வாக்குமூலம்
ஆர்.நீலா
பொதுவாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் “அவர்கள் செய்த குற்றங்களை உணர்ந்து திருந்துவதற்காகத் தான்’’. ஆனால், குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காவல்துறையும் ஒரு காரணம். விருப்ப ஓய்வு பெற்ற இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி ஒரு புத்தகத்தில் சொன்னதுபோல், “பெரும்பலான சமூக விரோதிகள், காவல்துறையின் அடக்குமுறையினாலேயே உருவாகின்றனர்’’. இது ஒரு வகையில் உண்மையே.
நாடு முழுவதும் ஏராளமான சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் குற்றமற்றவர்கள்தான் உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அப்படிப் பட்ட குற்றமற்ற ஒருவரின் உண்மைக் கதைதான் இது.
என் பேரு சந்தோஷ்குமாருங்க.. வயசு இருபத் தொண்ணு... ஊரு கோயம்புத்தூருக்குப் பக்கம்..அப்பா ஒரு கம்பெனில மேனேஜரா இருந்தாரு... அம்மா ரொம்பப் படிக்காதவங்க... ஹவுஸ் ஒய்ப்... சொந்தவீடு, நிலபுலன்கள் எல்லாம் இருந்தது... அம்மாதான் எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டாங்க... நான் ஒரே புள்ளங்க... அம்மாவும், அப்பாவும் என்னை அன்பைக்கொட்டி வளத்தாங்க... எனக்கும் அப்பா, அம்மா, மாமா, மாமாவோட ரெண்டு பசங்கன்னு எல்லாரையும் புடிக்கும்...
எங்க வீட்டுக்கும் மாமா வீட்டுக்கும் ரெண்டு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும்...
லீவு நாட்கள்லே மாமா பையனுங்க எங்க வீட்டுக்கோ இல் லேன்னா நான் அவுங்க வீட்டுக்கோ போயிருவோம்... நாள் முழுக்க கொண்டாட்டம்தான்... நான் பி.காம் படிச்சுக்கிட்டே ஈவ்னிங் கம்ப் யூட்டர் கிளாசுக்கும் போவேன்... காலேஜூலேயும் எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ்... வகுப்பிலேயும் நான் நல்லாப் படிச்சதாலே என் புரொபசர்ஸ் எல்லாம் ரொம்ப ப்ரண்ட்லியா பழகுவாங்க.. இப்படி சந்தோசமாப் போயிக்கிட்டிருந்த என் வாழ்க்கை ஒரேயொரு சம்பவத்தால திசைமாறிப் போயிட்டது!
அப்பாவுக்கு லேசான குடிப்பழக்கம் உண்டு. போகப் போக இந்தப் பழக்கம் அதிகரித்தது. அதனாலே அம்மா, அப்பாவோடு அடிக்கடி சண்டை போட ஆரம்பிச்சாங்க... மாமாவும் வந்து அப்பப்ப புத்திமதியெல்லாம் சொல்லிப் பார்த்தார்.. அப்பா அப்போதைக்குத் தலையாட்டுவார்... ரெண்டே நாளே மறுபடியும் குடிச்சிட்டுத்தான் வருவார்... அம்மாவும் சளைக்காமல் சண்டை போடுவாங்க... சண்டையின் உச்சகட்டத்தில் அம்மாவை அப்பா அடிக்கவும் ஆரம்பிச்சாரு... கொஞ்சம் கொஞ்சமா வீடு நிம்மதி இழக்க ஆரம்பிச்சது.
நான் கம்ப்யூட்டர் கிளாஸ் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகும்போது அம்மாவை அப்பா அரட்டிக்கொண்டோ, திட்டிக்கொண்டோ இல்லேனா அம்மா அடிவாங்கி அழுது கொண்டோ இருப்பாங்க.. .
மாமாவையும் அவர் மரியாதைக்குறைவா நடத்தறதாலே அவரும் ரொம்ப வர்றதில்ல... பசங்களையும் வரவிடுறதில்லே... அதனால அப்பா எங்க எல்லோருடைய பிரியத்தையும் இழந்துகிட்டிருந்தார்.
எனக்கோ அப்பாவைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் இல்ல. அதனால கம்ப்யூட்டர் கிளாசுல ரொம்ப நேரத்தப் போக்கிட்டு எல்லா அமளியும் ஓஞ்ச பின்னாடியே வீட்டுக்குப் போவேன்...
நல்லா இருந்த அப்பா எப்படி இந்தளவுக்கு மாறினாருன்றதும் எனக்குப் புரியாத புதிராத்தான் இருந்தது. அம்மாவைக் கேட்டா அவங்களுக்கும் பதில் தெரியல.... எனக்கு அப்பாவோட குடிப்பழக்கதைவிடவும், அப்பாவி அம்மாவை இப்படித் துன்புறுத்துறாரேன்னுதான் ரொம்பக் கவலையா இருந்தது. அதனால நானும், அம்மாவுக்குத் தெரியாம கண்ணீர் வடிக்கத்தான் முடிஞ்சது...
