ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா...
ராம்கி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற ஒன்றரை மாதங்களுக்குள் தனது தாக்குதல் படலத்தை ஆரம்பித்துள்ளது. மக்கள் மீது தொடுத்துள்ள முதல் ஆயுதம் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு அறிவிப்புகள். பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது என்று வழக்கம் போல பெட்ரோலியத் துறை அமைச்சர் பழைய பல்லவியையே பாடியுள்ளார். (இதற்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, இதே காங்கிரஸ் அரசு குறைக்க மறுத்து வந்தது நினைவிருக்கலாம்) போனால் போகிறதென்று மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலையைத் தொடவில்லையாம். இருந்த போதிலும் ஒரு சிலிண்டருக்கு ரூ.92.96ம், மண்ணெண்ணெய்க்கு ரூ.15.26ம் மானியம் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறிக் கொண்டார்(கொட்டி அழ வேண்டியிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்)
இதிலே வேடிக்கை என்னவென்றால், பெட்ரோலியத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாந்தே இது குறித்து கருத்து தெரிவிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலைப் பொறுத்தவரை லிட்டருக்கு ரூ.6.94ம், டீசலில் ரூ.4.11ம் நட்டமடைந்து வருகிறதாகக் கூறிய அவர், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு, பெட்ரோலிய நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது என்று அங்கலாய்த்துள்ளார். சமீபத்தில் கடந்த ஜூன் 23, 2009 சிஎன்பிசி டிவி 18 சேனலில், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு குறித்த கேள்விக்கு, விலை உயர்வு அவசியம் என்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எந்த ஒரு அரசும் இதை உடனடியாகச் செய்ய முன்வராது என்றும் கூறினார். ஆனால் காங்கிரஸ் அரசு, ஜூன்ஜூன்வாலாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.
மேலும் அவர் தனது பேட்டியில், மண்ணெண்ணெய் மீதான மானியத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் யார் மண்ணெண்ணெய் உபயோகிக்கிறார்கள் என்றும் கூறினார்(விட்டால் மண்ணெண்ணெய் பயன்பாட்டையே தடை செய்ய வேண்டும் என்று கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் மீதான விலைக் கட்டுப்பாடு என்பது அறவே இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். விலை நிர்ணயத்தில் அரசு தலையிடக் கூடாதாம், சந்தை தீர்மானிக்கட்டும் என்கிறார்.
இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலே கூட சரிந்து போயுள்ள சந்தையைத் தூக்கிப் பிடிப்பதற்கு அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள பின்னணியில், ஜூன்ஜூன்வாலா போன்றவர்களின் உளறல்களை அரசு செவிமெடுக்கப் போகிறதா? அல்லது மேற்கத்திய சரிவுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளப் போகிறதா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|