காஷ்மீர் சிக்கலில் வீணாகும் ஆற்றல்
பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன : ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண் விரயம் செய்து வருகிறோம்.
ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே உண்மையான பிரச்சினை. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள். காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை.
காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு -லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் -அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும்.
-டாக்டர் அம்பேத்கர் (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), 1322)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|