சாதி இருள் விலகும்
நா.கலையரசன்
சங்கம் வளர்த்த மதுரையில்
சமதர்மம் வளர்த்திட வந்தோம்
தன்னலம் கருதா வாலிபர்களின்
சங்கம் இங்கே கூடினது.
பகத்சிங்கின் இறுதி மூச்சை
உள்வாங்கி உரம் பெற்ற தீரர் படை - வீரச்
சந்துரு சிந்திய ரத்தத்தில் விளைந்த
சத்திய வடிவ மிந்தப்படை.
குமாரும் ஆனந்தனும் லீலாவதியும்
உயிர் ஊற்றி வளர்த்த தியாகப்படை
செம்புவும் சோமுவும் தந்திட்ட - கொள்கை
தெம்பில் வளரும் வெண்படை
ஊர் தள்ளி வைத்தவர்க்காய்
உணவைத் தள்ளி வைத்து விட்டு
உண்ணா நோன்பெனும் போர்தொடுக்க
தென்தமிழ்நாடே திரண்டது பார்.
உத்தபுரம் சாதிப்பித்தபுரமாகி
யுத்தபுரமாவதை தடுத்து - இனி
ஒத்தபுரமாக ஊரோடு சேர்ந்து
சுத்தபுரமாக்குதற்கே - தேச
பக்தர்களின் போராட்டம்.
தாண்டப்படாச் சுவர்
தீண்டப்படா மனிதம்
நடக்கப்படாத் தெரு
உடுக்கப்படா ஆடை
தடுக்கப்படாக் கொடுமை
தரப்படாச் சமஉரிமை
ஒடுக்கப்படாச் சாதித்திமிரு
அடக்கிட வேண்டும் நிமிரு.
உத்தபுரத்தைச் சாதி உடுத்தபுரமாக்குவோரே?
சனாதனச் சகதியை சந்தனமென்போரே
யுவபாரதம் எழுகிறது விலகிப்போங்கள்
சாதிப்பறைகளை சலவை செய்து
புதிய பாரதமாய் புதுப்பிப்பதற்காய்
இளைய சூரியன்களாய் எழுந்து வருகிறோம்
சாதி இருள் இனி விலகும் - சம
நீதி நிறைந்து பரவும்.
நா.கலையரசன், மங்களக்குடி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|