இந்தியாவுக்கான மாற்றுப் பாதை மேற்கு வங்கம் வழிகாட்டுகிறது
- என். சங்கரய்யா
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசுகடந்த 30 ஆண்டுகளில் குறைவாக உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நிறைவான சாதனைகளை படைத்-துள்ளது என்றால் மிகையில்லை. மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளால்தான் நாட்டில் வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் பெரும் பூதமாக எழுந்து நிற்கிறது. கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான நிதி மத்திய அரசினால் தொடர்ந்து சுருக்கப்பட்டு வருகிறது.
மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வி தற்-போது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பின்பற்றும் தாராளமய, தனியார்மய கொள்கைகள் நாட்டின் பிற பகுதிகளை போலவே மேற்குவங்கத்தையும் பாதிக்கிறது. ஆனால், இடதுமுன்னணி அரசு சுயேச்சையான மக்கள் நல்வாழ்வு பணிகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்-கொண்டு வருகிறது.
இந்தப் பின்னணியில்தான் மேற்குவங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பீடுநடை போட்டுவரும் இடது முன்னணி அரசின் சாதனைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
நிதி மற்றும் அதிகாரத்தை அடித்தட்டில் அழுத்தப்பட்டு கிடக்கும் வர்க்கப் பிரிவினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இடது முன்னணி அரசு செயல்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு என்பது வெறும் அலங்கார அமைப்பாக அன்றி மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. அதி-காரம் என்பது தலைமைச் செயலகத்தில் இருந்து கடைக்கோடி கிராம பஞ்சாயத்து வரை பரவலாக்கப்பட்டுள்ளது.
இடது முன்னணிஅரசு பொறுப்புக்கு வந்தவுடன் நிலச்சீர்திருத்தத்தை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முழுமையாக, முறையாக செயல்படுத்தியது. இதனால் கிராமப்புறங்களில் ஆதிக்க சக்திகளின் அதிகாரக் கோட்டை நொறுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் மேற்குவங்க கிராமங்களின் முகத்தோற்றம் மாறியது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வலுவான அடித்தளத்-தில்தான் கிராம மக்களின் வாழ்க்கை செழித்து வளர்கிறது. தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருவதோடு கூட்டுப் பேர உரிமை என்பது உண்மையான பொருளில் செயல்படுத்தப்படுகிறது.
உள்ளாட்சி மன்றங்களின் செயல்பாடு என்பது மக்களின் சேமநல பணிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், நிதி வழங்கப்பட்டுள்ளதால் சமூக அடித்தளம் மக்கள் வாழ்வுக்கான பலமான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.
நிலச்சீர்திருத்தம் காரணமாக வேளாண்மைத் துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் மேற்குவங்கம், தற்போது தொழில் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மதநல்லிணக்கத்திலும் மக்கள் ஒற்றுமையிலும் இந்தியாவிலேயே மேற்குவங்க மாநிலம் இரும்புக் கோட்டையாக எழுந்து நிற்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இடது முன்னணி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட மதக்கலவரங்கள் நடந்ததில்லை.
இடது முன்னணி அரசு லஞ்ச ஊழல் கறைபடியாமல் நாட்டுக்கே வழிகாட்டும் ஜோதியாக ஒளிவீசுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் முன்வைக்கும் மாற்றுப் பாதை எப்படிப்பட்டது என்பதை விளக்கும் நடைமுறை உதாரணமாக மேற்குவங்க இடது முன்னணி அரசின் கம்பீரமான பயணம் திகழ்கிறது. இந்தியாவுக்கான மாற்றுப் பாதையாக இதுதான் இருக்க முடியும். இருக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
என்.வரதராஜன்
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களின் மருந்து தேவைகளை - அதற்கான செலவுகளை மேற்குவங்க அரசு மானியங்கள் வழங்கி ஈடுகட்டுகின்றது. அதேபோல் அரசு பொது மருத்துவமனைகள் மூலமே மக்களின் தேவைகளை 80 சதத்திற்கு மேல் நிறைவு செய்-கின்றது. மத்திய மருந்து சேமிப்பு கிட்டங்கிகளில் அரசு மூலமே கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு, தன்னுடைய நிதி பங்கீட்டில் 7 சதத்தை மருந்துகளுக்காக மட்டும் செலவு செய்கின்றது.
