இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு
கி. வரதராசன்
இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇயினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தமோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணுவத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது.பல லட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விதைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர். மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள் தமிழர்களிடையே எழுந்ததைக் காண முடியும். அதே போல இன ஆராய்ச்சி என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கியவர்கள் திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும்காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லுநர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்தமாகச் செய்யப்பட்டது.
விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்களையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக்கைகள், சிங்களம் மற்றும் தமிழ்மக்கள்மத்தியில் வேற்றுமையை வளர்த்தன. இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத்தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென்றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில்,தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந்தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972ஆம் ஆண்டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்களத்தை இலங்கையின் ஆட்சிமொழியாகவும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிரகடனம் செய்தது.
ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித்தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. கம்யூனிச இயக்கங்களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக்கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்தனர். சோசலிசத் தமிழ் ஈழம் அமைப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப்பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.
எல்டிடிஇஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அரசின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்றழிக்க முற்பட்டது. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேசுவரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇயினரால் கொல்லப்பட்டவர்களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇயினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.
இலங்கையை ஆண்ட ஜெயவர்த்தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரிமைகளையும் தமிழ் மொழியையும் புறக்கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தியமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவடிக்கைகளே அடிப்படைக் காரணங்களாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇயினரும் தயாராக இல்லை. எல்டிடிஇயினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள்ளது.
எல்டிடிஇ தலைவர்பிரபாகரன்,ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தைஅமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇயினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடைபெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளது. என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வியாகும். இலங்கை வரலாற்றில்,1960ல் ஏற்பட்ட சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பாகவும்எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம்பெற்றன. ஆனால்,அவை பெருமளவுக்கு அமல்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த இருக்கும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந்திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசியப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித்துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவது மாபெரும் முட்டாள்தனமாகும். சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் நீட்டிப்பதை உத்தரவாப்படுத்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
யுத்தத்தில் துயருற்று வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரிலேயே வீடுகள் கட்டித் தந்து, புனரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயலவேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.
இலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும். இனியும் காலத்தை வீணடிக்காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தைஅரசு செயல்படுத்த வேண்டும்.
இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|