வெற்றி அல்லது வீர மரணம்
கவிவர்மன்
1954 டிசம்பர் 24 முதல்
எட்டரை மாதங்கள்
குவாதமாலாவில்
கடந்தது பொழுதுகள்.
வேலைக்கும் உணவுக்குமான
சராசரி மனித தேவையின்
போராட்ட காலம் அது.
புகைப்படக் காரனாகவும்
மருத்துவராகவும்
கிடைக்கின்ற வேலையில்
நடக்கிற வாழ்க்கையாக மாறியது
அங்கு தான்
பெருநாட்டை சேர்ந்த
புரட்சிக்காரி ஹில்டா காடியா
குவேராவின்
எண்ணங்களை பிரதிபலித்தபடி
அறிமுகமானாள்.
ஆஸ்த்மா குவேராவை
குடைந்தபோது
ஹில்டா, குவேராவுக்கு
செவிலியாக, காதலியாக கூடவே
நிழல்போல் நெருக்கமானாள்.
பல நேரங்கள்
பண உதவியாலும்,
பாப்சபிணைப்பாலும் குவேராவுக்கு
தன் தாயை நினைவூட்டினாள்.
ஹில்டாவின் தத்துவார்த்த
விவாதங்கள் குவேராவுக்கு
அவள் மீது மதிப்பேற்றியது.
அரசியல் ஸ்திரம் அதிகரித்த
நாட்களாக.....
ஹில்டாவுடன்
முடிவுறா விவாதங்கள்......
புத்தகத்தேடல்கள் என
குவாதமாலாவின் பொழுதுகள்
அர்த்தத்தோடு நீண்டது.
மல்லிகைத்தோட்டத்தில்
மாட்டிக்கொண்டு
நறுமணத்தை மறுக்கமுடியுமா?
பெருவிய
பொருளாதார வல்லுநர்
ஹில்டாவின் காதல்
குவேராவைப் பற்றி
படர்ந்துகொண்டது.
1955 ஆகஸ்ட்18
காலனிய நகரான
டெபோட்ஸாட்லானில்
மணவாழ்க்கை மலர்ந்தது.
ஒரு பெண் குழந்தை
சராசரி குடும்ப வாழ்க்கை.
கட்டுப்பட முடியாமல்
குவேரா-ஹில்டா உறவு
விலகிக்கொண்டே போனது.
நீண்ட காலம் நிலைத்திருக்காத
ஆனாலும்...
மனதைவிட்டு நீங்காத
ரம்யமான நினைவுகளோடு
பிரிந்தார்கள்.
பிடல் என்னும் பேரலையின் முதல் சந்திப்பு....
இத்தனை நாட்களாய்
அடைகாத்த எண்ணங்கள்
பிரசவிக்கப்போகும் நாள்...
தன் முகவரியை
கனகச்சிதமாய்
கண்டுகொண்ட நாள்...
தன்தவத்திற்கு
வரமாக பிடல்கேஸ்ட்ரோ
வந்த நாள்
குவேராவின் வாழ்க்கையை
காவியமாக மாற்றிய
திருநாள் திடீரென வந்தது.
தாகத்திற்கும்
தனல் கக்கும் வேகத்திற்கும்
விடையாக
குவேரா என்கிற நாணயத்தின்
மறுபக்கமாக
கியூபாவிலுள்ள தீவுச்சிறையிலிருந்து
1955 ஜூலை 8
பிடல் காஸ்ட்ரோ வந்தான்
குளிர் நிறைந்த
மெக்ஸிக்க இரவில்
ஏராளமான லட்சிய வேட்கையோடு
அசாத்தியங்களை
சாத்தியமாக்கும் துணிச்சலோடு
பிடல் குவேரா சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்காவின்
தலையீடு கியூப தேசத்தை
அரைமயக்க நிலையில்
அடித்து வைத்தகாலம்.
சுதந்திரம் பெற்றும்
சுயமரியாதை பெறாத தேசமாக...
சீரழிவுகளும், பேரழிவுகளுமாக
எல்லா பகலும்
இருண்டு கிடந்தது.
இனியும்
அந்த கரீபியத் தீவில்
விபச்சாரப் பண்ணைகளும்..
காபரே களியாட்டங்களும்
தொடரக்கூடாது.
பிடலின் ஒவ்வொரு
அணுவும் முணுமுணுத்தது.
எதிர்கால வாய்ப்புகளை
வளைத்துக்கொண்டு
கேஸ்ட்ரோ என்ற
வீரனை எதிர்நோக்கியது கியூபா.
பேசினார்கள்....
இருவரின் மூளையும்
பழுக்க காய்ச்சிய இரும்பை போல
பளபளக்கும் வரை பேசினார்கள்...
செயல் வீரனும்
சிந்தனையாளனுமாக
ஒருவரின் கருத்து
ஒருவரைப் பற்றி
பேரொளியானது.
சூரியன்கள் இரண்டு
ஒரே நேரத்தில்
தகித்தது போல
பிரளயங்கள் இரண்டு
பேசிக் கொண்டது போல
தத்துவ பின்னணியில்
பிடலும்...
உணர்ச்சியின் உச்சத்தில்
குவேராவும்
ஐக்கியமானார்கள்.
கண்ணீர் சிந்தவும்
கவலை கொள்ளவும் இனி
அவகாசமில்லை
இருவரும் ஒரே சுதியில்
உச்சமானார்கள்.
உன் மரணத்தை யாரிடம் தெரிவிப்பது
என்ற பிடலின் கேள்வி?
போராட்டத்தின் அழுத்தத்தை,
மரணத்தை தேடிச் செல்லும்
பயணத்தை
பிடலோடு விவாதித்த சேவுக்கு
உணர்த்தியது.
ஒரு உன்னத லட்சியத்திற்காக
அந்நிய நாட்டின்
கடற்கறையில் மரணிப்பது
மகத்துவம் என்று பற்று கொண்டான்.
அந்த ஒரே இரவில்
கியூபா புரட்சியில்
இணைவதென்ற சேயின் முடிவு
உறுதியானது
- புயலின் பயணம் தொடரும்.....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|