எங்கும் எதிலும் தனியார்மயம் எனும் ஆதிக்கம் நிலவுகின்ற சூழலில் அரசு பொது மருத்துவமனைகளை சீர்படுத்தி மாநிலத்தில் 70 சதமான மக்களுக்கு மருத்துவ தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் (ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை) அடிப்படை மருந்துகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், தரக்கட்டுப்-பாட்டில் சமரசம் செய்யாமல் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றது.
மேற்குவங்கத்தில் மலை சார்ந்த பகுதிகள் கணிசமாக இருப்பதால் அம்மக்களுக்கான பிரத்யேக மருந்துகள் எந்நேரமும் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
என்.சிவகுரு
மேற்குவங்கத்தில் 1977ல் அமைந்த இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி இன்று வரை தொடர்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்து வருகிறது.
பொருளாதாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில அமைந்த கூட்டணி அரசு வளர்ச்சியையும், சமத்துவத்தையும் சமமாக பேணிவருகிறது.
1980-81 முதல் 1990-91 வரையிலான பத்தாண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டு வளர்ச்சி 4.8 அளவிற்கு படிப்படியாக உயர்ந்தது. 1993-94 முதல் 1998-99 வரையிலான 5 ஆண்டுகளில 6.8 விழுக்காட்டு வளர்ச்சியாக உயர்த்திய பெருமை மேற்குவங்க அரசுக்கு உண்டு. 1973-74ல் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் மக்களுடைய விழுக்காட்டு அளவு 63.43ஆக இருந்தது. 1999-2000ம் ஆண்டில் இந்நிலை மாறி வறுமையின் அளவு 27.2 விழுக்காடாக வெகுவாக குறைந்தது. ஊரகப் பகுதிகளில் இதே காலகட்டத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் விழுக்காடு 73.16ஆக இருந்து 1999-2000ல் 31.85ஆக குறைந்தது.
நடுவண் அரசின் 10வது ஐந்தாண்டுத்திட்டத்தின் அறிக்கையில் மேற்குவங்கஅரசு வறுமையைக் குறைக்கும் அணுகுமுறையில் வெற்றி பெற்றிருப்பதை பாராட்டியுள்ளது.
நிலச்சீர்திருத்தத்தினை உரிய முறையில் கடைபிடித்து ஏழைகளுக்கு நிலம் வழங்கியதால் தான் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்த முடிந்துள்ளது என்று இவ்வறிக்கை பாராட்டியுள்ளது.
1991ம் ஆண்டு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையை நடுவண் அரசு மாநில அரசுகளின் ஒப்புதலையோ, ஆலோசனையையோ பெறாமல் நடைமுறைப்படுத்தியது.
பெரும்பான்மையான ஏழை மக்கள் சார்ந்து நிற்கும் துறையுமான வேளாண்மை துறையில் பொது முதலீடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட (1997-2002) காலத்தில் இந்தியாவின் வேளாண் துறையின் வளர்ச்சி இலக்கு 3.9 விழுக்காடாக அமைவதற்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2.06 விழுக்காட்டு அளவையே இந்திய அளவில் எட்டிப்பிடித்தது. மாநிலங்களுக்கிடையே இந்த இலக்கினை எட்டுவதில் பல ஏற்றஇறக்கங்கள் காணப்பட்டன. ஆனால் மேற்குவங்க மாநிலத்தில நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 1980லிருந்து 2000 வரை முற்போக்கான வளர்ச்சியை எட்டி இருந்தது.
இக்காலக்கட்டத்தில் வேளாண் துறையின் பங்கு நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.99 விழுக்காட்டு அளவிலிருந்து 5.37 விழுக்காட்டு அளவுக்கு உயர்ந்தது.
