யாழன்ஆதி கவிதைகள்
குமைந்து வெளியேறும் கண்ணீர்
கோபத்தால் மாறுகிறது நெருப்பாய்
அணைக்கவியலா வெம்மையில்
எழுகின்ற பக்கமெல்லாம் தெரிகிற
உயிரின் வலியில் துவழ்கிறது மனம்
எதனினும் தணியாத தாகம்
உயிரைக் குடித்தே முடிகிறது
தொடுவானின் செஞ்சிவப்பாய் மாறி
கனறுகிறது ரத்தம் தோய்ந்த நிலம்
தீத்துண்டமாய் வெளியில் தகிக்கிறது
உயிரினைப் பறிகொடுத்த உடல்
அடித்து அடித்தே விரட்டும் ஆதிக்கம்
கொன்றே ஓய்கிறது இறுதியில்
வாழும் போதே துரத்தி ஒதுக்கி
ஒடுக்கி நுணுக்கி மதியாத கைகள்
செத்த பின்பு என்ன செய்யும்?
செத்த எலி ஒன்றை தூக்கி
வீசுதலைப் போல
வீசுவதைத் தவிர
மண் வீழ்ந்த வித்தொன்று
முட்டி மோதி கிளம்பும் நாளில்
பெரும்பாறைகளும் தூளாகலாம்
ஈழப்போராளிகளின் நினைவிடம்
புதைப்பதை விதைப்பதாகவே
நம்ப முடிகிற வாழ்வில்
பிறப்பும் இறப்பும்
வெறும்
எண்ணிக்கையாவதில்லை...
இவர் வந்தார்
அவர் சென்றார் என
முடித்துவிட
இயற்கை எழுதிய
முடிவுரையா இது?
ரத்தம் தோய்ந்ததாக
தசைகள் இறுகியதாக
எலும்புகள் உடைபட்டதாக
நரம்புகள் அறுந்ததாகவுமின்றி
வேறெப்படி எழுதிவிட முடியும்
விடுதலைப் போரின்
வரலாற்றை...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|