கலைத்துப் போட்ட கோலமாய்
ஜி.தேவி
கலைத்துப் போட்ட கோலமாய்
சிதைந்து போய் கிடக்கின்றேன்
புள்ளிகள் வைத்து செதுக்கிய
நட்புக் கோலம் - இன்று
நினைவுகளைப் பொசுக்குகிற
நெருப்புக் கோளம்
உன் கனிந்த சொற்கள் என்னை மீட்டும்
உன் கனல் சொற்கள் என்னை வாட்டும்
நீ அறியாமல் போனாயோ?
சிலைகளை வடித்துப் பார்க்காமல்
சிதைத்துப் பார்க்கும் சிற்பி - நீ
கலைகளுக்கே கண்ணிவெடி வைக்கும் - விசித்திரக்
கலைஞன் - நீ
சினத்தால் - சிட்டுக் குருவியின்
பட்டுச் சிறகை வெட்டி வீழ்த்திய
பட்டாளத்தான் - நீ
சேதங்களைப் பரிசாய் தருகிற
புயல் சின்னமாய் - நீ
உன் வார்த்தைச் சூறாவளி
துவம்சம் செய்த ஓலைக் குடிசையாய் - நான்
ஸ்வரங்களின் வீணையை
ஏன் அடுப்பில் எறிந்தாய்? அனல் காயவா?
உனக்குக் கிடைத்த வசந்தத்திற்கு
ஏன் வடுக்களின் வலி கொடுத்தாய்?
மனதின் ஆழத்தில் என்றும்
ஆறாத ரணங்கள்
பூமியின் ஆழ்துளைக் குழாய்கள் போல்!
உன் மாற்றங்களின் பின்புலனாய் நான்
என் ஏமாற்றங்களின் பின்புலனாய் நீ - அடித்த காற்றில்
சற்றே விலகிய உன்
முகத்திரைக்குள் ஓர் குரூர முகம் கண்டேன்.
வேண்டாம்... உன் முகத்திரையை
நன்றாக மூடிக்கொள் - இன்னும்
யாரேனும் பார்த்துவிடக் கூடும்.
தாயாய் இருப்பாய் என்றிருந்தேன்
‘தாதா’வாய் ஆகிப்போனாய்
உன் துரோகங்களில் என்
குருதி கொதித்துப் போகிறது - என்றாலும்
மௌனமாய்ப் போய்
தனிமையில் அழுகிறேன்
நீ என் நண்பன் என்பதால்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|