உலகத்தில் வந்துபோன முழுமனிதன்
கவிவர்மன்
பூமி முழுமைக்கும்
புரட்சியின் அவதாரமாய்
பூத்தவனே!
உலகத்தில் வந்துபோன
முழுமையான மனிதனே!
உலகை வெளிச்சமாக்க
தன்னையே மூட்டிக்கொண்ட
தீக்குச்சியே!
வானத்தின் விளிம்புவரை
பறக்க நினைத்த
கனவுப் பறவையே!
உரசினால் பற்றிக் கொள்ளும்
உஷ்ணமானவனே!
பல நேரம்
ஒட்டுமொத்த ராணுவத்தையும்
ஒருவனாய் எதிர்த்தத
உக்கிரமானவனே!
பசியின் கூக்குரலை
அடிமை மக்களின் அழுகுரலை
கேட்க சகிக்காமல்
கோபம் கொண்டு கொதித்தவனே!
மக்கள் மனதில்
விதையாய் விழுந்து
புரட்சியின்
விழுதாய் எழுந்தவனே!
இரணப்பட்ட கால்களோடு
பழுதுப்பட்ட நுரையிரலோடு
உயிருள்ளவரை
உழைத்தவனே!
கந்தகப் பார்வையோடு
கையில் துப்பாக்கியோடு
புரட்சியை அடைகாத்த
அற்புதமே!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
நீயாகவே
எங்களை உணர்கிறோம்,
உன்னைப் போலவே
இரத்தமாகவும் சத்தமாகவும்
சாதிக்கப் போகிறவர்களாக
உன் போர்க்களத்தை எழுதுகிறோம்
உன் கட்டளை
எங்கள் காதுகளை
அடைகிறது!
உன் சுவாசம்
எங்களைச் சுற்றுகிறது,
நீ பார்த்து கோபபட்ட
அநீதிகள் அனைத்தும்
எங்கள் தேசத்தில் அரங்கேறும்போது
உன் பெயரைச் சொல்லும்
எங்களால்
பேசாமல் இருக்க முடியாது _ சே!
உன் பதாகை
தாங்கிய நாங்கள்
லட்சோப லட்சமாய்
நீயாக மாறுகிறோம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|