Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

நீரும் நெருப்பும்

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் என்பது எப்போதும் தீர்க்க முடியாத ஒரு தலைவலியாகிவிட்டது. பிராந்திய அரசியல் நலன்கள் இனமொழி விரோதமாக மாறும்நிலை காவிரிப் பிரச்சனைக்குப் பிறகு இப்போது முல்லைப் பெரியாறு அணையினை ஒட்டி உருவெடுத்திருக்கிறது. இரண்டு மாநில முதல்வர்களும் விடுக்கும் அறிக்கைகள் இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் பதட்டக் காலங்களில் விடுக்கும் அறிக்கைகளை மிஞ்சிக் கொண்டிருக்கின்றன. தமிழக கேரள எல்லையில் நடைபெறும் போராட்டங்களும், மறியல்களும், தடைகளும் இந்தியா ஒரு நாடு அல்ல என்ற காட்சியையே உருவாக்குகின்றன. ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாததுதான் பாக்கி. மற்றபடி ஏதோ யுத்தச் சூழல் போன்ற எச்சரிக்கைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மேல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மறுத்து நிர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு கடும் எதிர்ப்பு தெர்வித்திருக்கிறது. பலகீனமாக உள்ளது அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கேரள அரசின் வாதம். ஆனால் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்ததால் 2,17,000 ஏக்கராக இருந்த பாசனப்பகுதி 70,000 ஏக்கராக குறைந்தது. 1,47,000 ஏக்கர் தரிசாகக் கிடக்கிறது என்றும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 27 ஆண்டுகளாக கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும், தமிழகத்தின் சார்பில் வாதடுபவர்கள் கூறுகின்றனர்.

மிகவும் சிக்கலான இந்த பிரச்சனையில் இரண்டு தரப்புகளின் இந்த வாதங்களையும் கவனமாக ஆராய்ந்து பொறுத்தமான தீர்வுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் உருவாக்குவதற்கு பதில் ஆத்திரம் ஊட்டும் பேச்சுக்கள், இரண்டு தரப்பிலும் உருவாக்கப்படுகின்றன. கேரள அரசு சார்பில் முதல்வரின் பேச்சுகள் வாட்டாள் நகராஜனின் பேச்சுக்கு நிகரனாவை என்றும், அணைக்கட்டின் ஸ்திரத் தன்மையை பரிசீலிப்பதற்க்காக கடற்படை வீரர்களை அனுப்பிய கேரள அரசின் நடவடிக்கையை ஏதோ அணைக்கட்டை தகர்ப்பதற்காக ஆள் அனுப்பிய நடவடிக்கைக்கு நிகராகக் கருதி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

அணைமட்டத்தை உயர்த்தாமலேயே ஏற்கனவே தேக்கப்படும் நீரை உரிய வகையில் பயன்படுத்தினால் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் என விவசாயிகள் சங்கத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. “அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேற்கொண்டு புதியதாக நான்கு மதகுகளை அங்கு வைத்தால் மழை காலங்களில் அதிகமாக உபரி நீரை பெறலாம். அவ்வாறு பெறும் நீரை வருசநாடு பகுதியில் இருக்கும் மூலவைகையில் ஓர் சிறிய அணையை கட்டி தேக்கி வைக்கலாம். அந்த அணையையும் மிஞ்சும் வகையில் தண்ணீர் வந்தால் மதுரை மாவட்டத்தில் இதுவரை நிரம்பாத நூற்றுக்கணக்கான கண்மாய்களில் நீரை தேக்கி வைக்கலாம்” என்கிறார் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தின் தலைவர் அப்பாஸ்.

உண்மையில் மழை நீரை சேமிக்கவும், உபரி நீரை பாதுக்காக்கவும் தமிழகத்திடம் உருப்படியான அடிப்படை கட்டுமானங்கள் ஏதும் இல்லை. சென்ற ஆண்டு பெய்த மழையில் ஏற்பட்ட பெரும் நாசங்கள் இந்த உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டின. உபரியாக கிடைக்கும் நீரை பாதுகாக்க நீண்டக்கால திட்டங்களை உருவாகுவதற்கு பதில் நதிநீர் தொடர்பான அரசியலால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

நதிநீரை பங்கிடுவது தொடர்பாக உயர் அதிகாரம் படைத்த தேசிய குழு ஒன்று நிறுவப்படாதவரை பிராந்திய மக்களிடையே பகைமையும், அர்த்தமற்ற வெறுப்பும் தவிர்க்க முடியாதது. அரசியல்வாதிகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளில் குளிர் காய்கிறார்கள். முல்லை பெரியாறு அணைக்கட்டு பிரச்சனையில் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள், அணைக்கட்டின் ஸ்திரத்தன்மை, தமிழக விவசாயிகளின் இன்னல்கள், நீர் ஆதாரங்களை முறைப்படுத்தி பயன்படுத்துவது தொடர்பான ஆக்கப்பூர்வமான மாற்று ஏற்பாடுகள் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்கான அணுகுமுறைகள் அமைய வேண்டும். ஒரு கோர்ட் உத்தரவின் அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுகினால் இதற்கு முன் பொது விவகாரங்களில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் என்ன நிலையினை அடைந்தனவோ அதே நிலையினைத்தான் இந்த தீர்ப்பும் அடையும்.

நன்றி: உயிர்மை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.