இந்தியாவின் வளர்ச்சி அளவு 1.90 விழுக்காடாக இருந்த இக்காலக்கட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி 2.8 விழுக்காடாக அமைந்தது. அகில இந்திய சராசரி வளர்ச்சியைவிட அதிகமாக இருந்தது.
மு.நாகநாதன்
அங்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை இடது முன்னணி அரசு உறுதிப்படுத்தியது. மதச்சார்-பின்மைக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டது. நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள், தீவிரமாகவும், சீராகவும் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவில் வேறு எங்குமே காணமுடியாத அளவிற்கு உள்ளாட்சித்துறை ஜனநாயகப்படுத்தப்பட்டு அவை உள்ளாட்சி அரசாங்கங்களாக செயல்படும் அளவிற்கு அதிகாரங்களும், நிதி ஆதாரங்களும் ஏற்படுத்தப்பட்டன. விவசாய வளர்ச்சியில், உணவுப் பற்றாக்குறை நிலவிய மாநிலத்தை கூடுதல் உற்பத்தியோடு நாட்டின் பிற பகுதிகளுக்கும் உணவு தானியங்களை வழங்கக்கூடிய அளவிற்கு நாட்டிலேயே முதலிடமாக நிறுவப்பட்டது.
மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்துவந்த நிலையிலும், தொழில் வளர்ச்சியில் பெரும் முன்-னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள். இவையெல்லா-மாகச் சேர்ந்து அந்த மாநில மக்களின் பொருளா-தாரத்தில், வாழ்க்கை நிலைமைகளில், சமூகப் பண்பாட்டில் முற்போக்கான மாற்றங்களை கொண்டு வந்தன.
இதேபோல், அங்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கியமான நடவடிக்கை, குத்தகை/வார விவசாயிகள் 15 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டதாகும். மேற்குவங்கத்தின் விவசாயக் குடும்பங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இவர்கள். இவர்களது கையில் 11 லட்சம் ஏக்கர் நிலம் உறுதியாக்-கப்பட்டு அதிலிருந்து ஒருபோதும்
அவர்களை வெறியேற்ற முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதன் பலனாக இன்று, இரண்டரை ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை உள்ள சிறிய விவசாயி-களின் கையில், மாநிலத்தின் மொத்த விளை-நிலத்தில் 84 சதவீதம் வரை இருக்கிறது. அகில இந்திய அளவில் 45 சதவீத நிலம் தான் சிறிய விவசாயிகளிடம் இருக்கிறது என்பதை வைத்து பார்க்கிறபோது மேற்குவங்கத்தின் சாதனை புரியும்.
இந்த நிலங்கள் யாருக்கு வழங்கப்பட்டன என்பது இன்னும் முக்கியமானது. நிலம் பெற்றவர்களில் 56 சதவீதம் பேர் தலித்துகளும் பழங்குடி மக்களுமாவர்.
அது மட்டுமல்ல, இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு கூட்டுப்பட்டாக்கள் வழங்கப்-பட்டுள்ளன. 1 லட்சத்து 57 ஆயிரம் பெண்-களுக்கு தனிப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு சிறுபான்மையினராகிய இஸ்லாமிய மக்களுக்கும் இந்த உபரி நிலங்கள் வழங்கப்பட்டன. இன்று மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் உள்ள இஸ்லாமிய மக்களில் 10 சதவீதம் பேர் நிலச்-சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.
புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2005--2006ஆம் ஆண்டில்கூட 30 ஆயிரம் ஏக்கர் நிலம் உழைக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. உண்மையான நிலச்சீர்திருத்தம் என்பது ஒரு தொடர் இயக்கமாக மேற்குவங்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்குவங்கத்தில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட இந்த உள்ளாட்சிகள் மூலமே செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான். அந்த அளவிற்கு உள்ளாட்சிகளுக்கு அங்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. யாரிடம் பினாமியாக நிலம் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது, கையகப்படுத்தப்பட்ட நிலம் யாருக்கு தரப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது எல்லாம் உள்ளாட்சிகள்தான். இந்த விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி கிடைக்க ஆவன் செய்வதும் பஞ்சாயத்துக்கள்தான். அரசு கொண்டுவருகிற ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவானாலும் அதனை செயல்படுத்துகிற பொறுப்பு உள்ளாட்சிகளுக்கே உரியது.
