நம்பிக்கை வாக்கெடுப்பில் நம்பிக்கை இழந்தவர்கள்
ப.குமார்
“இந்தியர்கள் தத்துவங்களில் நம்பிக்கையுடையவர்கள் அரசியலிலும் பொருளியலிலும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. கிரேக்கர்களுக்கு வாழ்க்கை நனவும் நம்பிக்கையும் உடையது. இந்தியர்களுக்கு அது கனவும் ஏமாற்றமும் நிறைந்தது’’ என்றார் ‘மாக்ஸ் முல்லர்’ என்ற அறிஞர். ஆம் அவர் சொன்ன வார்த்தைகள் ஜீரணிக்க முடியாததும் அதே சமயம் புறந்தள்ள முடியாததும் என்பதை இந்திய வரலாறு நமக்கு காட்டுகிறது. இத்தகைய மேல்தட்டு வரலாற்றிற்கு முடிவு கட்டும் வகையில் அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட அணு ஒப்பந்தம் பாமர மக்களிடமும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது இந்திய வரலாற்றின் தன்மை மாற்றத்தையே பறை சாற்றுகிறது.
இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு விடுதலைக்கு பிந்தைய இந்திய ஆட்சியாளர்களுக்கும் பல்வேறு வகைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் தாங்கள் ஆட்சி செய்யும் மக்களை ‘ஒன்றும் அறியாதவராக’ வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடையவர்கள் தான்.
ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் மத்தியிலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான் என்ற நிலைமை ஸ்திரம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவில்லாதது என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதில் தான் தோன்றித்தனமாக முடிவெடுக்கும் போக்கு இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய சூழலில், 2004ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ், இடதுசாரிகளின் துணையோடு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தது.
மக்களுக்கான குறைந்த பட்ச பொது திட்டத்திலிருந்து விலகி அமெரிக்கா அணுஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிரம் காட்டியது காங்கிரஸ் அரசு. அதை ஆதரிக்க முடியாது என ஆதரவை வாபஸ் வாங்கினார்கள் இடது சாரிகள். நாடாளுமன்றத்தில் ஜூலை 22 அன்று காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மன்மோகன் அரசு வெற்றி பெற 20 எம்.பி களை விலைக்கு வாங்கி இதுவரை இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானித்தவர்கள் நாங்கள் தான். நாங்கள் இன்னும் குறைந்துவிடவில்லை மேலும் வளர்ந்திருக்கிறோம் என்று அப்பாவி பொது ஜனங்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்ருக்கிறார்கள் இந்திய பெருமுதலாளிகள்.
இடதுசாரிகள் தயவில்லாமல் இனி காங்கிரஸ் அரசு ஒரு கணம் கூட ஆட்சியை தொடர முடியாது என இந்தியாவின் அப்பாவி மக்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. தங்கள் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, குறைவாகவே செய்கின்றனர், தொகுதிக்கு அடிக்கடி வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இப்போது எங்குமே காணப்படவில்லை. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம், சவப்பெட்டி முதலிய ஊழல்கள், ஆள் கடத்தல் வழக்கில் கைது, ஆள்மாறாட்டம், பாலியல் பலாத்காரம் போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளில் பேசப்படுவர்களாக அவர்கள் மாறி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அதன் உச்சபட்சமாகவே இப்போது ஒட்டுமொத்த இந்திய மக்களை அடகு வைத்து பாராளுமன்றத்தில் வாக்களிக்க பணம் வாங்கி இருக்கிறார்கள்.
சிபிஎம் கட்சியின் எம்.எல்.ஏ வாக இருந்த அஜித் சர்க்காரை, கொலை செய்து விட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் கொலைக் குற்றவாளி பப்பு யாதவ், பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 3 சமாஜ்வாடி எம்.பிக்கள் ஆகியோரின் உதவியோடுதான் இந்த காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றுள்ளது. இப்படி வெட்கம் கெட்ட எம்.பிகளை வளர்த்துவிட்ட பி.ஜே.பி போன்ற மதவாத கட்சிகளும் காங்கிரஸ் போன்ற மக்கள் விரோத கட்சிகளும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சமாஜ்வாடி உள்ளிட்ட சந்தர்ப்பவாத கட்சிகளும் இந்தியாவை ஆட்சி செய்யும் தார்மீக பொறுப்பையும் மதிப்பையும் மக்கள் மத்தியில் இழந்துவிட்டன என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பு இந்தியாவுக்கு உணர்த்துகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவு 275 - எதிர்ப்பு 256
கட்சி மாறி வாக்களித்தவர்கள் 20 பேர்
அரசுக்கு ஆதரவாக மாறியவர்கள்
பிஜேபி 4
மதிமுக 2
ஜனதா தளம் 2
ஜனதா தளம் (ஐ) 1
ஜனதா தளம் (ம) 1
டி.ஆர்.எஸ். 1
நாகலாந்து மக்கள் முன்னணி 1
என்.எல்.பி 1
அரசுக்கு எதிராக மாறியவர்கள்
காங்கிரஸ் 1
சமாஜ்வாடி 6
வாக்களிக்காதவர்கள்
பிஜேபி 4
ஜனதா தளம் (ஐ) 1
தெலுங்கு தேசம் 1
சிவசேனா 1
அகாலி தளம் 1
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|