சிவாஜி அதிரவில்லை, அதிர்ச்சி அளிக்கிறது
- ஆர்.வேலுச்சாமி
நமது தொலைக்காட்சியும், பத்திரிகையும் ஏற்படுத்திய பரபரப்பு விளம்பரங்களுக்கு மத்தியில், வேறுபுதிய படங்கள் திரையரங்கிற்கு வராத நேரத்தில் ஒருவழியாக ஜுன் 15 அன்று சிவாஜி வந்து சேர்ந்தது. 15ஆம் தேதி தியேட்டர் வாசலில் கூடியிருந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பை சிவாஜி பட விளம்பரங்கள் ஏற்படுத்தியுள்ளன. 10ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படை எடுக்கிற காலம். அதேபோல் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 10ஆம் வகுப்பு வரை பல ஆயிரம் ரூபாய்களை கல்விக் கட்டணமாகவும், நோட்டு புத்தகம், சீருடை என செலவுகளை செய்துவிட்டு ஓய்ந்துபோய் பெற்றோர்கள் இருந்தகாலம்.
இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற கதையம்சமாக கல்வி வியாபாரத்தை தடுக்கும் வகையில் இலவசக் கல்வி வழங்குவதாக சிவாஜி வந்துள்ளது. உலகமயமாக்கல் கொள்கை எல்லாவற்றையும் வியாபாரமயமாக்கி வருவதற்கு சிவாஜி ஒரு முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல. நம்நாட்டில் நிலவுகிற கல்வியின்மை, வேலையின்மை, வறுமை, கறுப்புப்பணம் இவைகளை ஒழிப்பதாக படம் எடுத்து பல கோடி ரூபாய் கறுப்பு பணம் சேர்க்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறது சிவாஜி.
ஒரு தனிநபர் நாட்டில் நிலவுகிற உலகமயசூழலில் கல்வி எப்ப இலவசமாக வழங்கமுடியும்? அரசுகள் மட்டுமே தனது வரி வருமானத்தில் இருந்து கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்து இலவச கல்வி வழங்கமுடியும். சிவாஜியோ அவரது பெயரில் டிரஸ்டுகள் அமைத்து இலவசக்கல்வி, மருத்துவம் வழங்கமுடியும் என்கிறார். உலகம் முழுவதும் உள்ள ஏராளமான டிரஸ்டுகள் பெரும் செல்வந்தர்களின் கறுப்பு பணத்தின் இருப்பிடமாக அரசை ஏமாற்றி வருகிற காலத்தில் சிவாஜியின் கதை கதையாகவே உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால் அது என்ன அவ்வளவு லேசான விசயமா? அதுவும் தனிநபர் சாகசமா? ரஜினி நடிக்கும் படம் என்றால் பஞ்ச் டயலாக் இருக்கும். அதில் ஒன்று பன்னிங்கதாக் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தாக் வரும்.
யாரை பன்னிங்க என்று குறிப்பிடுகிறார். கூட்டமாக யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களை பன்னி என்று குறிப்பிடுகிறார். கறுப்பு பணத்தை ஒழிக்க சிவாஜி தனிநபராக சாதிக்கிறார். கறுப்பு பணத்தை கறுப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் இருந்து பறித்து அதை மீண்டும் இங்கேயே கறுப்பு பணமாக மாற்றிவிட்டு, வெளிநாட்டில் இருந்து நல்ல பணமாக வருவதாக சொல்கிறார். இவை யாவும் அரசு கவனத்தில் வராமல் செய்கிற திருட்டுத்தனம் இதை நியாயப்படுத்துகிறார்.
உலக வரலாற்றில் தனிநபர் சாகசங்கள் எதுவும் கிடையாது. எங்கெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராடியிருக்கிறார்களோ அங்கேதான் கோரிக்கையும், உரிமைகளும் மீட்கப்பட்டுள்ளன. சிவாஜி படம் சினிமா என்பதால் தனிநபர் சாகசமாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. கூட்டம்கூட்டமாகக் போராடுகிற மக்களை பன்னிங்க என்று சொல்லி அவமானப்படுத்தப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ரஜினியின் சமீபத்திய படங்கள் படையப்பா, பாபா, சந்திரமுகி இதைத் தொடர்ந்து சிவாஜி வரை இவரது படத்தில் மக்களை நம்ப வைக்கிற அல்லது போராடுகிற மக்களை திசை திருப்புகிற நடைமுறைக்கும் விஞ்ஞானத்திற்கும் ஒவ்வாத, பத்தாம்பசலித்தனமான மூடநம்பிக்கை கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஜாதகம், ஆருடம் போன்றவைகள் இன்று வளர்ந்து வந்துள்ள விஞ்ஞான யுகத்தில் உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் மக்களின் மன உணர்வுகள், கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கைகளுக்கு சிவாஜி தீனி போடுகிறார். முதலாளித்துவ சமூக அமைப்பு மக்களை சிந்திக்கவிடாமல் திசைதிருப்புகிற பணியை சிவாஜி படம் மூலம் மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.
