உத்தப்புரம் நீதி கேட்டு உண்ணாவிரதம்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா உத்தபுரத்தில் கடந்த 19 ஆண்டுகளாக சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடாய் தீண்டாமைச் சுவரை எழுப்பி தலித் மக்களை ஊரின் ஒரு பகுதிக்குள் நுழைய விடாமல் ஆதிக்க சக்திகள் தங்களின் கொடுங்கரங்களால் தடுத்து நிறுத்தினர். இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக, தலித் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்ல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 12 வது தமிழ் மாநில மாநாடு தீர்மானித்தது. தீண்டாமைக்கு தீயிட இளைஞர்கள் ஒன்றிணைவோம் என்ற மகத்தான முழக்கத்தோடு உண்ணாவிரத ஏற்பாடுகள் தென் மாவட்டமெங்கும் எழுச்சிகரமாய் கொண்டு செல்லப்பட்டது.
டிசம்பர் 5ஆம் தேதி நடத்துவது என அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம் அரசின் கொடூர சூழ்ச்சி வலைகளால் சில சாதிய சக்திகளின் பெயரால் வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அதற்கெதிராக அரசின் நடவடிக்கை என்ற பெயரில் இ.கோட்டைப்பட்டியில் தேவையற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தி 20 வயது நிரம்பிய தலித் இளைஞன் சுரேஷை அநியாயமாக கொன்றது தமிழக அரசின் காவல்துறை. தலித் மக்கள் போராடும் போதெல்லம் துப்பாக்கி, உருட்டுக் கட்டைகளை கொண்டு தாக்குவதையே கொள்கையாக கொண்ட ஆதிக்க சாதிகளின் வன்முறையின் மறுவடிவமாக காவல்-துறையும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு முன்னிலும் கொடூரமான வன்முறையை ஏவிவிடுகிறது. ரெட்டணை, அ.புத்துர் என துவங்கி இன்று கோட்டைப்பட்டியில் தலித் இளைஞனின் கொடூர கொலை வரை நீள்கிறது. இச்சூழலில் அப்பகுதியில் ஏற்பட்ட சமூக பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தை தள்ளி வைப்பதென முடிவு செய்து நவம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தேதி மாற்றப்பட்ட போதும் வீரியம் மாறாமல் இளைஞர்கள் சாதியக் கொடுமைக்கு முடிவு கட்ட திரளாக திரண்டனர். எழுச்சிகரமாய் துவங்கியது உண்ணாவிரதம். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் எஸ்.ஜி.-ரமேஷ்பாபு தலைமை தாங்க, மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் முன்னிலை வகிக்க வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தீண்டாமைத் தீயை அணைத்திட உறுதியான போராட்டங்களுக்கு தொடர்ந்து நடத்துவோம், சாதிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம். இளைஞர் படை திரளட்டும் என வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து உரையாற்றினார். வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலா நன்றியுரை கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|