ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை கோவிந்தா
கி.ரமேஷ்
கிட்டத்தட்ட 1கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்த 6வது சம்பள கமிஷன் அறிக்கை வெளிவந்து அதன் முழுவிவரம் புரிந்த பின்னர் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். “பரிசு மழை’’ என்றும் ‘ Big Bananza; என்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் இதனைப் புகழ்ந்து தள்ளின. ஸ்ரீகிருஷ்ணா 150 கோடி அரசு பணத்தை செலவாக அனுபவித்துவிட்டு இதை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையை முழுவதாகப் படித்தால் இது உலகமயக் கொள்கையையும், ஐ.எம்.எப் கட்டளையினை அடியற்றியும் எழுதப்பட்டுள்ளது புலப்படும். பெரும்பாலான தனியார், பொதுத்துறை நிறுவனத்தில் 3-5 ஆண்டுகளுக்கொரு முறை சம்பளம் மாற்றியமைக்கப்படும் சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 13 ஆண்டுக்கொரு முறை தான் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 1996 லிருந்து அமல்படுத்தப்பட்ட 5 வது ஊதியக்குழு அறிக்கை 1.1.2003ல் 6 வது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் 1.1.06 முதல் அது அமல்படுத்தப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்தது.
ஆனால் 2003ல் ஆட்சியிலிருந்த பாஜக அரசு அதை மறுத்து விட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிதியமைச்சர் சிதம்பரமும் 6வது சம்பளக் குழு அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவிட்டார். 1.3.06 முதல் ரயில்வே, பாதுகாப்பு உள்ளியிட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அன்றைய தினம் மேன்மை தங்கிய புஷ் இங்கு வரவிருந்ததால் மத்திய அரசு, ஊதிய கமிஷன் அமைக்க ஒப்புக் கொண்டது. அதுதான் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இந்த சம்பள கமிஷன்.
இந்தக் குழுவுக்கு 48 ஊழியர்கள் ஒதுக்கப்பட்டும் 17 ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டது. அதில் நான்காம் உண்மை நிலை ஊழியரே கிடையாது. தனது பணிகளை பெரும்பாலும் Out Source வெளியே கொடுத்து விட்டது. தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 60% மட்டுமே பயன்படுத்தியதாக கயதம்பட்டமும் அடித்துக் கொண்டுள்ளது.
முதலாவது ஊதியக்குழுவிற்கு பிறகு 6வது ஊதியக் குழு மட்டுமே ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுத்தது.
இந்த அறிக்கை, உயர்மட்ட அதிகாரிகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்து விட்டு குரூப் சி டி ஊழியர்களுக்கு ஒரவஞ்சனை செய்துள்ளது. 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் 1957ம் வருடத்தில் ஏற்றுக் கொண்ட தேவைக்கேற்ப குறைந்தபட்ச ஊதியம் என்ற கோட்பாட்டை இது கேலிக் கூத்தாக்கிவிட்டது. குரூப் சி டி ஊழியர்களுக்கு தற்போதைய ஊதியத்தை 1.74 ல் பெருக்கினால் புதிய சம்பளம் வரும். ஆனால் அதிகாரிகளுக்கோ குறைந்தது 2.625 மடங்கு சம்பள உயர்வு. 25 ஆயிரம் பெறும் அதிகாரிகளுக்கு 80 ஆயிரமும், 30 ஆயிரம் பெரும் அதிகாரிக்கு 90,000 ஆயிரமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது..
ஒரு குரூப் டி ஊழியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் ரூ.5740 மட்டுமே உயர் அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து படி மட்டும் 7000 என்ன ஒரு நீதி!
10 வருடங்களுக்கு முன் (1996) ஊழியர்களுக்கு செய்யப்பட்ட செலவு மொத்தம் 15,500கோடி. ஆனால் 6வது ஊதியக்குழு செய்யும் மொத்த செலவும் 12,561 கோடி மட்டுமே. இதிலும் பல்வேறு ஊழியர் விரோதப் பரிந்துரைகளான குறைப்பு, புதிய ஒய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்குக் கொடுக்கும் கடன்களை வங்கிகளில் வாங்கிக் கொள்ளுமாறு கூறி தன் பொறுப்பை தட்டி விடுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் வெட்டியது போக ஆகும் செலவு ரூ.7975 கோடி மட்டுமே. இதன் மூலம் 10 வருடங்களுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு என்ன பெரிதாகக் கிடைத்து விடும் என்பது கோவிந்தனுக்கே வெளிச்சம்.