காதலுக்காக தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடி ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட ரஜினியை காதலியாக ஸ்ரேயா காப்பாற்றுகிறார். அவர் மனைவியாக மாறியபின்னர் சி.பி.ஐ.யிடம் கணவரை காட்டிக் கொடுக்கிறார். இது நல்ல முரண்பாடுதான்.
லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமெனில் சிவாஜி காட்டுகிற பாதை ஆபீஸ் ரூம். அடியாட்கள் பலத்தோடு அடித்து உதைத்து பணிய வைக்கிறார். லஞ்சமும் ஊழலும் முதலாளித்துவ சமூக அமைப்பின் ஆணி வேர் என்பதை மறைத்து தனிநபர் சாதிக்கமுடியும் என்கிறார்.
படத்தில் கதை இருக்கிறது. அதுவும் சமூக அவலங்களை சுட்டிக்காட்டுகிறது. சமூக அவலங்களை தீர்ப்பதற்கான மாற்று வழியை சொல்லாமல் சினிமா என்கிற இந்த மக்கள் தொடர்பு சாதனத்தை பயன்படுத்தி சில கோடிகள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் படம் 100 நாள் 200 நாள் ஓடவேண்டும் அதுதான் படத்தின் வெற்றி என்று சொல்லப்படும். நவீன காலத்து வெற்றி அதாவது உலகமய கொள்கையின் வெற்றி என்பது திரைப்படம் வெளியிடப்பட்ட சில நாட்களில் பல கோடி சம்பாதிப்பது என்பது. சினிமா என்கிற மக்கள் தொடர்பு கலையை வியாபாரப் பொருளாக்கி மோசமான முறையில் விற்பனை செய்திருக்கிறார்கள்.
படம் வெளிவருவற்குமுன் மீடியாக்களின் பரபரப்பில் 20 நாள் முதல் 30 நாட்களுக்கான டிக்கட் விற்பனையாகி விட்டது என்று வதந்தி பரப்பப்பட்டது.
முதல் சில தினங்களில் தியேட்டர் வாசலில் அலைமோதியகூட்டம் குறிப்பாக இளைஞர் கூட்டம் ஒரு டிக்கட் 150 முதல் 1500 வரை விலை கொடுத்து வாங்கியதாக தகவல்கள் பத்திரிகையில் வந்துள்ளது. ஒரு பத்திரிகை சிவாஜி தி பாஸ் என்று பெயர் வைத்ததற்கு பதில் சிவாஜி தி பிளாக் என்று வைத்திருக்கலாம் என்று சொன்னது.
சிவாஜி தமிழில்பெயர் வைத்ததற்காக வரிவிலக்கு பெற்றுவிட்டு தியேட்டர் கவுண்டர்களிலேயே போலீஸ் பாதுகாப்புடன் தீர்மானிக்கப்படட கட்டணத்துக்குமேல் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. கறுப்பு பணம், லஞ்சம், ஊழல் ஒழிக்க எடுக்கப்படட படம் நிஜத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களின் வெள்ளைப் பணத்தை பகல் கொள்ளை நடந்தது போல் கறுப்பு பணமாக மாற்றியுள்ளது.
பழைய சினிமா படப் பாடல்களின் சில வரிகளை பாடல் காட்சியாக்கியதும், வடிவேல் பாணி டயலாக்குகளை நுழைத்ததும் மிகப்பெரிய நடிகரின் படத்திற்கு ஏற்பட்ட சரக்கு பஞ்சத்தை பார்க்க முடிகிறது.
அர்த்தம் புரியாத பாடல் காட்சிகள் பிரம்மாண்டமான பலசெலவுகளோடு உருவாக்கப்பட்டுள்ளது.
பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லே என்று வலது கை விரல்களை ஆட்டி பேசும் ரஜினியின் பஞ்ச் டயலாக் இப்படத்தை பார்த்த பின் சமூக அவலங்களை தீர்க்கமக்களுக்கு காட்டும் பாதை இல்லாததால் அதிரவில்லை அதிர்ச்சியளிக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|