அழகிய பெரியவனின் கவிதைகள்
1. நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்
இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்
ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்
மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்
பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது
பேசாவிடில்
நான் சாவேன்
2. என் எண்ணத்தைப் பிட்டுனக்கு
தின்னத்தந்தேன் நேற்று
எண்ணம் உயிரைப் போன்றது
ஆகையால்
என் உயிரைத்தான் தந்தேன்
பின்பொருநாள்
என் கருத்தை செரிக்க முடியாமல்
உபாதை ஏற்பட்டதாகச்
சொன்னாய்
உனக்கு ஏற்கும் வகையில்
எந்த அளவுக்கு
என் சிந்தனையை
மசிய வேகவைத்துத் தர வேண்டும்
என்ற பக்குவம் தெரியவில்லை
உயிர்ச் சத்துகள்
வீணாகாமல் இருக்க
சில நேரத்தில் உணவு
அரைவேக்காட்டுப் பதத்தில்
இருக்க வேண்டும்
என்பது உனக்கும் தெரியும்
கருத்துச்சிக்கலும்
வயிற்றுச் சிக்கலும்
இப்படி முரண்படுகிறபோது
என்ன செய்யலாம் அன்பனே
எல்லாமும் ஏற்கும்படி
நீ உன்னை
பண்டிதம் பார்
எல்லார்க்கும் ஏற்கும்படி
நான் என்னை
மேலும் சமைக்கிறேன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|