தலையங்கம்
ஓகேனக்கல்
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தினசரி அரசியல் அழுத்தம் நிறைந்த பிரச்சினையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மாறியுள்ளது. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பேருந்துகள் எரிக்கப்படுவதும், தமிழ்ப் படம் ஓடும் தியேட்டர்கள் கொளுத்தப்படுவதும் பிரச்சினையின் உக்கிரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. தமிழகமும் இதற்கு சளைத்ததல்ல என்பதுபோல் எதிர்வினையாற்றி வருகிறது. நடிகர்களின் உண்ணாவிரதம் நேரடி ஒளிபரப்பாக தமிழ் உணர்வை ஊட்டியது. தங்களை தமிழர்கள் என்று உறுதிபடுத்த வேண்டிய நிர்பந்தத்தினை நடிகர், நடிகைகளுக்கு உருவாக்கியது. திடீரென அம்மையார் ஜெயலலிதா வெளிநடப்பு செய்வதற்காக சட்டமன்றம் சென்று திரும்புகிறார். இந்த பரபரப்பின் துவக்கத்தீயை உருவாக்கியது பாரதிய ஜனதா கட்சி.
ஆசிரியர் குழு
எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா
ஆசிரியர்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
முகவரி:
ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003
[email protected]
ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500
|
பாரதிய ஜனதா கட்சி தேசிய தேர்தல் என்றால் ராமர் கோயில் பிரச்சினையையும், தமிழகம் என்றால் சேதுகால்வாய் திட்டத்தையும் எப்படி தனக்கு ஆதாயமாக பயன்படுத்துகிறதோ அப்படி கர்நாடகத்திற்கு ஒகேனக்கலை பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த கலவரங்களுக்கு அடி உரம் இட்டது. அது ஒரு தேசியக் கட்சிதானே தமிழகத்திற்கு எதிராக எப்படி பேசும் என்று சிலர் அப்பாவி போல கேட்கின்றனர். பிஜேபிக்கு தெரியும் தமிழகத்தில் தனது கடைக்கு இனி வியாபாரம் இல்லை என்று அதனால் தான் கொஞ்சம் வியாபாரம் நடக்கும் கர்நாடகத்தையாவது கவனிக்கலாம் என்று முடிவு செய்து விட்டது. எடடியூரப்பா இனவெறி பேச்சை இல.கணேசனும் நியாயப்படுத்த முயல்கிறார். தமிழக வளர்ச்சி பணியில் பிஜேபிக்கு எப்போது அக்கறை இல்லை என்பதற்கு சமீபத்திய இரண்டாவது உதாரணம் இது. முதல் உதாரணம் சேது கால்வாய் திட்டத்தை முடக்க செய்த சதி.
தமிழகத்திற்கு சொந்தமான பகுதியான ஒகேனக்கலில் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மத்திய அரசின் அனுமதியுடன், கர்நாடக அரசு ஒப்புதலுடன் ஜப்பான் நாட்டின் ரூ. 1334 கோடி நிதி உதவியுடன் தருமபுரி, கிருஷ்ணகிரி மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டமாகும். இந்த இரண்டு மாவட்டங்களிலும் 35 லட்சம் மக்கள் இந்த திட்டத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். இம்மாவட்டங்களில் உள்ள நிலத்தடிநீரில் ப்ளோரைடு எனும் இரசாயனம் கலந்துள்ளது, இதை பருகினால் கருச்சிதைவு, முட்டி வீங்குதல், பற்கள் கறை படிந்து வெளிரிப்போகுதல் போன்ற நோய்கள் உருவாகும்.
எனவே உயிர்ஆதார பிரச்சினையான இரண்டு மாவட்ட மக்களின் தண்ணீர்த் தேவையை கூட புறக்கணிக்க கர்நாடக அரசியல்வாதிகள் திட்டமிட்டு அதை அரசியலாக மாற்றுவதும், மக்களை மோத விடுவதும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்துத்தான். எந்த கட்சி கர்நாடக மக்களுக்கு ஆதரவான கட்சி என்பதில் பிரச் சினை துவங்கியது. மதவெறியை மூலதனமாகக் கொண்ட பிஜேபி இன வெறியையும் தூண்டிவிட்டது. இன்று அங்குள்ள இடதுசாரி கட்சிகளை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதாயம் தேட அலைகின்றன.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இரு மாநில ஆட்சியாளர்களுடன் உடனடியாக பேசி பதற்றத்தை தவிர்க்கவும், சுமூக ஏற்பாட்டினைச் செய்யவும் முயல வேண்டும். ஆனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்னா திட்டத்தை அமுல்படுத்த தேர்தல் வரை பொறுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவருடைய பொறுப்பற்ற பேச்சின் சாரம் அங்கு தேர்தல் நடந்து அவர் ஆட்சிக்கு வந்து பிரச்சினையை தீர்ப்பேன் என்பதாகும். இதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது.
ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|