கீரனூர் ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை
ச.லெனின்
“உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்து வைத்தது இதுவே என்பதற்காகவோ மட்டும் எதையும் நம்பிவிட வேண்டாம்’’ என்ற புத்தரின் வார்த்தைகளை ஆழமான புரிதலோடு வழக்கப்பட்ட குறுநாவலாகவே கீரனூர் ஜாகிர்ராஜாவின் “கருத்த லெப்பை’’ இருக்கிறது எனலாம்.
சமீப காலத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தில் இருக்கும் பழமைவாதங்களுக்கு எதிரான கருத்துக்களை பல எதிர்ப்புகளையும் மீறி தைரியமாக முன்வைக்கின்றனர் என்பது வரவேற்கத்தகுந்த விஷயம். குறிப்பாக வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் போன்று தமிழகத்தில் எழுத்தாளர் சல்மா எழுதிய “இரண்டாம் ஜாமங்களின் கதை’’ என்ற நாவலின் வரிசையில் இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிரான கருத்தை இந்த குறுநாவலும் முன்வைத்திருக்கிறது.
எழுவது பக்கங்கள் கொண்ட இந்த குறுநாவல் இருநூறு, முன்னூறு பக்கங்கள் கொண்ட ஒரு முழுநாவலின் பதிவை, ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்திய சமூக படிநிலையின் தாக்கம் இஸ்லாமிய, கிருத்துவ மதத்தின் மீதும் ஒரு பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் நம் தமிழ் சமுதாய இஸ்லாமியர்களுக்குள் ராவுத்தர், லெப்பை, மரைக்காயர் போன்ற உட்பிரிவுகள் உள்ளது. இதில் ராவுத்தர் சமூகம் உயர்ந்தது என்றும் லெப்பை கீழானது என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இந்த குறுநாவலின் கதாநாயகன் அல்லது மையப்பாத்திரம் வகிப்பவர் ஒரு லெப்பை சமூகத்தை சேர்ந்தவர். அவர்தான் கருத்த லெப்பை.
லெப்பை சமூகம் பொருளாதார தேவைகள் கருதி ராவுத்தர் சமூகத்திற்கு சேவகம் புரிவதை விமர்சிப்பது, பள்ளி வாசல் தேர்தலில் ராவுத்தருக்கு எதிராக லெப்பை ஒருவர் முதல்முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் ராவுத்தர் கோவிலிருந்து லெப்பை சமூகத்தினர் வேலை நீக்கம் செய்யப்பட்டதில் கோபமுறுவது, பைத்தியம் பிடித்தவனுடன் வாழ்க்கை நடத்தும் தன் அக்காவுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க நினைப்பது, உருவ வழிப்பாட்டை முழுமையாகப் புறக்கணிக்கும் இஸ்லாம் சமூகத்தில் உருவவழிபாட்டுக்கான முயற்சியில் ஈடுபடும் துணிவு போன்றவை ஒரு மாற்று மற்றும் முற்போக்கு கொண்ட திசையில் பயனிக்க வைக்கிறது.
ஜாகிர்ராஜா அவர்களின் முந்தைய படைப்பான “மீன்கார தெரு’’வும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக பேசியது. இந்தப்படைப்பும் அதையே இன்னும் அழுத்தமாக செய்திருக்கிறது. எழுத்தாளனின் எழுத்தைப் பார்க்காமல் யாருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்? அப்படி என்றால் இவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்? என்றெல்லாம் சிந்தனையை திசைமாற்றும் போக்கு இன்று காணப்படுகிறது. ஆனால், ஜாகிர்ராஜாவை அப்படி வகைப்படுத்த வாய்ப்பே இல்லை என்றால் அவரின் தந்தை ராவுத்தர் சமூகத்தையும் தாய் லெப்பை சமூகத்தையும் சார்ந்தவர்கள் என்பது தான். கருத்த லெப்பையாக வருபவர் பல மாற்று சிந்தனையோடு குறுநாவலில் சித்தரிக்கப்பட்டாலும், சிவபானத்தை (கஞ்சா) தேடிப் போவது போன்ற ஒரு சில விஷயங்கள் இந்த புத்தகத்தில் எனக்கு உடன்பாடற்றவை.
“பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களுக்கும், சாஸ்திரிகளுக்கும் வெடி வைத்தே தீர வேண்டும்.’’
“சாஸ்திரங்களை நிராகரித்தால் மட்டும் போதாது, புத்தரும், குருநானக்கும் செய்ததை போல சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்க வேண்டும்.” என்ற அம்பேத்கரின் வாக்கியங்களை நனவாக்கும் முயற்சியில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் “கருத்த லெப்பைக்கு” நிச்சயம் ஒரு முக்கிய இடம் உண்டு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|