மனிதச் சங்கிலி வலியுறுத்திய சமச்சீர்கல்வி
THE DEEP TRUST என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான அறக்கட்டளை சார்பில், தமிழகத்தில் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த தமிழக அரசு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 14.07.2007 அன்று சென்னை கடற்கரையில் மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்தியது. இதில் சென்னை நகரின் பல்வேறு வகை பள்ளிகளைச் சார்ந்த சுமார் 500 மாணவ மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர் இவ்வியக்கம் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. SFI, DYFI,AIDWA,TNSF, ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கு கொண்டது.
மனிதச் சங்கிலியின் ஒரு பகுதியாக கடற்-கரையில் உள்ள “கர்மவீரர்” காமராசரின் சிலைக்கு மாலை அணிவித்து “காமராசர் சமச்சீர் கல்விச்சுடர்” ஏற்றி சமச்சீர் கல்விக்கான பிரச்சாரப்பயணம் வழியனுப்பி வைக்கப்பட்டது. அச்சமயம், மாணவர்கள் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் வரை பிரச்சாரத்தை தொடர்வோம் என உறுதி மொழி மேற்கொண்டனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக மெரீனா வளாகம் பவழவிழா அரங்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ” சமச்சீர் கல்வி கருத்தரங்கில்”, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான அறக்கட்டளையின் அறங்காவலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.
தீர்மானம் 1
சீரான கல்வி சமமாக அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற இலட்சியத்துடன் தன் வாழ்நாளில் கிடைத்த தமிழ்நாடு அரசின் முதல்அமைச்சர் பொறுப்பை பயன்படுத்தி அதற்காக இறுதி வரைப்பபாடுப்பட்ட “கர்மவீரர்” காமராசர் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்துவரும் தமிழ்நாடு அரசு, இனி வரும் ஆண்டுகளில் “சமச்சீர் கல்வி நாளாக” அறிவித்து கடைப்பிடிக்க வேண்டும்.
தீர்மானம் 2
“சமச்சீர் கல்வி” முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரைகள் செய்யக்கோரி முனைவர் ச.முத்துகுமரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும்.
தீர்மானம் 3
பள்ளிக் கல்வியில் தற்போது உள்ள பல வகையான வாரியங்களை இணைத்து ஓரே வாரியம் அமைத்திட வேண்டும்.
தீர்மானம் 4
நான்கு வகையான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்ற நிலையை மாற்றி உயர்நிலைப் பள்ளிப்படிப்பின் இறுதியில் ஒரே வகையான பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.
தீர்மானம் 5
தற்போது உள்ள நான்கு வகையான பாடத்திட்டத்தில் எது சிறந்தது என்பது விவாதப்பொருள் அன்று. நான்கிலும் மனப்பாடம் செய்யும் முறைதான் உள்ளது. எனவே மாணவர்களைச் சுயசிந்தனை உடையவர்களாக, கேள்வி கேட்கக் கூடியவர்களாக, வகுப்பறையில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக உருவாக்கக்கூடிய சமச்சீரான, தரமான பாடத்திட்டம் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையிலான பொதுக்கல்வித்திட்டம் அமைந்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்மாநிலக் குழு உறுப்பினர் திரு. எஸ்.கே. மகேந்திரன் எம்.ஏல்.ஏ, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. பெ. சண்முகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவர் திரு.மா.ச. முனுசாமி, தமிழக தமிழாசிரியர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் புலவர். மா. செகதீசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் திரு.கு. பூபாலன், முகம் இலக்கிய இதழ் ஆசிரியர் திரு. முகம் மா.மணி, இந்திய ஜனநயாக வாலிபர் சங்கத் தமிழ் மாநிலச் செயலாளர் திரு. எஸ். கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கவிஞர்.
இரா.தெ.முத்து, சென்னை துறைமுகத் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் பா. இராமசந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் திருமதி. கே. வனஜா குமாரி, இந்திய மாணவர் சங்க தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. கே.தீபாஞ்சன், அரசு குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர். சி.ரெக்ஸ் சற்குணம், திரு. வே.மணி, திரு.எஸ். அருமைநாதன் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர். ச.முத்துக்குமரன் அவர்கள் அனை-வருக்கும் கல்வி என்ற கோரிக்கையிலேயே “அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுக்கல்வித்திட்டமும்” உள்ளடங்கியுள்ளது என்று கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|