கல்விக்கடன்: அறிக்கை விடும் அமைச்சர் உயிரை விடும் அப்பாவிகள்
- கே.எஸ்.கே
கொந்தளிப்புடன் இருக்கிறார்கள் அந்த கிராமத்து ஏழை பெற்றோர்கள். “உங்களைக் கையெடுத்துக் கும்புடுறோம், தயவு செய்து இனிமேல் அவரை அறிக்கைவிட வேண்டாம்னு சொல்லுங்க. அவரோட அறிக்கையால ஒரு அப்பாவியோட உசிரு பறிபோனதுதான் மிச்சம்” என்கிறார்கள் கோபமாக. இந்தக் கோபக்குரலை வெளிப்படுத்துவது, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தைச் சார்ந்த ஜமீன் தத்தனூர் கிராம மக்கள்தான். அறிக்கைவிட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டது மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை.
இந்தியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளைக் கடக்கும் நிலையிலும் இந்தியமக்களில் 65 சதம் பேருக்கு கல்வி இன்றளவும் கனவாக தொடர்கிறது. உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதமான பேர்தான். இத்தகைய சூழலில் கல்விக்கு வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்ற நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பும் வெறும் ஏட்டுச்சுரக்காயாய் உள்ள நிலையில் கல்விக் கடனுக்கு மனுசெய்து உயிர்விடுவது தொடர்கதையாகும்போது அவர்களின் கோபம் நியாயமானதே!
ஜமீன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் சுரேஷ் 2005 ஆம் வருடம் பிளஸ்2 வகுப்பில் 824 மதிப்பெண்களைப் பெற்றான். இந்தக் கிராமமே சந்தோஷப்பட்டது. அதோடு பொறியியல் நுழைவுத்தேர்விலும் வெற்றிபெற்று கவுன்சிலிங்கில் வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் சீட்டும் கிடைத்தது. தந்தை தன்னுடைய சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி தெரிந்தவர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
ஆனால் அதன்பின் கடனை அடைக்க வேண்டிய சூழல், கல்லூரிக்கு மேலும் பணம் கட்டவேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றிற்காக வங்கிக் கடன் கேட்டு தத்தனூர் கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் உள்பட பல வங்கிகளில் மனுகொடுத்துள்ளார். உன்கிட்ட கூரை வீட்டைத் தவிர வேரென்ன இருக்கு கடனை வாங்கிட்டு கட்டாம போயிட்டீன்னா?.. என்ற கேள்விக்கனைகள் தன் மகனின் கல்விக்கனவில் இடியாய் இறங்க தன் உயிரையே மாய்த்துக்கொண்டார். உயிர்குடிக்கும் கல்விக்கொள்ளை அவர் உயிரையும் குடித்து விட்டது. இத்தகைய உயிர்பலி நிமிரவே முடியாத அளவிற்கு வெட்கித் தலைகுனிய இந்தியாவின் தலைமேல் சுமைகளாய் படிகின்றது.
வங்கிகளில் கல்விக் கடன் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தது மட்டும்தான் எளிதாக இருந்தது. ஆனால் கல்விக்கடன் பெறுவது மிக மிக சிறமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சுயநிதி கல்லூரிகளில் நடைபெறும் கல்வி வியாபாரத்தை அரசு கண்டுகொள்ளாததோடு, அந்த வியாபாரம் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் கல்விக்கடன் கொடுக்கப்படுகிறது. வாகனம் வாங்குவதற்கும் வீடுகட்டவும் பெரியபெரிய தொழிற்சாலைக்கும் தேடிப்போய் கடன் கொடுக்கும் வங்கிகள்,கல்விக்கு கடன்கேட்டு ஏழைகள் மனுகொடுத்தால் “கட்டுப்பாடுகள்“ என்றப் பெயரில் ஓடஓட விரட்டுகிறது.
இதற்குக் காரணம் வாகணம் வாங்கக் கடன் கொடுத்தால் விரைவில் வந்துவிடும் என்பதும், திருப்பிக் கட்டவில்லையெனில் வாகணம் போன்ற உடமைப் பொருள்களை பறிமுதல்செய்ய வாய்ப்புள்ளது என்பதும் இத்தகைய கடன்கள் விரைவில் கிடைக்க முக்கிய காரணமாகின்றது. ஆனால் கல்விக்கடன் என்பது விரைவில் திரும்பாத அதேநேரத்தில் பறிமுதல் செய்ய ஏதுமற்ற நிலை உள்ளது. இப்படி வணிக நோக்கோடும் கடுமையான கட்டுப்பாடுகளோடும் அனுகுவதே கல்விக்கடன் குறித்த குறைபாடுகளாக உள்ளது.
இத்தகைய குறைபாடுகளைக் களைய, வங்கிகளில் கல்விக்கடன் வழங்குவதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்குவதும், கல்விக்கடன் வழங்குவதை மத்திய மாநில அரசுகள் கண்கானிப்பதும் அரசு இயந்திரம் உணர வேண்டியது அவசியமாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|