உண்மை சம்பவம்: வாக்குமூலம்-2
ஆர்.நீலா
என் பேரு செல்வம். ஊரு அணைக்கட்டுக்குப் பேர் போன ஊரு. அம்மாவும் அப்பாவும் அந்தக் காலத்திலேயே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க... அதனால என் தாய்மாமனுக்கு எங்களைக் கண்டாலே ஆகாது. மாமா நகரக் கவுன்சிலரா வேற இருக்காரு. ஆளுங்கட்சி வேற... மாமாவுக்கு ஒரு பொண்ணு காலேஜ்லே படிச்சுக்கிட்டிருந்தது.
அப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு அந்தப் பொண்ணு மேல லவ்வுகிவ்வெல்லாம் வரல.. ஆனா அந்தப்பொண்ணு என் பிரண்டு பிரகாஷ்ராஜை லவ் பண்ணிச்சு. இவனுக்குப் பிரியமிருந்தாலும் மாமாவை நினைச்சு ரொம்பவும் பயந்தான். நானும் என்னோட இன்னொரு பிரண்டு கேசவனும் அவனுக்குத் தைரியம் சொன்னோம்.
நான், பிரகாஷ்ராஜ், கேசவன் எல்லோருமே நைட்டு கடைபோட்டு இனிப்புப் போளி விக்கிறவங்க அவங்க ரெண்டு குடும்பமும் என் குடும்பத்தை விட கொஞ்சம் பரவாயில்லை. எனக்குத்தான் ரொம்பக் கஷ்டம். அப்பா ரெண்டு வருசத்துக்கு முந்தியே சீக்கு வந்து செத்துப்போனாரு ரெண்டு தங்கச்சி, வயசான அம்மா, சீக்காளி அத்தைன்னு நாலு உசிரு என்னைய நம்பித்தான் இருக்குது. ஆனா என் பிரண்டு பிரகாஷ்ராஜியும் கேசவனும் எம்மேல உசிரா இருப்பாங்க. எனக்கொரு கஷ்டமுன்னா உசிரையே கொடுப்பாங்க. அவங்களுக்கு நானும் உண்மையா இருக்கணுமில்லே அப்படித்தான் பிரகாஷ்க்கு நான் இருக்கேண்டா என்று தைரியம் சொன்னேன்.
அப்புறம் இந்த விசயம் மாமாவுக்கு எப்படியோ தெரிஞ்சுபோய் பாண்டீஸ்வரிக்கு வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாரு. பிரகாஷ்ராஜ் ஒரு நட்ட நடுராத்தில வந்து என்னைய எழுப்பினான். கூடவே கேசவனும் இருந்தான், அம்மாவுக்குத் தெரியாம வெளில எழுந்து வந்தேன், வெளியே பாண்டீஸ்வரியும் நிக்கிது.
எல்லோரும் சேர்ந்து முடிவுபண்ணி மெட்ராசுக்கு பஸ் ஏறிட்டோம். அங்கே எங்க பிரண்டு செல்வம் இருந்தான் (அவன் பேரும் செல்வம் தான்) அவன் உதவியோட ‘காதல்’ படத்திலே வர்றமாதிரி ஒரு கோயில்லே பிரகாசுக்கும், பாண்டிக்கும் கல்யாணம் பண்ணிட்டோம். ஊருக்குப் போன் பண்ணி தங்கச்சிக்கிட்ட மட்டும் விபரம் சொன்னேன். தங்கச்சியும் அப்பப்போ போன் பண்ணிச்சு ஊரே கொந்தளிப்பா கெடக்குதாம். மாமாவும் அவரோட ஆளுகளும் வந்து அப்பப்போ மெரட்டுறாங்களாம். ரொம்பக் கேவலமா அம்மாவையும் தங்கச்சிகளையும் பேசுறாங்களாம். அம்மா போன் பண்ணினா ஒரே அழுகைதான் என்னை அந்தப் பக்கமே வந்துரக் கூடாதுன்னும் வந்தால் மாமா வெட்டிப் போட்டுருவாருன்னும் அழுகையோட சொல்லும். அதனால ஒரு மாசம் வரைக்கும் நாங்க யாரும் ஊர்ப்பக்கமே தலை காட்டலே...
காதல் ஜோடிங்க கல்யாணம் பண்ணின உடனே பாண்டிச்சேரிக்கு இன்னொரு பிரண்டு வீட்டுக்குப் போயிட்டாங்க. எங்களுக்கு ஊருக்குப் போகவே பயமா இருந்தாலும் பொழப்புன்னு ஒண்ணு இருக்கே. பணக்கஷ்டம் வேற என்ன ஆனாலும் சரின்னு நானும் கேசவனும் ஊருக்குத் திரும்பி வந்தோம். மறுநாளே போலீசு வந்து அரஸ்ட் பண்ணிருச்சு.
