தியாகத் தடம் பதித்த உன் பயணம் நெடிது...
ச.லெனின்
“எப்போதும் அமைதியாக அடங்கிப் போய் வாழ நினைக்காத ஒருவரைக் குறித்து சலனமற்று பேச இயலாது’’
ஹோஸே மார்ட்டி
1930, பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டிருந்த பஞ்சாப் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியின் கூட்டம் 14 வயது பள்ளி மாணவனின் உதவியோடு அம் மாணவனின் கிராமத்தில் நடைபெற்றது. அடுத்த நாள் காலை அந்த மாணவனுக்காக காவல் துறை வாசலில் காத்து நிற்கிறது, அம்மாணவனோடும் அவன் குடும்பத்தோடும் நல்ல அறிமுகமுடைய தலைமையாசிரியர் அவனை காப்பாற்றும் நோக்கத்தோடு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டு விசயத்தை முடித்துவிடலாம் என்று அச்சிறுவனை அணுகினார். “நான் எந்த தவறும் செய்யவில்லை’’ நான் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னான். வேறு வழியின்றி அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டான்.
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடும், தேசத்தின் விடுதலைக்காகவும் தன்னுடைய 14 வயதில் யாருக்கும் அடங்கிவாழ நினைக்காத தோழர். சுர்ஜித்தை பற்றி எப்படி சலனமற்று பேசமுடியும்.
1932, மார்ச் மாதம் ஹோஸியார்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு அதில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்று மாவட்ட காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இறுதியில் காவல் துறை மற்றும் ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கைவிட்டுவிட்டது. ஏற்கனவே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்த சுர்ஜித், அவருடைய தாயாரின் கடுமையான முயற்சியால் வேறு ஒரு பள்ளியில் மெட்ரிக் எழுத்து தேர்வை முடித்துவிட்டு செய்முறை தேர்வுக்காக காத்திருந்த நேரம் அது. போராட்டத்தை கைவிடுவதென்பது “நம் தேசத்திற்க்கே பெரும் அவமானம்’’ என்று சுர்ஜித் மாவட்ட காங்கிரஸ் அலுவலக செயலாளரிடம் சண்டையிட்டார். பதில் சொல்ல முடியாத அலுவலக செயலாளர் வேண்டுமென்றால் நீபோய் கொடி ஏற்று என்று கூறிவிட்டார்.
மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தின் மேலே பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடிக்கும் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்த ராணுவம், மற்றும் போலீஸின் கண்களில் படாமல் பிரிட்டிஷ் கொடியை இறக்கி அதில் மூவண்ண கொடியை தன்னுடைய 16 வயதில், ஹோஸியார் பூன் நீதி மன்றத்தில் சுர்ஜித் ஏற்றினார். கொடி ஏற்றப்பட்டதை கண்ட ராணுவ அதிகாரி ஒருவன் சுடுவதர்க்கு ஆணையிட்டான், எப்படியோ இறுதியில் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுர்ஜித் தன்னுடைய பெயரை “லண்டன் டோர் சிங்” (லண்டனை உடைத்தெரிபவன்) என்று கூறினார். விசாரணைக்குப் பிறகு உனக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று தீர்பளித்தார் நீதிபதி. 16 வயதே நிரம்பிய சுர்ஜித் எந்த பயமும் இன்றி நீதிபதியை பார்த்து கேட்டார் ஒருவருடம் தானா? வியப்புற்ற நீதிபதி நான்காண்டு சிறை என்றார், மீண்டும் சுர்ஜித் கேட்டார். நான்காண்டு தானா? என்று மேலும் வியப்புற்ற நீதிபதி உன்னை கைது செய்திருக்கும் சட்டப்பிரிவு படி இதற்கு மேல் என்னால் தண்டனை வழங்க முடியாது என்று கூறிச் சென்றார்.
