தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி பி.எப். நிதியை சூறையாட தனியார் முதலாளிகளுக்கு மத்திய அரசு அனுமதி
கடந்த ஜூலை 22 அன்று மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் மிகுந்த “நம்பகத்தன்மையோடு’’ வெற்றி பெற்ற பிறகு பல நாசகர பொருளாதார சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்த முனைந்துள்ளது. தனியார்மய, தாராளமய பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (PF) நிர்வகிப்பது என்ற பெயரில், இந்நிதியை சூறையாட தனியார் பெரும் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் சிறு தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதில் கம்பெனி நிர்வாகங்களின் பங்கும் செலுத்தப்பட்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி பி.எப். நிதி உள்ளது. இந்த நிதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் மத்திய டிரஸ்ட்டிகள் வாரியம் மேலாண்மை செய்து வருகிறது, தொழிலாளர்களின் உழைப்பில் உருவான, அவர்களது எதிர்கால வாழ்வுக்கு உதவுவதற்காக சிறுகச் சிறுக சேமிக்கப்பட்டுள்ள இந்த பெரும் நிதியை மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிர்வகித்து வருகிறது. மிகப்பெரிய அளவில் சேர்ந்துள்ள பி.எப். நிதியை சூறையாடவும், அதை பங்குச் சந்தையில் வைத்து சூதாடவும் தனியார் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இவர்களுக்கு ஆதரவாக மன்மோகன் சிங் அரசும் செயல்பட்டு வருகிறது. பி.எப். நிதிக்கு தற்போது அரசு அளித்து வரும் 8.5 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தி தர வேண்டுமென்று சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட அதை நிறைவேற்ற மறுத்து வரும் மத்திய அரசு, இந்தநிதியை தனியார் பெரு முதலாளிகளின் கைகளுக்கு மாற்றி விட கடந்த நான்காண்டு காலமாக தீவிரமாக முயற்சித்தது. ஆனால், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்த தன் விளைவாக, அரசின் எண்ணமும் பெரு முதலாளிகளின் எண்ணமும் ஈடேறவில்லை. ஆனால், தற்போது குதிரை பேரம் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு, நிதித்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் பாதையில் வேகமாக செல்கிறது. இதன் ஒரு பகுதியாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்திற்கும், எச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களுக்கும் அளிப்பது என முடிவு செய்துள்ளது.
பி.எப்.நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கண்ட தனியார் பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை, இடது சாரி தொழிற்சங்க பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி, 29. 07. 2008 அன்று டில்லியில் நடைபெற்ற பி.எப். மத்திய டிரஸ்டிகள் வாரியக் கூட்டத்தில், மத்திய அரசின் பிரதிநிதிகளின் பெரும்பான்மை பலத்துடன் அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
பி.எப். நிதியை நிர்வகிக்க 10 நிதி நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரியிருந்தன. அதில் அவர்களது டெண்டர் அடிப்படையில் மேற்கண்ட நான்கு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டதாம். ஆனால், டிரஸ்டிகள் வாரியத்தின் உறுப்பினரான டி.எல்.சச்தேவா கூறுகையில் ஐசிஐசிஐ, எச்எஸ்பிசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே முதலில் நிதி மற்றும் மூலதனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டன என்றும், ஆனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பெயர் திடீரென்று சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். ரூ. 2.5 லட்சம் கோடி அளவிற்கு சேர்ந்துள்ள தொழிலாளர்களின் இந்த நிதியை ‘நிர்வகிக்க’ மேற்படி நான்கு நிறுவனங்களுக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுமாம்!
இளைஞர்களுக்கு பாதுகாப்பான வேலையை வழங்க முடியாத, மக்களை கடுமையாக பாதித்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வக்கற்ற மத்திய அரசுதான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை தனியாருக்கு பங்குபோட்டு கொடுப்பதற்கு இவ்வளவு முனைப்பு காட்டுகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|