மறைபொருள்
ஆர்.நீலா
பதினெட்டு வயது நிரம்பிய இளம்பெண். அதிகாலை உறக்கம் தெளிந்து, எழுந்து கண்ணாடி முன் நிற்கிறாள். அப்படியும், இப்படியும் திரும்பி தன் உருவத்தைக் கண்டு சமாதானப்பட்டுக் கொள்கிறாள். பிறகு குளியலறைக்குச் சென்று குளித்து வருகிறாள். தனக்கான உடையை அலமாரியில் தேடித் தேடி மனதுக்குப் பிடித்த ஒரு சுடிதார் எடுத்து அணிந்து கொண்டு மீண்டும் கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கிறாள். பிறகு தலை முடியை நன்றாக சிக்கெடுத்து அழகாக சீவி பின்னலிட்டுக் கொள்கிறாள். உடைக்குப் பொருத்தமான கலரில் காதணி, கிளிப், ரப்பர் பேன்ட், வளையல் போன்றவற்றை அணிந்து கொள்கிறாள். முகத்திற்குப் பவுடர் போட்டுக் கொள்கிறாள். மீண்டும் கண்ணாடி முன் தன் அழகைத் தானே ரசித்துக் கொள்கிறாள்.
இதுவரை, இந்தக் குறும்படத்தைக் பார்த்துக் கொண்டிருக்கிற நம்மால் அடுத்து ஒன்றும் ஊகிக்க முடிவதில்லை. அடுத்து திரையில் கேமரா லேசாக நகர்ந்து அந்தப் பெண் ஒரு பர்தாவை கையில் எடுப்பதைக் காட்டுகிறது. அதை அணிவதற்கு முன் அந்தப் பெண் மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொள்கிறாள். பிறகு அதை அணிந்து கொள்கிறாள். படம் அதோடு முடிவடைகிறது. அவள் கண்களில் ஏதோ ஒரு தவிப்பும், ஏக்கமும் வழிவதை நம்மால் உணர முடிகிறது. படம் முடிந்து விட்டது என்றாலும் நம்மால் உடனே, அதன் தாக்கத்தில் இருந்து மீண்டும் இயல்பாக இருக்க முடியவில்லை.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம், எல்லாத் துறையிலும் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்து பரவலாக மக்கள் மனதில் வேரூன்றப்பட்டிருக்கிறது. உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், அடிமைத்தளைக்குள் சிக்கித் தவிக்கிற பெண்கள் பற்றியெல்லாம் யாரும் அதிகமாகப் பேசுவதில்லை. கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது மட்டும் திணிக்கப்படுகிற இது போன்ற கலாச்சாரத் திணிப்புகள் நெஞ்சில் அறைகிற விதமாக சித்தரிக்கிறது இப்படம்.
பெண்களின் கற்புநிலை என்பது அவர்களது ஆடைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்பதை எல்லா மதங்களும் சொல்லி வருகின்றன.
குறிப்பாக முஸ்லிம் பெண்களின் பர்தாவைப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசியிருக்கிறார்கள். இப்படத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உணர்வின் அடிப்படையில் அலசியிருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? மறைபொருள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|