Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2007

போதைப் பழக்கம் எய்ட்ஸ்
( பொதுமக்களின் சமூக பொறுப்புணர்வு )
வாஸந்தி

1986ல் முதன்முதலில் தமிழ்நாட்டில் டாக்டர் சுனிதி சாலமன், எய்ட்ஸ் என்னும் பயங்கர நோய் இந்தியாவைத் தாக்கியிருப்பதாக அறிவித்த போது, அதை யாரும் சட்டை செய்யவில்லை. இந்தியாவுக்கு எய்ட்ஸ் வருவது சாத்தியமில்லை என்ற எண்ணம்கூடப் பரவலாக இருந்தது. இந்த மெத்தனப் போக்கினாலேயே 87 இன் ஆரம்பம் வரை ரத்ததானம் கொடுப்பவர்களின் ரத்தத்தை எய்ட்ஸ் நோயின் அறிகுறிக்கான (HIV Positive) பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. எய்ட்ஸ் நோய் வக்ரமான பால் இயல் வழக்கங்கள் கொண்ட கட்டுப்பாடற்ற மேற்கத்திய சமூகங்களில் தான் இருக்கும் என்ற ஒரு ஆச்சர்யமான மேம்போக்கு இருந்தது.

இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் 17,200 பேர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிக்கப்பட்ட கேசுக்கும் 100 கண்டுபிடிக்கப்படாத கேசுகள் இருக்கும் என்கிறார்கள். இதில் தீவிர முனைப்புடன் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் டாக்டர் சுனிதி சாலமன் இந்தியா முழுவதிலும் 13 லட்சம் பேர்களுக்கு எய்ட்ஸ் இருக்கலாம் என்று கணித்திருக்கிறார். எய்ட்ஸ் நோய் பரவிவரும் துரிதம் இந்திய டாக்டர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது.

இந்தியர்கள் செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பெட்டிகள் போதை பழக்கங்களுக்குப் பரவலாக அடிமையாகாதவர்கள் என்கிற நினைப்புப் பொய்யானது என்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. அது மட்டுமல்ல, எய்ட்ஸ் நோய் என்பது என்ன, அது எத்தனை பயங்கரமானது, அது வந்தால் மரணத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்கிற விஷயமெல்லாம் பாமர ஜனங்களுக்குத் தெரியாததாலேயே அதிக துரிதமாக எய்ட்ஸ் நோய் பரவுகிறது என்றும் தெரியவந்திருக்கிறது.

World AIDS Day எய்ட்ஸின் பயங்கரம் தெரியாதது போலவே அந்தப் பயங்கரத்திலிருந்து தப்புவதற்கு வழிகள் இருக்கின்றன என்பதும் மக்களுக்குத் தெரிவதில்லை. முக்கியமாக இளைஞர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் இளங்கன்று பயமறியாது என்கிற காரணத்தாலோ என்னவோ, தற்காப்பு முயற்சிகள் எடுக்க சோம்பி, துணிச்சல் என்கிற அசட்டுத்தனத்தால் மேற்கொள்ளும் பழக்கங்களினால் நோய் தொத்திக் கொள்கிறது. மரணம் வாசலைத் தட்டிய பிறகுதான் உலுக்கப்பட்டது போய் விழிப்பு ஏற்படுகிறது. மரணத்தின் வாயிலில் ஞானோதயம் ஏற்பட்டு என்ன லாபம்?

ஏனென்றால் எய்ட்ஸ் என்பதே எமன். உலக வரலாற்றிலேயே இந்த நோயைப் போல வேறெந்த நோயும் மனிதகுலத்தை இந்த அளவுக்கு உலுக்கி நூற்றுக்கணக்கான அரசுகளையும், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளையும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது போன்ற ஒரு போராட்டத்தில் ஈடுபடுத்தியதில்லை.

