மழை
முகவை எம்.சிவாஜி
புயல் மழை
இந்தியாவில்
நிகழும் போதெல்லாம்
நித்திரை மறக்கும்
அவலமே நீடிக்கும்.
வரத்து கால்வாய்களின்
வரலாறு
களவாடப்பட்டதால்
வடியும் மழைநீர்
வழிகளில் தேங்கியது.
சிரித்தமுகத்தோடு
சீருடையணிந்து சென்ற
சிறுவரும் சிறுமியரும்
சீரழிந்த பள்ளங்களில்
சிக்குண்டு வீழ்ந்து
அழுத முகத்தோடு
அம்மாவை தேடிவரும்.
மழைநீர்! கழிவுநீரோடு
காதல் கொண்டு
கர்ப்பம் தரித்து
பிரசவித்த கொசுக்கள்
சிக்குன்-குனியா,டெங்கு-என
இங்கு தரும்.
மாண்டவரை
மீண்டும் எழுப்பும்
மருத்துவமோ
மரியாதை இழக்கும்
தனியாரிடம்
தலைவலியானால்கூட
படம் எடுத்து
பாட்டிலில் நீரெடுத்து
பரிசோதனை
படமாய்(பணமாய்) நடக்கும்!
அரசு மனையோ அலட்சியம்!
தொட்டுப்பார்க்காமல்-நோய்பற்றி
கேட்டுப்பார்க்காமல்
கிறுக்கி எழுதி
க்யூவைக் (வரிசை) குறைக்கும் !!
எத்தனையோ இலவசங்கள்
அரசின் திட்டங்களானாலும்
அரசுப்பேருந்தில்
பயணம் செய்யும்
அனைவருக்கும்
ஆளுக்கொரு குடை
அவசரமாய் வழங்குமா-என
“அவா“ பெருகும்.
பேய் மழை பெய்ததில்
ஏழைகள் இருப்பிடம்
இற்று இடிந்தது!
மகிழ்ச்சி மருந்துக்கு கூட
இல்லாமல்
மனம் நொந்தனர்!
வெள்ளம் சூழ்ந்த பகுதியை
எல்லாம் இழந்த
மக்களை பார்த்திடா
பாதிப்பிலிருந்து தேற்றிட!
மந்திரிகள் வருவதாய்...
மக்கள் பிரதிநிதிகளோடு
மாவட்ட அதிகாரிகள்
நிவாரணம் தருவதாய்...
பக்கம் பக்கமாய்
விளம்பரங்கள்
பகட்டான அறிவிப்புகள்.
மழை நீரால் பாதித்து
நிவாரணம் பெற வந்தவர்க்கோ
விழி நீரே நிரந்தரமானது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|