டிசம்பர் 6- நினைவுதினம்
(நால்வர்ண அமைப்பு தோல்வியைத் தரும்) மாமேதை டாக்டர் அம்பேத்கர்
மக்களை தனித்தனியான ஒருசில பிரிவுகளாகப் பிரிப்பது என்பது, மனிதனைப் பற்றிய மிக மேலோட்டமான கண்ணோட்டம். அப்படிப் பிரிப்பது தவறு என்று இன்றைய அறிவியல் உணர்த்தி உள்ளது. தனிமனிதர்களின் தன்மைகள் எண்ணற்ற விதத்தில் மாறக்கூடியதாக இருக்கின்றன. எனவே, மனிதர்களைப் பல்வேறு அடுக்குகளாகத் தரம் பிரித்து, அவர்களை அதற்கேற்ற விதமாக மட்டுமே பயன்படுத்துவது என்பது, அவர்களின் தன்மைகளை முழுமையாகப் பயன்படுத்துவதாகாது.
தனிமனிதன் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்னும் கருத்துக்கு ஏற்றபடி, மனிதர்களை தனித்தனிப் பெட்டிகளில் போட்டு அடைத்து வைப்பது, சாத்தியம் அற்றதாக இருப்பதால்தான், பிளேட்டோவின் ‘குடியரசுத்’ திட்டம் தோல்வியைத் தழுவியது.
இதே காரணத்துக்காகவே நால்வர்ண அமைப்பும் தோல்வி அடையும். தொடக்கத்தில் நான்கு வகுப்புகளாக இருந்தவை இப்போது நான்கு ஆயிரம் சாதிகளாகப் பிரிந்துள்ள நிலையில், மக்களை திட்டவட்டமான நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது சாத்தியமற்றது.
நால்வர்ண அமைப்பு நிறுவுவதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நால்வர்ண அமைப்பு நிறுவப்பட்டு விட்டாலும் கூட, அதைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது எப்படி என்பதே அந்தப் பிரச்சனை. நால்வர்ண அமைப்பு வெற்றிகரமாக இயங்குவதற்கு, அந்த அமைப்பை அங்கீரிக்கக்கூடிய ஒரு குற்றவியல் சட்டஅமைப்பு ஒரு முக்கியமான தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வர்ண மாற்றம் என்பது, நால்வர்ண அமைப்பை ஆதரிப்பவர்கள் நிரந்தரமாக சந்திக்க வேண்டிய பிரச்சனையாக இருந்துவரும். எனவே, வர்ணத்தை மாற்றிக் கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றமாக ஆக்கப்பட்டால் ஒழிய, மக்கள் தத்தம் வகுப்புகளில் நீடித்து இருக்க மாட்டார்கள்.
இப்படி மனித இயற்கைக்கு முற்றிலும் மாறானதாக இருப்பதால், நால்வர்ண அமைப்பு அடியோடு நொறுங்கிப் போகும். தன் சொந்த பலத்தால் மட்டுமே அந்த அமைப்பு நீடிக்க முடியாது. அதற்குக் குற்றவியல் சட்டங்களின் அங்கீகாரம் வேண்டும். ராமாயணத்தில் ராமன் சம்புகளைக் கொல்வதாக வரும் கதை இதைத்தான் நிரூபிக்கிறது. சம்புகனை காரணம் எதுவும் இல்லாமல் ராமன் கொன்றதாக சிலர் நிந்திப்-பதாகத் தோன்றுகிறது. சம்புகனைக் கொன்றதற்காக ராமனைத் தூற்றுவது என்பது மொத்த நிலைமையையும் தவறாகப் புரிந்து கொள்வதாகும்.
ராம ராஜ்யம் என்பது, நால்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ராஜ்யம். ஓர் அரசன் என்கிற முறையில் நால்வர்ண அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டியது ராமனின் கடமையாக இருந்தது. சம்புகன் தன் வர்ணமாகிய சூத்திர வர்ணத்தை விட்டு பார்ப்பனனாக மாற விரும்புகிறான். எனவே, சம்புகளைக் கொல்வது, ராமன் என்கிற அந்த அரசனின் கடமையாகிறது. ராமன் சம்புகளைக் கொன்றதற்கான காரணம் இதுதான். ஆக, நால்வர்ண அமைப்பைக் கட்டிக்காக்க குற்றவியல் அதிகாரம் தேவையாகிறது என்பதையும் இந்தக் கதை வெளிப்படுத்துகிறது.
குற்றவியல் அதிகாரம் தேவை என்பது மட்டுமல்ல, குற்றத்துக்கு வழங்கப்படுகிற தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
எனவேதான், ராமன் சம்புகனுக்கு குறைவான தண்டனையை அளிக்கவில்லை. அதனால்தான், வேதம் ஓதுகிற சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்பதும், வேதம் ஓதப்படுவதைக் கேட்கிற சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனைகளை மநுஸ்மிருதி விதித்திருக்கிறது.
தங்களால் மக்களை நான்கு தனித்தனி வர்ணங்களாக வெற்றிகரமாகப் பிரித்துவிட முடியும் என்றும், மநுஸ்மிருதி விதித்திருக்கும் கடும் தண்டனைகளை மீண்டும் அதே தீவிரத்துடன் நடைமுறைப்படுத்துமாறு இந்த இருபதாம் நூற்றாண்டின் நவீன சமூகத்தினரைத் தூண்டிவிடத் தங்களால் முடிகிறது என்றும் நால்வர்ண அமைப்புக்கு ஆதரவாக இருப்பவர்களால் உறுதியாகக் கூறமுடியுமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|