ஒருநாள் நைட் ஒன்பது மணியிருக்கும்.. கம்ப்யூட்டர் கிளாசு முடிச்சிட்டு நானும் ப்ரண்ட்ஸ்களும் அரட்டையடிச்சுகிட்டே பஸ் ஸ்டாப்க்கு வந்துகிட்டிருந்தோம்... அம்மாக்கிட்டேருந்து போன் வந்தது... “அப்பாவுக்கு முடியல... உடனே வான்னு’’ கதறினாங்க.. நான் ப்ரண்ட்சுங்ககிட்டே விபரத்தைச் சொல்லிட்டு கிடைச்ச பஸ்ஸப் பிடிச்சு வீடு வந்து பார்த்தா... அய்யோ... அத நான் எப்படிச் சொல்வேன்?
அப்பா வழக்கம் போல குடிவெறில அம்மாவை அடிக்க, அம்மா அடிபொறுக்க முடியாம அப்பாவத் தள்ள தேங்காய் உரிக்கர ஈட்டி முனையில அப்பா விழுந்திருக்காரு... கழுத்துக்கிட்ட நல்ல காயம்... ரத்தம் பெருகினதும் அம்மா பயந்து போயி எனக்குப் போன் பண்ணியிருக்காங்க... நான் வருவதற்குள் ரத்தப்போக்கை நிறுத்த தனக்குத் தெரிஞ்ச முயற்சியெல்லாம் பண்ணிருக்காங்க... உடனே தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்... ஒண்ணும் பலனில்லாம அப்பா செத்துட்டாரு... எங்க ரெண்டு பேரையும் போலீசு அரஸ்ட் பண்ணிருச்சு... இதில எனக்கு எந்தச் சம்மந்தமும் இல்லன்னு, நானும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் போலீசில கேக்க மாட்டேன்னுட்டாங்க...
மாமா வக்கீல் வச்சு வாதாடினாரு... அந்த வக்கீலும் ஆரம்பத்திலே நம்பிக்கையாத்தான் சொன்னாரு... தற்காப்பு முயற்சியில நடந்த விபத்துங்கரதால ரெண்டு பேரையும் விடுதலை செஞ்சுடுவாங்கனு சொல்லி நம்பவைச்சாறு. ஆனா, ஏழுவருஷ தண்டணை கொடுத்திருக்காங்க... இப்போ வக்கீல் சொல்றாரு... “போலீஸ் செஞ்ச சதி இது... நீயும் சேந்து செஞ்சதாச் சொன்னாத்தான் கேசு நிக்குங்கறதாலே இப்படிப் பண்ணீட்டாங்க’’ன்னு அசால்ட்டா சொல்றாரு...
ஆனா, அப்பாவுக்கு தீவிர குடிப்பழக்கம் இருக்குங்கறத இந்தக் கேசுல பெரிசா எடுத்துக்கவேயில்ல... குடிச்சிட்டு அம்மாவைக் கொடுமைப்படுத்தினதைப் பாத்த சாட்சிகளை விசாரிக்கவேயில்லே... சம்பவம் நடந்தப்போ என்னோட இருந்த ப்ரண்ட்ஸ் ‘அவன் அங்கே சம்பவ இடத்தில இல்லை’ங்கற விபரத்தைச் சொல்ல வந்தப்ப அதையும் வேணான்னுட்டாங்க...
அதனால, இப்ப சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டிருக்கோம்.. அங்க எனக்கு நியாயம் கிடைக்கும்னு நம்புறேன்... இப்ப இங்க வந்து ரெண்டு வருஷமாச்சு... ஆனந்தமான அந்தப் பள்ளிப் பருவ நாளெல்லாம் அப்பப்போ கனவுல வருது... அதெல்லாம் என் வாழ்க்கையில தான் நடந்ததான்னு சந்தேகமா இருக்கு...
எனக்கு இப்பவும் விடுதலையாகி வெளியே வர்ரதல கொஞ்சமும் சந்தோசமில்லை... வந்தா அப்பாவப் பாக்க முடியுமா? பழைய சந்தோசமான அம்மாவத்தான் பாக்க முடியுமா? வாழ் நாளெல்லாம் என்னையும் என் அம்மாவையும் இந்த பழிச்சொல் துரத்தப் போகுது.. அந்தப் பழியை துடைக்கத்தான் நான் சுப்ரீம் கோர்ட்லே கேஸ் போட்டிருக்கேன்... வேறொன்னுக்கும் இல்ல...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|