சுர்ஜித் லாகூர் பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டார், இச்சிறை அடக்குமுறைக்கு பெயர் போனது. தனிமை சிறையில் அவர் இருட்டறைக்குள் அடைக்கப்பட்டார். மலம், மூத்திரம் கூட எடுக்கப்படாமல் இருக்கும் இந்த அறைக்குள் உணவு என்பது ஒரு துவாரத்தின் வழியாக எறியப்படும். இக்கொடுமையை அவர் மூன்று மாதகாலம் அனுபவித்தார். கைதிகளை பரிசோதித்து அவர்களின் உடல்நலன் பற்றிய சான்றிதழ் அளிக்கும் லாகூர் சிறைக்கு வந்தவர்களில் ஜரிஷ் நாட்டு டாக்டர் ஒருவர் சுர்ஜித்தை பரிசோதித்தார். வெளிச்சம் கொஞ்சம் கூட இல்லாத அறையில் மூன்று மாதம் இருந்ததால் கண்பார்வை மங்கிப்போயிருந்தது, அவர் உடம்பு முழுவதும் பேனும், ஈறும், பூச்சிகளுமாய் இருந்தது. இதைப் பார்த்த டாக்டர் உடல் நல சான்றிதழ் வழங்க மறுத்ததனால் மூன்று மாத கொடுமையிலிருந்து விடுபட்டு நீதிமன்ற சிறையிலிருந்து தண்டணை சிறைக்கு மாற்றப்பட்டார்.
1935ல் அவருக்கு திருமணம் நடந்தது, திருமணமான முதல் 15 ஆண்டுகளில், 8 ஆண்டுகள் சிறைவாசம், 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என இயக்க பணிகளுக்கு இடையே வீட்டிற்கு சென்ற நாட்களை கணக்கெடுத்தால் அது வெறும் 6 மாதம் தான் இருக்கும். அவருடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்தார். விடுதலைக்கு முன்பு 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தியாகத் தடங்கள் பதித்து பயணித்த தோழர் சுர்ஜித் 1.08.2008 அன்று மதியம் 1.35 க்கு உயிர் துறந்தார்.
இந்திய இளைஞர்களின் ஆதார்ஷ புருஷனான பகத்சிங்கால் உருவாக்கப்பட்ட “நவஜவான் பாரத் சாபாவில்’’ தன்னை 14 வயதில் இணைத்துக் கொண்டு தேசத்தின் விடுதலைக்காகவும், உயிர் மூச்சு உள்ளவரை உழைக்கும் வர்க்கத்தின் உணர்வோடும் உயிரோடும் கலந்து நிற்க்கும் தோழர் சுர்ஜித்துக்கு வீர வணக்கம்!
“இந்த உடல்கள்
பூமிக்குள்ளிலிருந்து எழும்
கொட்டிய குருதியை மீட்டெழுந்து
மக்களை மீண்டும்
உயிர் தெழச் செய்யும்’’
என்ற பாப்லோ நெருடாவின் வார்த்தைகள் நிச்சயம் மெய்யாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டி அடித்த இந்திய இளைஞர்களின் குருதியிலிருந்தும், உயிர்தியாகத்திலிருந்தும் புறப்படும் இளைஞர்கள் கூட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும்!
சோசலிசமே எதிர்காலம்!
எதிர்காலம் நமதே!!
1916 மார்ச் 31 பிறப்பு
1930 நவஜவான் பாரத் சபாவில் இணைந்தார்
தடைசெய்யப்பட்ட தொழிலாளர் விவசாயி கட்சியின் கூட்டம் நடத்தியதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
1932 ஹோஸியார்பூர் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் கொடியை இறக்கி, மூவர்ண கொடியை ஏற்றியதற்க்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1934 கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்
1938 விவசாயிகள் சங்க பஞ்சாப் மாநில செயலாளர்
1954 ஒன்றுபட்ட கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார்.
1959 பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத் தலைவர்
1964 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்
1953 57, 1967 69 பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
1978 84 மாநிலங்களவை உறுப்பினர்
1992 2005 சிபிஐ(எம்) அகில இந்திய பொது செயலாளர்
2005 2008 சிபிஐ எம் பொலிட்பீரோ
2008 சிபிஐஎம் மத்தியக்குழு
2008 ஆகஸ்ட் 1 - மறைந்தார்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|