1978க்கு முன், உள்ளாட்சிகளில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் நிலப்பிரபுக்களும், பணக்காரர்களும்தான். 1978க்கு பிறகு இந்த நிலை மாறியது. ஏழை, எளிய விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்தான் மிகப் பெரும்பான்மையினராக பஞ்சாயத்து நிர்வாகங்களில் அமர்ந்தார்கள். புதிய வர்க்கப் பகுதியினர் பஞ்சாயத்து ஆட்சிக்கு வந்தது புதிய மாற்றங்களுக்கு வித்திட்டது. பஞ்சாயத்து அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்து அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது மற்றொரு முக்கியமான சாதனை.
மேற்குவங்கம் ஒரு பார்வை
பரப்பளவு : 88,752 சதுர கி.மீ.
மக்கள் தொகை : 8,02,21,171
ஆண்கள் : 4,14,87,694
பெண்கள் : 3,87,33,477
கிராமப்புறங்களில் வசிப்போர் : 5,77,34,690 (71,.97%)
நகர்ப்புறங்களில் வசிப்போர் : 2,24,86,481 (28,03 %)
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் : 17,84%
(இந்தியா 21,34%)
மக்கள் தொகை அடர்த்தி
ஒரு சதுர கிலோமீட்டருக்கு : 904 பர்
(‘இந்தியா 314 பேர்)
கிராமப்புற அடர்த்தி
ஒரு சதுர கிலோமீட்டருக்கு : 676 பேர்
நகர்ப்புற அடர்த்தி
ஒரு சதுர கிலோமீட்டருக்கு : 6798
ஆண்-பெண் விகிதம் : 1000 : 934
(2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பு)
எழுதப்படிக்கத் தெரிந்தோர் விகிதம் : 69.22%
(இந்தியா 65.38%)
ஆண்கள் : 77.58%
(இந்தியா 77.58%)
பெண்கள் : 60.22%
(இந்தியா 54.16%)
பிறப்பு விகிதம் : 1.93 %
மரண விகிதம் : 0.63%
குழந்தை இறப்பு விகிதம் : 4%
(இந்தியா 7 %)
சாகுபடியாகும் பரப்பளவு : 62%
காட்டுப்பகுதி (2004) : 15,52%
தேசிய நெடுஞ்சாலை : 1651 கி.மீட்டர்
மாநில நெடுஞ்சாலை : 3418 கி.மீட்டர்
முக்கிய விவசாய பொருட்கள் : அரிசி, கோதுமை, சணல், தேயிலை, கரும்பு,
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள், வெற்றிலை
கனிம வளங்கள் : நிலக்கரி, இரும்பு, சிலிகான், மங்கனீஸ், சுண்ணாம்புக்கல்
12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி 5ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள்
ஒவ்வொரு கிலோ மீட்டருக்குள்ளும் ஒரு ஆரம்பப்பள்ளி
ஆரம்பப் பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவிகளுக்கு இலவச பள்ளிச் சீருடை அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களுடைய தாய்மொழி மூலம் கல்வி
பள்ளிப்படிப்பிலிருந்து விடுபட்டு போகாமலிருப் பதற்காக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு
-அனைத்துப் பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர்
ஒவ்வொரு பள்ளியிலும் கழிப்பறை வசதி
1976ஆம் ஆண்டில் நடுத்தர, உயர்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 4623. இன்று அது 22,574 ஆகும்.
ஏழ்மையான மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்களின் படிப்பு தொடர்வதற்கான பொறுப்பை மாநில அரசாங்கம் ஏற்றுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|