கிரன்மா பயணம்
கவிவர்மன்
(சே குவேராவின் வரலாறு கவிதையில்)
கியூபாவில்
அந்த சிறு தீக்குச்சிகள்
இருட்டைக்கிழித்து
எரிய ஆரம்பித்தது.
லத்தின் அமெரிக்காவை
வளைத்துக்கொண்டிருக்கும்
அனகோண்டாக்களை
அறுத்தெரிய...
உடலை
ரணமாக்கித்
திடமாக்கினார்கள்
முக்கிய பொறுப்புக்களில்
பிடலின் நம்பிக்கை
நாயகனாக குவேரா.
பிடல் - குவேரா
விரல் நீட்டும் திசையில்தான்
வெளிச்சம் வரப்போவதாக
மக்கள் உறுதிகொண்டனர்.
நவம்பர்-25
கியுபாவின் கிழக்கு
கடற்கரை நோக்கி
கிரன்மா கிளம்பியது.
1956 ல்
“விடுதலை அல்லது வீரமரணம்“
என்ற
பிடலின் முழக்கத்தை
நிஜமாக்க வேண்டும்
என்ற வேட்கையோடு....
20 பேரை மட்டுமே
ஏற்றக்கூடிய அந்த
உல்லாசப் படகு
82 பேரை சுமந்து கொண்டு
கியூபாவின்
வரலாற்றைத் தீர்மானிக்கப்
புறப்பட்டது.
மிகச்சிறிய-எளிதாக
கவிழக்கூடிய
தொலைவற்ற பயணங்களுக்கு
மட்டுமே சாத்தியமான
ஒத்திகையாய் கூட
பொறுத்தமற்ற
என்றாலும்...
டாங்கி எதிர்ப்பு பீரங்கி
தொலை நோக்கி பொருத்திய
துப்பாக்கிகள், தோட்டாக்கள்.
உணவு - குடி நீர்.
82 கொரில்லாக்கள்
கூடவே அவர்களின் நம்பிக்கை
பயணக்குழு மருத்துவராக
சே.
பலகீனங்களை மறந்து
பயமற்று மிதந்தது
கிரன்மா.
முதலில் மிரட்டிய கடல்
புரட்சிக்காரர்களைக் கரைசேர்க்க
அமைதியாகித் தன் ஆதரவைத் தந்தது.
ஆனாலும் கொரில்லாக்களுக்கு
சோதனை தொடங்கியது.
சிலருக்கு கடல் குமட்டல்
சே விற்கு ஆஸ்துமா.
மெதுவாக ஊர்ந்த கிரன்மா.
திட்டமிட்ட நேரம்
தீர்ந்து கொண்டே போனது.
புதர்கள் நிறைந்த
சதுப்பு நிலத்தில்
கிரன்மா தரைதட்டி தடுமாறியது.
நெடுநேரம் போராடினார்கள்.
கலகக்காரர்களைக்
கண்காணித்த பாடிஸ்டா அரசு
சுதாரித்தது.
புரட்சிக்காரர்களை
துப்பாக்கி ரவைகள்
துரத்தியது.
எதிரிப்படையின் எந்திரத் தோட்டா
சேவின் கழுத்தின் ஓரத்தை
காயப்படுத்திச் சென்றது.
மரணம்
முதலாவதாக குவேராவை
உரசிச்சென்றது.
அப்போதுதான்
நிக்குவெரோ கரும்பு வயலில்
சேவின் கரங்கள்
முதன்முறையாக
துப்பாக்கியேந்தியது.
தாக்கு பிடிக்கமுடியாத
தாக்குதல்.
நிராயுதபாணிகளாக
புரட்சிப்படை.
சிக்கிகொண்ட சிலர்
கியூபப்புரட்சியின்
முதல் தியாகிகள் நாங்களாகட்டும்
சுடுங்களென்று......
வீரமரணத்தை ஏற்றுக் கொண்டார்கள்
எஞ்சியவர்கள்
சிறுகுழுக்களாய் சிதறினார்கள்
புரட்சியாளர்கள்
பதுங்கிக்கொள்வதில் முடிந்தது.
கிரன்மா யுத்தம்.
சே மற்றும் நான்கு தோழர்கள்
பழமையான ஆயுதங்கள்
யாரேனும்
உயிரோடிருந்தால் சந்திக்கவும்.
ராணுவத்தின்
புதிய தாக்குதல்களை தவிர்க்கவும்
மிக உயர்ந்த மலையான
ஸியாராமீஸ்ட்ராவை
நோக்கி நடந்தனர்.
பசி, சோர்வு, நம்பிக்கையின்மை
துயரம் நிறைந்த 16 நாட்களுக்குப் பிறகு
கிழக்கு மலை அடிவாரத்தில்
காஸ்ட்ரோ - ரால்காஸ்ட்ரோ
உயிரோடிருந்ததோழர்களோடு
இணைந்தனர்.
சிறு குழுவிற்கு
“வெற்றி நிச்சயம்“ என்ற
பிடலின் உறுதி,
உள்ளுர் விவசாயிகளின் உதவி
இழந்த நம்பிக்கையை
இட்டு நிரப்பியது.
அவமானங்களும்...!
சோர்வுகளும்....!
பசியும்...நம் நெருப்பை
அணைத்துவிடாது தோழர்களே...!
இது குறைவு.
நம் நெஞ்சங்கள் ஏற்கவேண்டிய
தோட்டாக்கள்....
நாம் சிந்த வேண்டிய
ரத்தங்கள்...!
நாம் இழக்கவேண்டிய
தோழர்கள்...!
இவைகளை
வெற்றியின் இறுதி நாளில்
யாரேனும் உயிரோடிருந்தால்
பட்டியலிடுவோம் தோழர்களே...!
இறுதிப்போரில்
நம் வெற்றியை கொண்டாட
மக்கள் இருக்கிறார்கள் என்று
மகிழ்வோம்.
காஸ்ட்ரோவின் கண்கள்
சிவந்தது.
கொரில்லாக்கள்
புதுவீரம் பெற்று
அடுத்த திட்டத்திற்கு
ஆயத்தமானார்கள்.
“அசாத்திய துணிச்சல்காரன்
காஸ்ட்ரோ!
தனக்குச் சமமானவனை
சந்தித்துவிட்டேன்”
குவேராவின் உதடுகள்
முணுமுணுத்தது.
-புயலின் பயணம் தொடரும்....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|