மற்ற நோய்களெல்லாம் மனிதன் அறியாமல் செய்கிற தவறுகளின் காரணமாக, கெட்டுப் போன உணவுகளைச் சாப்பிட்டதன் காரணமாக மாசமடைந்த நீரைக் குடித்ததன் காரணமாக, கிருமிகள் உடலுக்குள் திருட்டுத்தனமாக உட்புகுந்து விட்டதன் காரணமாக வருபவை அல்லது பிறப்பிலேயே இருக்கும் சில கோளாறுகளால் வருபவை.

ஆனால், மனிதன் தெரிந்தே செய்கிற தவறுகள், வக்கிரமான செக்ஸ், பலரிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது, மருந்தூசி போட்டுக் கொள்வது ஆகியவற்றால் எய்ட்ஸ் நோய் தாக்குகிறது. தவிர, ரத்தமேற்றுதல் போன்ற தவிர்க்க முடியாத செயல்களும் எய்ட்ஸ் நோய் பரவுவதற்குக் காரணமாய்ப் போகிறது.

21 ஆம் நூற்றாண்டில் காலடி வைக்கும் தருணத்தில் இப்படி ஒரு ராட்சஸ நோய் தாக்கியிருப்பது பல விதங்களில் நமக்கு ஒரு எச்சரிக்கை. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று நமது முன்னோர்கள் பாடியது வெறும் பக்திப் பரவசத்தினால் ஏற்பட்டதல்ல. உண்மையிலேயே மிக அற்புதமான சக்திவாய்ந்த உயர்ந்த பிறவி மனிதனுடைய அந்த உடலை சாதனமாக வைத்து மனிதன் தனது அறிவால் மிகப்பெரிய சாதனைகள் புரியலாம்.

அந்த உடலைத் துச்சமாக நினைத்து அதை துஷ்பிரயோகம் செய்தால், கண நேர இன்பத்துக்காக, காலனை வரவழைக்கும் செயல்களில் ஈடுபட்டால் அறிவாற்றல் இருந்தும் ஏதும் பயனில்லை. இப்போது எய்ட்ஸ் நோயை எதிர்க்க மனிதனின் அறிவாற்றலே பயன்படுகிறது என்பதும் உண்மை. புத்தி கெட்ட மனிதர்களின் செயல்களால் கிளப்பப்பட்ட பூதத்தை அடக்க புத்தியுள்ளவர்கள் தங்கள் அறிவை உபயோகித்து புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகிறார்கள்.

இந்த நோய் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்குமானால் மனித இனம் போதிய அறிவாற்றலும் ஆயுதங்களும் இல்லாத நிலையில் ஒரு மாபெரும் அழிவுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியிருக்கும். எய்ட்ஸ் நோய் ஒரு மனித ரெட்ரோ வைரசினால் ஏற்படுகிறது என்பதை இது போன்ற ஒருநோய் இருப்பதாகத் தெரிய வந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள். நோயுண்டாகும் காரணங்கள் நோயறியும் முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகள் வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த வைரஸ் கிருமிகள் உடலுக்குள் புகுந்து படையெடுக்கிறபோது அவற்றிற்கு எதிரிகளான கிருமிக்கொல்லிகளை (Anti bodies) உருவாக்கி கிருமிகளைக் கொன்று உடலை நோய் தாக்காமல் பாதுகாக்கிற நோயெதிர்ப்பு அமைப்பில் (Immune System) ஒரு கோளாறு ஏற்படுவதால், உடல் தற்காப்பிழந்து விடுகிறது. இதனால் வேறு நோய்கள் தாக்கும்போது எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் போய் விடுகிறது. எய்ட்ஸ் வைரஸ்கள் மூளைக்குள்ளும் படையெடுத்து நரம்புச் செயல் முறைகளைச் சிதைக்க முடியும். இந்த வைரஸ்களைப் பல்வேறு பெயர்களால் அழைத்தாலும் HIV Human Immune Deficiency Viruss என்ற பெயர் பரவலாக எல்லோராலும் அறியப்படுவது.

