Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

நீர் மிடுக்காய் இருக்கிறீரா?
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சம்பவங்கள் நமது தமிழக காவல்துறையின் பராக்கிரமங்களை பறைசாற்றுவதாக அமைந்தது. என்னதான் தமிழக காவல்துறையை நவீனமயப்படுத்த வாகனங்கள், ஆயுதங்கள், புது கட்டடங்கள் கொடுத்தாலும், அவர்களின் காவல் புத்தியில் மண்டிப்போயுள்ள முடைநாற்ற சிந்தனையை மாற்றாமல் எந்த மாற்றமும் வராது. (இந்நேரத்தில் நாயை குளிப்பாட்டி நடுவீட்டில்... என்ற பழமொழி நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல என்பதை அறிக).

Police சம்பவம் ஒன்று, சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு பள்ளி மாணவன் இறந்ததையொட்டி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வெற்றிவேல் என்ற வழக்குரைஞர் முன்னின்று போராட்டம் நடத்திய காரணத்தினால் அங்குள்ள காவல்துறையினர் அவரை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இனிமேல் போராட்டம் செய்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளனர். பொதுப்பிரச்சினையில் மக்களை திரட்டி போராடுவது பெரும் குற்றமாக படிந்துள்ள காவல் புத்தியின் வெளிப்பாடு இந்தத் தாக்குதல் என்பதை மறுக்க முடியாது.

சம்பவம் இரண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமணை பஞ்சாயத்து பி.ஜே.பி. நிர்வாகத்தின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்தில் அங்கு சாக்கடை கட்டிய பஞ்சாயத்து நிர்வாகம் அங்குள்ள கடைகளில் 200, 300 என்று லஞ்சம் கேட்டுள்ளனர். இந்த லஞ்சத்தை அம்பலப்படுத்தி வாலிபர் சங்கத்தின் சார்பில் தட்டி கட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பி.ஜே.பி.யினர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்றனர். தாக்கப்பட்ட சிவகுமார் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார். ஆனால், காவல்துறை புகாரை எடுத்துக்கொள்ள மறுக்கிறது. சாலையில் வாகனங்களை ஓட்டுவோரிடமும், காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருபவரிடமும் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட கைகள் லஞ்சத்திற்கு எதிராக போராடி புகார் கொடுத்தால் வாங்க கை கூசும் தானே?

வாலிபர் சங்கத்தினர் திரண்டு புகார் மனுவை வாங்கவேண்டும் என்று சத்தம் போட்டதும் அருமனை காவல்துறை என்ன செய்தது தெரியுமா? தாக்கியவர்களிடமும் ஒரு புகார் பெற்று இரு தரப்பினர் மீதும் வழககு பதிந்துள்ளனர். ஆக கையூட்டு பெறும் பழக்கத்தில் ஊறித்திளைத்த காவல் புத்தி விகாரமாய் பல் இளிக்கும் சம்பவமாய் இது அமைந்தது.

சம்பவம் மூன்று, நாகை மாவட்டம் எ.புதூர் கிராமம். பல்லாண்டுகளாக தரிசாய் கிடந்த கோயில் நிலத்தில் வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்கள் வீடு கட்ட கொட்டாய்போடுகின்றனர். உடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் தருவதாய் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் மாற்று இடம் பயன்படத்தக்கதாய் இல்லை. வேறு இடம் வேண்டும் எனகோருகின்றனர் உழைப்பாளிகள். அதற்குள் கட்டியிருந்த கொட்டாய்களை பிரித்தெறிய காவல்படையுடன் அதிகாரிகள் வந்து தடியடி நடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தி 40க்கும் மேற்பட்டோரை கைது செய்கின்றனர்.

சம்பவம் இத்தோடு முடிந்து இருப்பின் நாம் கூறும் காவல் புத்தியின் சிறப்பு உலகுக்கு தெரியுமா என்ன?. அதன்பிறகு அங்குள்ள கோயில் நிலத்தை பல்லாண்டு காலம் அனுபவித்துவரும் உயர்சாதியினரின் அடியாட்களை தன்னோடு இணைத்துக் கொண்ட காவல்துறை அந்த இடத்தின் பக்கத்தில் உள்ள புதூர் கிராமத்திற்குள் புகுந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கினர். மோட்டார் சைக்கிள், சைக்கிள், டி.வி., ரேடியோ, சட்டிப்பாணை என்று எதையும் விட்டுவைக்காமல் நாசப்படுத்தினர்.

ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள் போல நில உடமையாளர்களுக்கு சேவகம் புரியும் நோக்கில் அவர்களது அடியாட்களுடன் நரவேட்டை ஆடிய காவல்துறையினர் இச்செய்திகள் பத்திரிகைகளில் வராமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த மூன்று சம்பவங்களும் கூறும் ஒரு உண்மை என்னவெனில், சாதாரணமக்களுக்கு காவல்துறை எப்போதும் நண்பன் இல்லை என்பதுதான்.

பொதுப்பிரச்சினைகள் எழும்போது யாரும் அதில் தலையிடக்கூடாது. நியாயத்தை கேட்க அணிதிரண்டு நின்றால் அவர்களை அடித்து துவைக்க எப்போதும் தயாராய் இருக்கும் நமது மக்களின் நண்பன் தமிழக காவல்துறை கசங்கிய புத்தியுடன் நீர் மிடுக்காய் இருக்கிறீரா? என்று கண்ணாடியில் எழுதி வைத்தால் மிடுக்காய் இருக்க முடியாது.

பணம் கொள்ளை அடிப்பவனுக்கும், ஊழல்வாதிகளுக்கும், பொது நிலத்தை ஏமாற்றி அனுபவிப்பவர்களுக்கும் ஆதரவாய் நின்று பாதிக்கப்பட்டவர்களை அடியாட்கள் போல தாக்குவது மிடுக்கான செயல் அல்ல. அடிப்படையில் காவல்துறையினரின் இந்த அடிபுத்தியை மாற்றாமல் என்ன செய்தாலும் காவல்துறையினர் நமது நண்பனாக மாறமுடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.