என்ன காரணமுன்னு கேட்டதுக்கு நாங்க நகைக்கடைய ஒடைச்சு நகையத் திருடிட்டோமுன்னு சொன்னாங்க நகையக் கொண்டாந்து தரச்சொல்லி அடிச்சாங்க இருந்தாத்தானே கொடுக்க? அதனாலே இதை ஒத்துக்கவே மாட்டோமுன்னு அத்தனை சித்திரவதையையும் தாங்கிக்கிட்டிருந்தோம்.
நகைக்கடை திருட்டும் நடந்த ஒண்ணுதான். அது நடந்து மூணு நாலு மாசமிருக்கும். அப்போதெல்லாம் நாங்க ஊரிலே தான் இருந்தோம். ஆனா இத்தனை நாள் கழிச்சு இந்தப் பழியை எங்கமேல ஏன் போடணும்? காரணம் இதுதான்?
என் மாமாவுக்கு தன் பொண்ணோட காதலையும் கல்யாணத்தையும் சட்டப்பூர்வமா சந்திக்க முடியல. காரணம் அவர் பொண்ணு பாண்டீஸ்வரி அப்பனை விடவும் பிடிவாதக்காரி. விபரமில்லாமல் அவளோட மோதினா அவர் மூக்கு தான் உடையும். அதனால அவர் கோபம் முழுக்கவும் எங்க பக்கம் திரும்பிருச்சு... போலீசத் தூண்டிவிட்டுட்டாரு. போலீசும் செய்யாத குற்றத்தை எங்கமேல சுமத்தி கைது செஞ்சுருச்சு.
அதில ஒரு போலீசு சொன்னாரு, “நீங்க இதைச் செய்யலைங்கறது எங்களுக்கும் தெரியும் வெளில இருந்தா உம்மாமன் உன்னைப் போட்டுத் தள்ளிருவான்... உயிரைக் காப்பாத்தத்தான் இப்படிப் பண்ணினோமுன்னு சொன்னாரு. அவங்க சொல்றதும் சரியானது தான்.. ஏன்னா எம்மாமன் குணம் என்னைவிட அவங்களுக்கு நல்லாவேத் தெரியும். நாங்களும் உயிருக்குப் பயந்து இங்க வந்துட்டோம். ரெண்டு வருசமாச்சு இன்னிக்குத்தான் ரிலீஸ் ஆகி ஊருக்குப் போயி குடும்பத்தை பாக்கறதை விட பிரண்டு பிரகாஷ்ராஜைப் பாக்கத்தான் ரொம்ப ஆவலா இருக்கோம். அவன் இங்கே வரேன்னு லெட்டர் போட்டிருந்தான் நாங்க வேணான்னுட்டோம். சரி. நாங்க வரட்டுமா?
உலக வங்கிக்கு மாற்று வங்கி
லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் மேலும் முன்னேறியுள்ளனர். கடந்த அகில இந்திய மாநாட்டுக்குப் பிறகு பிரேசில், வெனிசுலா ஆகிய நாடுகளைத் தவிர பொலிவியா, நிகரகுவா, ஈக்வேடார் ஆகியவற்றின் தேர்தல்களிலும் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மெக்சிகோ நாட்டில் இடதுசாரி வேட்பாளர் முறைகேடுகளின் மூலம் தோற்கடிக்கப்பட்டார். எனினும் இடதுசாரிகளுக்கு பெரும் ஆதரவு அங்கு கிடைத்துள்ளது.
அமெரிக்கப் பெரு நிலப்பரப்புக்கான பொலிவாரிய மாற்று என்ற திட்டத்தை உயர்த்திப் பிடிப்பதில் கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகளுடன் பொலிவியாவும் இணைந்துள்ளது. சுதந்திர வர்த்தகப் பகுதிகளுக்கான அமெரிக்க ஒப்பந்தம் என்ற ஒன்றை 2003ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றிட அமெரிக்கா முயற்சி எடுத்தது. அமெரிக்க பெருநிலப்பரப்புக்கான உச்சகட்ட மாநாட்டில் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்துக்காக முன்மொழியப்பட்ட கால அட்டவணையையோ, ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையோ பிரேசில், வெனிசுலா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன. பாங்கோ டெல்சுர் என்ற பெயரில் தெற்கு நாடுகளுக்கான வங்கி ஒன்றை பிரேசில், வெனிசுலா, அர்ஜென்டினா, உருகுவே, பாகுவே, ஈக்வேடார் மற்றும் பொலிவியா ஆகிய ஏழு நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக இந்த வங்கி பணியாற்றத் திட்டமிட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|