ஊதியக் குழுவும் சமூக நீதியும்
மத்திய அரசுப்பணிகளில் ரயில்வேயில் சுமார் 5லட்சம் பேரும், மற்ற பணிகளில் 5லட்சம் பேரும் நான்காம் நிலை ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் 99% குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வறுமை காரணமாகவும் காவல் போன்ற மத்திய அரசுப் பணிகளில் வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6வது சம்பள கமிஷன் இந்த மக்கள் மத்திய அரசுப்பணிகளில் உள்ளே நுழையக் கிடைத்த ஒரே வழியான நான்காம் நிலை ஊழியர் பதவிகளை ஒழிக்குமாறு மறைமுகமாகப் பரிந்துரைத்துள்ளது. இவர்களெல்லாம் குரூப் சியாக தரம் உயர்த்தப்படுவார்களெனவும், அந்தப் பணியிடங்கள் இனி தனியார் கொள்கைக்குத் திறந்து விடப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. (அவர்கள் ஒய்வு பெறும் வரை அதே பணிகளைத்தான் செய்ய வேண்டுமென்பதும் வேறு விஷயம்)
சுமார் 6000 சம்பளம் பெறும் நான்காம் நிலை ஊழியரை ஒழித்து விட்டு ரூ.60மட்டும் பெறும் அத்தக் கூலி நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்தப் பரிந்துரை இதன் மூலம் சமூக நீதிக்கு வேட்டு வைத்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும், அரசு ஊழியரும் வாலிபர்களும் சேர்ந்து முறியடிக்க வேண்டிய மக்கள் விரோதப் பரிந்துரை இது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்போகும் ஊதியம் உயர்வுக்கு (?) மத்திய அரசு ஊழியர்கள் கொடுக்கப் போகும் விலைகள் சில:
1) 9,75,000 குரூப் டி பணியிடங்கள் ஒழிப்பு
2) அரசு விடுமுறை நாட்கள் 17 நாட்களிலிருந்து 3 நாட்களாக குறைப்பு.
3) போனஸ் முழுமையாக ஒழிப்பு
4) ஓய்வூதியம் தனியார் மயம்
5) மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் மத்திய அரசு சுகாதரத் திட்டம் ஒழிப்பு
6) அனைத்து விதமான வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை வங்கிகளிடம் ஒப்படைப்பு
7) புதிய நியமனங்கள் இனி இல்லை.
8) நான்காம் நிலை ஊழியர் பணிகளும், உயர்நிலை ஊழியர் பணிகளும் ஒப்பந்தத்துக்கு வ¤டப்படும் ஆபத்து.
9) கருணை அடிப்படையில் வேலை மறுப்பு
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மறுபுறம் ஸ்ரீகிருஷ்ணா கூறுகிறார். “அனைவரையும் ஒரு அறிக்கை அதிருப்திக்குள்ளாக்குமானால் அது மிக நல்ல அறிக்கை.’’ மேலும் ஒரே ஒருவர் அவரை அழைத்து இது மிகவும் நல்ல பரிந்துரை என்று பாராட்டியதாகவும், அதுவே தமக்குப் போதுமென்றும் கூறுகிறார். அந்த ஒருவர் யார்? அதுதான் நிதியமைச்சர் சிதம்பரம்.
சிதம்பரம் ஒன்றைப் பாரட்டினால் அது அவருக்கு சாதகமாக இருக்குமென்பது கூறித் தெரிய வேண்டியதில்லை.
எனவே, இந்த ஆறாவது ஊதியக் குழுவின் ஊழியர் விரோதம், மக்கள் விரோதப் பரிந்துரைகளை நாம் அனைவருக்கும் சேர்ந்து முறியடிக்க வேண்டியது தேவை.
கி.ரமேஷ், துணைத்தலைவர், ஏஜி.அலுவலக ஊழியர் சங்கம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|