சுகதேவ்
அரவிந்தன்
“மலரைக் காட்டிலும் மென்மையானவர், கடும் பாறையைக் காட்டிலும் கடினமானவர் சுகதேவ். ”
உழுதவன் உண்ணும் காலம்
நெய்தவன் அணியும் காலம்
அழுதவன் சிரிக்கும் காலம்
அரசுடன் நிலமும், தொழிலும்
உழைப்பவன் கையில் வர்க்க
யுத்தங்கள் வழங்கும் காலம்
எழுகின்ற காலம் என்றோ
எமது பொற்காலம் அன்றே...
( 1983 ஏப்ரலில் வெளியான கவிதையின் ஒரு பகுதி )
“நான் ஒன்றை மட்டுமே விரும்புகிறேன். அது தேசத்தின் சுதந்திரம். இது மட்டுமே எனது கனவு. நான் ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கை பெற்றால் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் தேசத்திற்காக தியாகம் செய்வேன்”. என 20 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட சர்தார் சிங் சராபா சுகதேவ், பகத்சிங், பகவதி சரண் வோரா ஆகியோரின் இதய நாயகன்.
1907 ஆம் ஆண்டு மே 15 தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர் சுகதேவ். தனது 24 வயதில் தூக்கு கயிற்றை முத்தமிட்டு கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறினார்.
விலேஜர்( கிராமவாசி ) என பகத்சிங்கால் அன்போடு அழைக்கப்பட்டவர். பகத்சிங்கிற்கு அடுத்து சோசலிசம் பற்றி அதிகம் படித்தவரும், சிந்தித்தவரும் சுகதேவ் தான். குறைவாகவே படித்தாலும் அதிக ஞாபக சக்தியை கொண்டவர். தத்துவ நூல்களை இரண்டு, மூன்று நாட்களிலேயே படித்து முடித்து விடுவார்.
பகத்சிங்கின் தோழர்களிலேயே மிக்க புன்சிரிப்புடன் அனைவரையும் கிண்டலும், கேலியும், செய்து துருதுருப்புடன் இருப்பவர் சுகதேவ். அவருடைய புன்சிரிப்பு கூட சமுதாயத்தின் கெட்ட பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் அரசியல் கருத்து வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தது என சிவவர்மா கூறுகிறார்.
சுகதேவ் கட்சி நிர்வாகி என்ற முறையில் பகத்சிங்கை விட சிறந்தவர். கட்சி தோழர்களின் அனைத்து சிறு தேவைகளையும் உள்வாங்கிக் கொண்டு செய்து கொடுப்பார். பஞ்சாபில் பகத்சிங் கட்சியின் தலைவர் என்றால் சுகதேவ் ஒவ்வொரு செங்கல்லாக வைத்து கட்சி கட்டடத்தை கட்டி அமைத்தவராவார்.
சுகதேவ் தனது உடல் உடைகள் பற்றி எவ்வளவு அலட்சியமாக இருந்தாரோ, அவ்வளவு அதிகமாக தன் தோழர்களின் உணவு, உடை, உடல் பற்றி அக்கறை செலுத்தினார். தோழர்களின் தேவைக்கு முன்பு தன் தேவையை பொருட்படுத்த மாட்டார்.
ஆரம்பத்தில் காந்திய கொள்கைளில் ஈர்ப்புடையவராக இருந்த சுகதேவ் காந்தியை பின்பற்றி ஒவ்வொரு மாதமும் பதினெட்டாம் தேதி உண்ணாவிரதமிருந்து வந்தார். அதுகுறித்து காந்திஜிக்கு சிறையில் இருந்து சுகதேவ் கடிதம் எழுதுகிறார்.
“இந்த நாட்டில் சோசலிச ஜனநாயக அமைப்பை நிறுவுவதுதான் புரட்சியாளர்களின் லட்சியம். இந்த லட்சியத்தில் சிறு திருத்ததிற்கும் இடமில்லை. நாங்கள் எங்கள் பொறுப்புகளை உணர்ந்து தான் இருக்கிறோம். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முன்பும் எல்லா நிலைகளையும் பற்றியும் சிந்தித்துதான் முடிவு எடுக்கிறோம்.”
நாங்கள் வெடிகுண்டுகளை நம்பிய வன்முறையாளர்களல்ல. மக்களின் எழுச்சியை நம்பிய புரட்சியாளர்கள் என உரக்க காந்திய கோட்பாடுகளுக்கு எதிராக தனது தோழர்களோடு சேர்ந்து முழங்கினார்.
இந்தளவு உறுதியான சுகதேவ், பகத்சிங்கின் மீது அளப்பரிய பாசம் கொண்டவர், பகத்சிங்கை மரண வாயிலுக்கு தள்ளவும் தயங்கவில்லை. கட்சியின் மத்திய கமிட்டி டெல்லி நாடாளுமன்றத்தில் குண்டு வீச பகத்சிங் முன்வந்தும் நிராகரித்து விட்டு வேறு இரு தோழர்களை அனுப்ப முடிவு செய்தது.
இதனை சுகதேவ் கடுமையாக ஆட்சேபித்ததோடு, நாடாளுமன்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பிறகு பகத்சிங் ஒருவர் மட்டுமே நீதிமன்ற மேடையில் கட்சியின் சித்தாந்தம், லட்சியம், குண்டு வீச்சின் அரசியல் முக்கியத்துவம் ஆகியவைகளை எடுத்துரைக்க முடியுமென்று சொன்னதோடு பகத்சிங்கை தனிப்பட்ட முறையில் கோபப்படுத்தி தனது நிலையை பகத்சிங்யை ஏற்க வைத்தார்.
உயர்ந்த லட்சியத்தை அடைவதற்காக தனது ஆருயிர் நண்பரையே அர்ப்பணித்து விட்டதாக எண்ணிய சுகதேவ் மிகுந்த வருத்ததுடன் நாட்களை நகர்த்தினார். பின்னர் ராஜகுரு, பகத்சிங் ஆகிய தோழர்களோடு ஒரே மேடையில் சோசலிசம் என்ற கனவை சுமந்தபடி சூரியனின் பிரகாசத்தோடு தூக்குக் கயிற்றை இன்குலாப் முழக்கங்களோடு முத்தமிட்டார்.
மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்ற தாக்கக்கூடிய புரட்சியின் பலி பீடத்தில் தனி நபர்களின் உயிர்பலிகள் தவிர்க்க இயலாதவையே. என இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமிட்ட சுகதேவ் இந்திய புரட்சிகர இளைஞர்களின் அடையாளமானார்.
உலகமயம் இளைஞர்களை நுகர்வு வெறி கொண்ட மனிதர்களாக மாற்றிக் கொண்டு இருக்கும் நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் சுகதேவை பற்றி காலத்தின் அருமை கருதி பாரதி புத்தகாலயம், டிஒய்எப்ஐ தமிழ்மாநிலக் குழு இணைந்து வெளியிட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். அனைவரும் படிப்பதோடு மட்டுமில்லாது தெரிந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு கொடுத்து படிக்க செய்ய வேண்டிய சிறு கையடக்க புத்தகமாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|