிகள் பற்றிய சிவில் சமுகத்தின் (மக்கள் திறளிள்) பொதுப்புத்தியில் படித்துள்ள மாயையையும் நாம் துடைத்து எறிய வேண்டியுள்ளது. இதற்கு தமிழகத்து வாலிபர்கள், மாணவர்களுடனும், ஆசிரியர் - மக்களுடன் கைகோர்த்து ஒரு கூட்டு இயக்கத்திற்கு முயல வேண்டும். தவறான கருத்துக்களை களைவதும், அரசை நிர்பந்திப்பதும் ஏககாலத்தில் நடக்க வேண்டிய செயல்கள். மாற்றம் என்ற சொல்லைத்தவிர எல்லாமே மாறும். மாறக் கூடியதே. ஆனால் தானாக எதுவும் மாறாது. மாற்றத்தை விரும்பும் நாம் மாற்றத்திற்கான களம் காண்போம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|