வரலாறான புறக்கணிப்பு
சில நேரங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிகழ்வுகள் நடப்பதுண்டு. அப்படித்தான் உலக மனித உரிமை தினமான 2007 டிசம்பர் 10 அன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.
நாள்தோறும் 15 லட்சம் மக்கள் பயணம் செய்யும் அந்த மும்பை புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். நெரிசல் நேரத்தில் ஒரு சதுர மீட்டரில் 17-18 பேர் மூச்சுத் திணறலோடு ஒரு மணி நேரம், ஒற்றைக் காலில் நின்று தவமிருப்பது போல் பயணம் செய்வார்கள். எஞ்சியவர்கள் வெளவால் களாய் படிகளில் தொங்கியபடி பயணம்தான். இத னால், இந்த வழித்தடத்தில் ஆண்டு தோறும் 1000 பேராவது கீழே விழுந்து இறந்து போவது தொடர் கதையாய் இருக்கிறது.
மும்பையின் புறநகரான விரார்-சர்ச்கேட் மார்க்கத்தில் போதிய அளவு ரயில்களை இயக்காமல் மனிதாபிமானமற்ற முறையில் பயணிகளை ரயில்வே நிர்வாகம் நடத்தியதுதான் இத்தனைக்கும் காரணம். இதற்கு தீர்வே இல்லையா? எப்போது இந்த கொடுமை தீரும்? யார் நடவடிக்கை எடுப்பது? மக்களை நேசிக்கும் வாலிபர் சங்கம் அங்கு வந்து நின்றது.
“பயணிகளை விலங்குகளாக நடத்தாதே” என்ற முழக்கத்தை முன்வைத்து 2004 நவம்பர் மாதத்தில் வாலிபர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 20 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். இதனை ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத்திடம் வாலிபர் சங்கம் வழங்கியது.
“பயணம் எங்கள் உரிமை” என்று கூறி 2005 டிசம்பர் 10 அன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிபிஎம் மும்பை கமிட்டி உறுப்பினர் கே.கே.பிரகாசன், வேணுகோபால் உள்ளிட்ட 12 வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் அந்த வழியே சென்ற 3 பெண்கள் உள்பட 18 பேர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் இந்த மிருகத் தாக்குதலையடுத்து கலாச்சார அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அப்பகுதியில் செயல்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவைகளை இணைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் ப்பர்வாஸ் ஆதி கார் அந்தோலன் சமிதி (பாஸ்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் கன் வீனராக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சைலேந்திர கேம்பல் செயல்பட்டார்.
2006 டிசம்பர் 10 அன்று யெச்சூரி கொடியசைத்து துவக்கி வைக்க வாலிபர் சங்கத்தினர் 12 கிலோ மீட்டர் தூரம் கண்டனப் பேரணியை நடத்தினர். மக்களின் மனக் குமுறலையும், கோபாவேசத்தையும், துன்ப துயரத்தையும் ஒருமுகப்படுத்திய வாலிபர் சங்கமும், பாஸ் அமைப்பும் “விரார் பகுதிக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் விட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 10 அன்று ரயில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆதரவளித்தன.
ரயில்கள், பிளாட்பாரங்கள், வீதிகள் தோறும் சென்று 50 லட்சம் துண்டு பிரசுரங்கள் மக்களி டையே விநியோகித்தனர். போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு அலை பெருகியது. போராட்டத்தை சீர்குலைக்க டிசம்பர் 10 அன்று 20 கூடுதல் சர்வீசை இயக்குவதாக நிர்வாகம் அறிவித்தது. பயணத்தில் வாடி வதங்கிக் கந்தலாகிப் போன மக்கள் இதனை ஏற்கவில்லை. சைலேந்திர கேம்பல், பிரகாசன் மற்றும் வாலிபர் சங்க ஊழியர்கள் மீது காவல்துறையினர் அவதூறுப் பிரச்சாரம் செய்தனர். இதற்கும் மக்கள் பலியாகவில்லை.
விடிந்தது டிசம்பர் 10, விரார் - சர்ச்சேட் மார்க்கத்தில், விரார் - தகிசார் இடையே ஓடும் ரயிலில் ஏற காலை 6 மணி முதல் ஒருவர் கூட வரவில்லை. மாலை 6 மணி வரை இதே நிலைமை நீடித்தது. 12 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் மீண்டும் காலியாக, கதவுகள் மூடியபடியே ரயில்கள் ஓடின. அதிர்ந்தது ரயில்வே நிர்வாகம். ஒரு பயணியைக் கூட பார்க்க முடியவில்லை. பயணிகளின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்று கூறி கதவு மூடிய காலி ரயில்களையும், பிளாட்பாரங்களையும் தொடர்ந்து காட்டிப் போராட்டம் வெற்றி என்பதை மின்னணு ஊடகங்கள் படம் பிடித்தன.
டிசம்ர் 10 உலக மனித உரிமை நாளில் ‘பயணம் உங்கள் உரிமை’ என்பதற்கான புறக்கணிப்புப் போராட்டம் புதிய வரலாற்றை ஏற்படுத்தியது.
(தகவல்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தமிழில்: கவாஸ்கர்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|