என்ன படிக்கலாம்?
அருள்
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிற படிப்பாக பொறியியல் படிப்பு உள்ளது. பல்வேறு துறைகளைக் கொண்ட இந்த பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் துறைகளாக மெக்கானிக்கல், எலக்டிரிக்கல் மற்றும் சிவில் போன்ற துறைகள் உள்ளது. உலக அளவில் கணினி சார்ந்த துறைகளுக்கான பின்னடைவு அந்த பாடப்பிரிவுகள் மீதான மோகத்தை சற்றே குறைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான கல்லூரிகளில் நன்கொடையே இல்லாமல் சேர்த்துக்கொள்ளப்பட்ட பாடப் பிரிவான மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளே தற்போது பெரும்பாலான மாணவர்களால் விரும்பப்படுகிறது. .ஊடகங்களால் உருவாக்கப்படுகிற கருத்துக்கு உடன்படுவதற்கு மாறாக, மாணவர்கள் தங்கள் விருப்பத்திலிருந்து அதற்கேற்ற துறையை தேர்ந்தெடுப்பதே அவர்களின் வெற்றிக்கு உதவும்.
பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், கணிப்பொறி, கெமிக்கல் மற்றும் உயிரியல் சார்ந்த பாடங்களே அடிப்படை துறைகளாகும். இந்த அடிப்படைத் துறைகளின் உட்பிரிவுகளாக பல்வேறு புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக மெக்கானிக்கல் படிப்பின் உட்பிரிவுகள்தான் உற்பத்தி, ஆட்டோ மொபைல், ஏரோ மற்றும் பெட்ரோலியம் போன்ற படிப்புகளாகும். பொறியியல் படிப்பில் உள்ள அனைத்து துறைக்கும் அடிப்படையாக கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களே. எனவேதான் கட் ஆஃப் மார்க் என்பது இந்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்து துறைக்கும் அடிப்படையான பாடம் கணிதம். எந்த துறையாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் கணிதம் சார்ந்தவையாகவே(உயிரியல் தவிர) இருக்கும். எனவே ஒரளவு கணிதத்தில் ஈடுபாடு குறைவான மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மிகவும் கடினமானதாகவே இருக்கும். கணிதம் கஷ்டம் என்கிற மனநிலையில் உள்ள மாணவன், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கூடுதல் கவனம் இல்லாத பட்சத்தில் படிப்பை தொடர முடியாத அளவுக்கு தள்ளப்பட நேரிடும். கணிதம் அல்லாத உயிரியல் பாடங்களை அடிப்படையாக கொண்ட பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ மெடிக்கல் போன்ற துறைகள் தற்போது பெரும்பாலான கல்லூரியில் உள்ளதால் உயிரியல் பாடத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இந்த ஆண்டு அதிகம் விரும்புகிற துறையாக உள்ள சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளுக்கு அடிப்படையானது கணிதம் மற்றும் +1 இயற்பியல் பாடங்களே துரதிஷ்டவசமாக பெரும்பாலான மாணவர்கள் +2 புத்தகங்களை படித்திருக்க வாய்ப்பில்லை. காரணம் +1 படிக்கும்போதே, பள்ளிகளில் +2 தேர்வுக்கான பாடங்கள்தான் நடத்தப்படுகிறது. இதனால் இந்த துறைகளில் சேரும் மாணவர்கள் எந்த அடிப்படையையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. +1 இயற்பியல் பாடத்தை விரும்பி படிக்கிற மாணவர்கள் நிச்சயம் இந்த துறைகளில் சாதிக்க முடியும்.
+2 இயற்பியலில் ஆர்வமுள்ள மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எலக்டிரிக்கல் சார்ந்த துறைகளை தேர்ந்தெடுக்கலாம். +1 மற்றும் +2 ல் கணிப்பொறி பாடத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் கணிணி சார்ந்த துறைகளை தேர்தெடுப்பது நல்லது. +1, +2 வேதியியல் பாடத்தில் விருப்பமுள்ளவர்கள் கெமிக்கல் துறையை தேர்வு செய்யலாம். எல்லோராலும் விரும்பப்படுகிற துறை என்கிற மோகத்தாலும், இந்த துறை எடுத்து படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றும் கட்டாயத்தின் பேரில் தங்களது துறைகளை தேர்ந்தெடுப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எதில் அதிக ஈடுபாடு உள்ளது என்பதை கண்டுபிடித்து, அந்த ஈடுபாட்டை அதிகப்படுத்துகிற மேற்படிப்பை அவர்களுக்கு பெற்றுத்தருவதே உண்மையான மகிழ்ச்சியான எதிர்காலத்தை அவர்களுக்கு தந்திடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தான் படித்த படிப்பிற்கான அடிப்படை அறிவையும், நல்ல மதிப்பெண்களையும் கொண்ட மாணவன், அவன் எந்த துறை சார்ந்தவனாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தன் இணைப்பு கல்லூரிகளில் உள்ள அனைத்து துறைகளையும் மதிப்பீடு செய்து தரவரிசைப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் இந்த பட்டியலைக் கொண்டு தான் சேரும் கல்லூரியின் அடிப்படை வசதிகளை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக 80 க்குமேல் மதிப்பெண் பெற்ற பாடப்பிரிவையும், கல்லூரியையும் தேர்வு செய்வது நல்லது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என செய்திகள் கூறுகிறது. ஆனால் நல்ல மதிப்பெண் இருந்தும் குறைந்த பட்சம் 5 லட்சம் பணம் இல்லாத அதை கடனாக பெறமுடியாத யாரும் இந்த பொறியியல் படிப்பை படிக்க முடியாது.
1999ஆம் ஆண்டு ரூ. 4000 ஆயிரம் என இருந்த ஆண்டு கட்டணம் தற்போது கல்லூரிகளில் சுமார் ரூ. 60000எனவும் பல்கலையில் 1 லட்சம் எனவும் பத்தாண்டுகளில் சுமார் பதினைந்து மடங்கு உயர்ந்துள்ளது. வருடாவருடம் பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டு வருகிறது தற்போது கல்லூரியில் சேர்வதற்கு 50சதவீதம் எனவும் பல்கலையில் சேர தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதிலிருந்து இந்த படிப்பிற்கான பயனீட்டாளர்களை அரசு அதிகரித்துள்ளது. பணம் இருந்தால் பொறியியல் படிப்பை படிக்க முடியும். திறமை இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிற நிலையில் விருப்பம் சார்ந்து படிப்பை தேர்ந்தெடுப்பது போட்டியை எளிதாக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|