தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறைகூவல்
தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக தீண்டாமை கொடுமைக்கு எதிராக, சமூக நீதிக்காக பெரியார் தொடங்கி பல்வேறு இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும் போராடி வருகின்றன. நாற்பதாண்டு காலம் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிகள் செய்தும் தமிழக மண்ணில் பல வகையான தீண்டாமை கொடுமைகள் நீடிக்கின்றன.
இச்சூழலில் 2002 ஆகஸ்ட் மாதம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பை தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், தலித் இயக்கங்கள் என பல அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாகியுள்ளன. இவ்வமைப்பு கடந்த 5 மாதங்களில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வேகமான செயல்களில் இறங்கியிருப்பதை சமூக நீதி ஆதரவாளர்கள் வரவேற்கின்றனர்.
விருதுநகரில் இருஞ்சிறை, மதுரை மாவட்டத்தில் வடிவேல் கரை ஆகிய கிராமங்களில் நிகழ்ந்த வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியுள்ளது. ஜனவரி 5 அன்று தீண்டாமை எதிர்ப்புக் கலைஇரவு, ஆலய நுழைவுப் போராட்டங்களில் சி.பி.ஐ.(எம்) உடன் இணைந்து இயக்கங்களை நடத்தி வருகிறது.
வரும் காலங்களில்:
மதுரை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகளை ஆதாரங்களை கண்டறிந்து அதற்கெதிரான இயக்கத்தை 2008 மார்ச்க்குள் நடத்துவது.
விழுப்புரத்தில் “பொது விசாரணையை’’ மக்கள் பங்கேற்புடன் நடத்துவது.
தலித் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான ஒதுக்கீடு செயலாக்கத்தை முறைப்படுத்தக் கோரி சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது.
தலித் உரிமை போராளிகளுக்கு பயிற்சி நடத்துவது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக அனுஷ்டிப்பது.
மாவட்ட அளவில் முன்னணியை அமைப்பது.
இம்முன்னணியில் அமைப்பாளரும், தூய்மைப்பணியாளர் நலவாரிய உறுப்பினருமான பி.சம்பத் செயல்படுகிறார். இம்முன்னணி இது வரையில் 5 மாதங்களுக்கான திட்டத்தோடு இலக்கை நோக்கி முன்னேற, நாமும் ஒருங்கிணைவோம். தீண்டாமை ஒழிப்பு என்பது ஒரு ஜனநாயகக் கடமை என்ற உணர்வோடு போராடுவோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|