மூன்றாவது மாற்றை நோக்கி...
பிரகாஷ் காரத்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக இந்தியாவை மாற்றும் முயற்சிகளையும் நவீன தாராளமயக் கொள்கைகளையும் உறுதியாக எதிர்த்து நிற்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதம் கொள்கிறது என்று 19 வது அகில இந்திய மாநாட்டு துவக்க உரையில் தோழர் பிரகாஷ் காரத் பேசினார். இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மதவெறிக்கும் எதிராக மூன்றாவது மாற்று ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று அவர் மேலும் தனது உரையில் கூறினார்.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக அகில இந்திய மாநாடு நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட முதல் கம்யூனிஸ்ட்டுகளான கய்யூர் தியாகிகள் தூக்குமரம் ஏறிய 65ஆவது நினைவு ஆண்டில் மாநாடு கூடியிருப்பதையும் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரையின் விவரம்:
“டெல்லியில் 2005இல் நடந்த 18ஆவது மாநாட்டுத் தொடக்க விழாவில், ஏகாதிபத்திய எதிர்ப்பில் புடம் போடப்பட்ட நமது ஆயிரக்கணக்கான தோழர்களோடு ஒப்பிடக்கூடிய ஒரே ஒரு தலைவரையாவது காட்ட முடியுமா என்று பாஜகவைக் கேட்டோம். இன்று வரையில் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்களிடம் அப்படிப்பட்டவர் யாரும் இல்லை’’
கய்யூர் தியாகிகளிடமிருந்து இன்றைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் வரையில் ஒரு நேர்கோட்டுத் தொடர்ச்சி இருக்கிறது. இராக்கில் அமெரிக்கா ஊடுருவிய இந்த ஐந்து ஆண்டுகளிலும் அந்த நாட்டின் மக்கள் பேரழிவையும், லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதையும், ஊனமாக்கப்பட்டதையுமே சந்தித்திருக்கிறார்கள். இராக்கின் எண்ணை வளங்கள் அமெரிக்காவால் சூறையாடப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் அவரது கூட்டாளிகளும் கூறிய பொய்கள் அம்பலமாகியுள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு காரணமாக உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு ஆதரவாகவும், முழு மூலதன மாற்றுக்குச் சாதகமாகவும் வக்காலத்து வாங்கிய இந்திய ஆட்சிப் பீடத்தில் உள்ள தலைவர்கள் இன்றைய நெருக்கடி நிலைமைகளிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
ஆனால், முந்தைய பாஜக கூட்டணி அரசு செயல்படுத்திய கொள்கைகளைத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் பின்பற்றுகிறது. ஒரே வித்தியாசம், முன்பு அமெரிக்கா தனது ‘இயற்கையான கூட்டாளி’ என்று இந்தியாவை சொன்ன நிலைமாறி, இப்போது ‘போர்வியூகப் பங்காளி’ என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது.
வெளியுறவுக் கொள்கையையும், போர் வியூக நோக்கமுள்ள பிரச்சனைகளையும் இந்திய அரசியலில் மையமான விவாதப்பொருளாக மாற்றிய நியாயமான பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு. அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தமும், அணுசக்தி உடன்பாடும் அந்த ஒட்டுமொத்தக் கூட்டின் ஒரு பகுதிதான். அணுசக்தி உடன்பாட்டில் மேற்கொண்டு எந்த நடவடிக்கைக்கும் செல்ல முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன.
அமெரிக்காவின் போர்வியூக திட்டங்களில் இந்தியா சிக்கிவிடாமல் தடுப்பதற்கான போராட்டத்தைத் தொடர வேண்டியுள்ளது. இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய ஊடுருவலை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் கரங்கோர்க்க வேண்டும். இந்தியாவில் மதவெறி சக்திகள் பற்றி எச்சரித்த அவர், “ஆட்சியிலிருந்து பாஜக அகற்றப்பட்டு விட்டாலும், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தங்களது பகைமைப் பிரச்சாரத்தைத் தொடர்கின்றன.
பயங்கரவாதம், சமுதாயப் பிரச்சனைகள், பண்பாடு, அரசியல் எதுவானாலும் மதவெறி சார்ந்த, குறுகிய கண்ணோட்டத்திலேயே கையாள்கின்றன,’’ கண்டுபிடிக்க முடியும், புரிந்து கொள்ளவும் முடியும், ஆனால், பெரும்பான்மை சமூகத்தின் மதவாதம் ஒரு தேசியவாதமாக முன்வைக்கப்படுகிறது என்று ஜவஹர்லால் நேரு கூறினார். ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஜ்ஜியம் என்பதற்கான ஒரு சங்கேதச் சொல்தான் ‘கலாச்சார தேசியவாதம்’
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் சாதகமான கொள்கைகளைத்தான் நம்புகிறது. எனினும் தனது குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் மக்களுக்குச் சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் அவற்றில் சிலவற்றைச் சட்டமாக்கி செயல்படுத்தச் செய்ய முடிந்துள்ளது. ஆனால், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றிற்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்தியாவின் தனியார் வங்கிகளை எதற்காக அந்நிய நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்., காப்பீட்டுத் துறையில் எதற்காக அந்நிய நேரடி முதலீட்டுக்கு மேலும் திறந்துவிட வேண்டும் என்ற இடதுசாரிகளின் கேள்விகளுக்கு மத்திய அரசால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.
விவசாய நெருக்கடி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு ஆகிய இரண்டு முக்கிய பிரச்சனைகளுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தீர்வு காண முடியவில்லை. நாட்டின் வளர்ச்சிப்பாதைத் தடங்களும் தன்மைகளும் தவறானவை. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க, டாலர் கோடீஸ்வரர்களாக சிலர் காட்சியளிப்பதை ஏற்பதற்கில்லை.
ஒரு மாற்றுத் தளத்திற்கான கொள்கைகளை இடதுசாரி கட்சிகள் கடந்த நான்காண்டுகளில் முன்வைத்துள்ளன. அந்தத் தளம், சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கும், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும். “அமெரிக்காவுடனான போர்வியூகக் கூட்டையும், நவீன தாராளமயக் கொள்கைகளையும் எதிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சாடுகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காகப் பெருமிதம் கொள்கிறோம்’’
மூன்றாவது மாற்றுக்கான தேவை மிகவும் முக்கியமானதாக உணரப்படுகிறது. அது வெறும் தேர்தல் உடன்பாடாக அல்லாமல், மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்படும் தளமாக இருக்க வேண்டும். மக்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள், சமூக நீதி நடவடிக்கைகள், சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் இடதுசாரிகளோடு உடன்படக் கூடிய ஜனநாய, மதச்சார்பற்ற கட்சிகள் உள்ளன. அந்தத் தளம் நிச்சயமாக மதவெறி சக்திகளுக்கு எதிரானதாக இருக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|