மறக்க முடியாத ஹிரோஷிமா
பெ.திருவேங்கடம்
மின்னல் கண்களை பறித்தது! மங்கியது பார்வை பளிச்சென்ற ஒளியில். ஏதோ ஒன்று வானைப் பிளந்து கொண்டு கீழ்நோக்கி வருவது போன்ற தோற்றம். ஏதோ ஒரு உந்துதலால் தரையில் பாய்ந்து, மண்ணில் புரண்டு தரையில் படிந்தனர் மக்கள். உடல் முழுமையும் ஒரு வித எரிச்சல் படர்வதை உணர்ந்தனர். நினைவுகள் அகலத் துடித்தன. எங்கும் அமைதி. மெல்லியதாகத் தொலை தூரத்தில் இடிமுழக்கம். தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடிப்பு. எங்கும் ஒரேபுகைமயம். அது மேலும் மேலும் விண்ணை நோக்கி வளர்ந்து கொண்டே சென்றன. மிகப்பெரும் புகைமண்டலமாக உருவெடுத்து நகரத்தையே மூடிவிட்டது.
நகரை அப்படியே விழுங்கிய முதல் அணுகுண்டுவெடிப்பினை நேரில் பார்த்தவரின் அனுபவமிது. இது போன்று இன்னும் ஆயிரமாயிரம் நெஞ்சைப் பிளக்கும் அனுபவங்கள்.
1945 ஆகஸ்டு 10ந் தேதி அதிகாலை அமெரிக்காவின் கொடூரமான அணுகுண்டு நெருப்பில் எரிந்து சாம்பலாகிவிட்ட நாகசாகி ரயில் நிலையத்தை ஒட்டிய வீதியில் 12 வயதுடைய சிறுவன் யோச்சன் நடந்து சென்றான். தன் தம்பியைத் தோளில் தூக்கிச் சென்றான். அவர்களின் பிஞ்சுமுகங்கள் கோரமாகக் கருகியிருந்தன. இவை அணுகுண்டு வெடிப்பின் கோரமுகத்துக்குச் சில உதாரணங்கள். ஹிரோஷிமா, நாகசாகி என்னுமிரு நகரங்களில் லிட்டில்பாய், ஃபேட்பாய் என்ற இரு அணுகுண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. போர் முடிந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த அணுகுண்டுகளைச் சோதித்துப் பார்க்க ஹிரோஷிமா நாகசாகி களமாகப் பயன்படுத்தப்பட்டது.
குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் தான் அவை. ஆனால் விளைவித்த நாசமோ ஏராளம். இது இன்னும் தொடர்கிறது. ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் மாண்டனர். அணுகுண்டு வெளிப்படுத்திய வெப்பத்தால் இரும்புத் தூண்களும் உருகின. அணுகுண்டு வெடித்து 63 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் அணுவெடிப்பின் பாதிப்புகள் தொடர்கின்றன. அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதை இன்றும் காண முடிகிறது. அக்கொடிய நிமிடத்தின் வேதனையும், பயமும் வெறுப்பும், கொடூரமும் இன்னும் மறையவில்லை.
அமெரிக்கா உணர வேண்டியது இது. இனியொரு போர் மூண்டால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கவோ, லாபநஷ்டங்களைக் கணக்கிடவோ யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். மனித குலத்தைக் கூண்டோடு நாசமாக்கி பூமிப்பந்தைச் சுக்கல் சுக்கலாக உடைத்து நொறுக்கக் கூடிய அளவிற்கு அதிநவீன படுபயங்கரமான ஆயுதங்களைச் செய்து குவிக்கப்பட்டுள்ளன.
போரில் மாண்டவர்களின் நினைவாக ஹிரோஷிமா நகரமையத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அதில் சமாதானத்துடன் அமைதியாக ஓய்வெடுங்கள். இன்னுமொரு முறை இந்தத் தவறு நிகழாதிருக்கட்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை அமெரிக்கா உட்பட ஆயுதங்களை குவித்து வைத்துள்ள நாடுகள் அனைத்தும் நிறைவேற்றுவது கடமையல்லவா? ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் இனியும் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டாமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|