வீர அஞ்சலி
தேசம் வளர்கிறது, ஒளிர்கிறது, வல்லரசாகிவிட்டோம் என்ற வார்த்தைகளோடு விவரம் புரியாத குறுக்குநெடுக்குக் கோடுகளோடு படங்களைப் போட்டு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து நமது ஆட்சியாளர்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது. அந்த தேசத்தில் வாழ்கிற சாதாரண மக்களின் வாழ்க்கையின் நிலையைக் கொண்டே கணக்கிடப்படவேண்டும். ஆனால், நமது நாட்டின் முதலாளிகளின் சிறு வீழ்ச்சியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களுக்குச் சலுகைகளை அறிவித்துவிட்டு, சாதாரண மக்களை ரோட்டில் தவிக்க விடுகிற ஆட்சியால் தேசம் ஒளிர்கிறது என்ற வார்த்தையைச் சொல்ல அருகதையில்லை.
சாதாரண மக்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாய் மாறியுள்ளது. வாழ்க்கைத் தரத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நவம்வர் 26ஆம் தேதியன்று, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இதை நிரூபித்துள்ளது. அன்பு என்கின்ற வார்த்தையை போதிக்கிற அனைத்து மதங்களும் வெடிகுண்டுகளை கையில் ஏந்தி அலைவது, உலகமயச் சூழலோடு இணைந்தது என்ற புரிதல் கூடுதலாகத் தேவைப்படுகிற காலம் இது.
மும்பையில் வெடித்த குண்டுகள், சிதறிய தோட்டக்கள் அப்பாவி மக்களின் உயிர்களைக் குடித்தக் காட்சி ஊடகங்கள் மூலமாக இந்த தேசத்தின் ஆன்மாவை உலுக்கியது. மும்பை ரயில் நிலையத்திலும், பல பொது இடங்களிலும் எதற்காக மரணமடைகிறோம் என்று கூட அறியாமல், மாண்டுபோன மக்கள் சாதாரண மக்களே. மும்பை மாநகரத்தின் காவல்துறையும், நமது நாட்டு உளவு அமைப்பும் தோல்வியடைந்த சம்பவம் இது என்று கூறுகிறார்கள். இது உண்மையின் ஒரு பகுதி என்றாலும், இதற்கு மற்றொருபுறம் உள்ளது.
மலேகாவில் இந்து மதவெறியர்களின் குண்டும், மும்பையில் இஸ்லாமிய மதவெறியர்களின் குண்டும் வெடித்தபோது, அந்த குண்டுகளுக்கு மதம் ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்தன. இத்தகைய குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் அவசியமான பணியாகும். ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளையும், வேரோடும், வேறடி மண்ணோடும் களையப்பட வேண்டும் என்றால் சமூக முன்னேற்றத்தோடு கூடிய அமைதியான சூழலே இன்று அவசியத் தேவை.
வாழ்வியல் நெருக்கடி, வேலையின்மை, வறுமை, எதிலும் நம்பிக்கையற்ற தன்மை, ஒரு தனி மனிதனை எந்த எல்லைக்கும் தள்ளும் என்பதன் வெளிப்பாடுதான் மனித குண்டுகளாக அவர்கள் மாறுவது. இதை மதவெறி சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அதன் விளைவுதான் ஒவ்வொரு மதமும் மற்றொரு மதத்திற்கு எதிராக வெறியூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தன் மதத்தைச் சேர்ந்த மக்களை ஒன்றுதிரட்ட முயற்சிக்கின்றன.
ஆக, சமூகத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படுகின்றபோது, மதவெறி சக்திகள் தனிமைப்படுத்தப்படும் என்பது வரலாற்று உண்மை. அத்தகைய உண்மையான வளர்ச்சிக்காக நமது தேச மக்களை அணி திரட்டுவது ஜனநாயகக் கடமையாகும். இறுதியாக மும்பைத் தாக்குதலில் விரல்விட்டு எண்ணக் கூடிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டபோது, தங்கள் உயிரை துச்சமென மதித்து, அந்த மக்களைப் பாதுகாத்த காவல் படை வீரர்களுக்கு இந்த தேசம் தனது அன்பை வெளிப்படுத்துகிறது. மக்களைப் பாதுகாக்கும் போது மாண்டுபோன வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துவது நமது கடமையாகும்.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|