World AIDS Day தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பரவிவரும் வேகத்தை கண்டு டாக்டர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். 1986இல் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 HIV Positive கேஸ்கள் வந்ததாகவும் இப்போது ஒரு நாளைக்கு இரண்டு வருவதாகவும் சுனிதி சென்ற ஆண்டு தெரிவித்தார். தமிழ்நாட்டில் 2 லட்சம் HIV Positive கேஸ்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எய்ட்ஸ் வராமல் தடுக்கக்கூடிய வாக்ஸின் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியுமா? ஒழுக்கமான வாழ்க்கை எய்ட்ஸ் நோயை ஓரளவுக்குத் தடுக்க முடியும். அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் கண்டவர்களில் முக்கால் வாசிப்பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பதும், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளினால் போதை மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்பவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மிக அதிகமாக எய்ட்ஸ் பரவியிருப்பது மகாராஷ்டிரத்தில் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக வருவது தமிழ்நாடு. 75 சதவீதம் HIV Positive செக்ஸ் மூலம், 15 லிருந்து 18 சதவீதம் ரத்தம் ஏற்றலின் மூலம், 6 சதவீதம் போதை ஊசியின் மூலம் பரவுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். மாணவர்கள் (மாஃபின்) போதையை ஊசி மூலம் செலுத்திக் கொள்கிறார்கள். போதைக்கு மட்டும் அவர்கள் அடிமையாகுவதில்லை. எய்ட்ஸ் வைரசுக்கும் ஆளாகிறார்கள் என்கிறார் டாக்டர் சுரேஷ்.

கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசியை பல பேர் உபயோகிக்கிறார்கள். அதில் யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்தால் எல்லாருக்கும் பரவும். இளைய தலைமுறையினருக்கு இந்த நோயின் அபாயத்தைப் பற்றி பள்ளியில் விவரமாக எடுத்துச் சொல்லாததாலேயே அறியாமையினாலேயே அவர்கள் தவறிழைக்கிறார்கள். பொதுவாக இந்த நோயின் விபரீதத்தைப் பற்றின தெளிவான அறிவு இல்லாததால்தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து தவறு செய்கிறார்கள். சாவதற்கு யாருக்கு விருப்பம் இருக்க முடியும்?

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இப்பொழுது எல்லோருக்கும் தேவைப்படுவது மிக அவசரமான தகவல் பிரக்ஞை. நமது சமூகத்தில் இருக்கும் அனாவசியமான மனக்கூச்சங்களினால் செக்ஸ், போதை விஷயங்கள் வெளிப்படையாக பேசப்படுவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளிடம் செக்ஸைப் பற்றிப் பேசுவதில்லை. பள்ளிகளிலும் பாடம் போதிக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு சரியான போதனை இல்லாததாலேயே ஆபத்தை உணராமல் தவறிழைக்கிறார்கள்.

எய்ட்சுக்கு மக்களிடையே எந்த பேதமும் இல்லை. ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், கிழவன், குழந்தை யாரை வேண்டுமானாலும் தாக்கும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், பல நாடுகளில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பண வசதியுள்ள நாடுகளே எய்ட்ஸ் பரவலைத் தடுக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியா ஒருஏழை நாடு. இங்கு எய்ட்ஸ் பரவினால், பரமனே வந்தாலும் தடுக்க முடியாது.

ஊட்டச்சத்து குறைவு, சுகாதார வசதி இல்லை, மோசமான மருத்துவமனைகள், ஊழல் நிறைந்த ரத்த வங்கிகள் இவை எல்லாம் எய்ட்ஸ் நோயின் நண்பர்கள். மோசமான சமூக, பொருளாதார நிலைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை போதை மருந்துக்கும் விபச்சாரத்திற்கும் இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டு செல்கின்றன. எழுத்தறிவின்மை, வறுமை, மக்கள் தொகை இவற்றிற்கு நடுவே எய்ட்ஸ் வேறு சேர்ந்தால் பேரழிவுதான்.

அரசுகளால் எய்ட்ஸ் நோயை இப்போதைக்குத் தடுக்க முடியப்போவதில்லை. அதைத் தடுப்பது மக்களின் கையில்தான் இருக்கிறது. இது ஒரு இயக்கமாக வேண்டும்.

(1995 டி.ஒய்.எப்.ஐ. வெளியிட்ட பிரசுரத்திலிருந்து)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com