வி.பி. சிங் மறைந்தும் ஆள்கிறார்
இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த ஒரு மனிதரின் மரணம், இந்த சமூகத்தில் மன ரீதியான எந்த உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவரை நன்றாகப் புரிந்து கொண்ட பார்ப்பன ஊடகங்கள் அவரை புதைத்தன. இந்தத் தருணத்தில் சமூக நீதி மண் என்று சொல்லப்படும் தமிழ் நாட்டிலும் நிலவும் மவுனத்தைக் களைய, சென்னை புக் பாயிண்ட் அரங்கில், கீற்று இணையதளம், வி.பி. சிங் நினைவேந்தல் நிகழ்வை 14.12.2008 அன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில், ஓவியா, அ. மார்க்ஸ், ஞாநி, அதியமான், அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் "விடுதலை' ராசேந்திரன் : “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசாணையில் கையெழுத்திட்டபோது, அன்று வி.பி. சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான்தான் என்பதை, பிற்படுத்தப்பட்ட மக்கள் மறந்துவிடக் கூடாது. வி.பி. சிங் மண்டல் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்போது, அதை எதிர்த்து இந்தியாவில் பெரிய இயக்கம் நடைபெற்றது. "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை மட்டும் மண்டல் அறிக்கைக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட அருண் சோரியின் கட்டுரைகளை வெளியிட்டது. அதே போல, அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது வாஜ்பாய் வி.பி. சிங்கை நேரில் சந்தித்து, நீங்கள் 27 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டு வரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்தால், அடுத்த நிமிடமே ரத யாத்திரையை நிறுத்துகிறேன் என்று பேரம் பேசினார். அதற்கு வி.பி. சிங், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறி தனது ஆட்சியையே இழந்தார். அப்போதுதான் நான் "மண்டலை' எடுத்தேன்; அவர்கள் "கமண்டல'த்தை எடுத்தார்கள் என்று வி.பி. சிங் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அவர் பேசிய பேச்சு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பேச்சை தொடங்கும் போதே பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் நன்றி சொல்லிதான் தொடங்கினார். அதில் இந்த நாட்டு மக்களுக்காக சமூக நீதி கதவை திறந்துவிட்டிருக்கிறேன். இங்கு வாக்கெடுப்பில் இரண்டு அணிகள் உள்ளன. ஒன்று சமூக நீதி வேண்டும் என்று சொல்கின்ற அணி; இன்னொன்று வேண்டாம் என்று சொல்கின்ற அணி. நான் சமூக நீதி வேண்டும் என்பதை முன்வைத்து நம்பிக்கை வாக்கு கேட்கிறேன். இதன் மூலம் சமூக நீதி வேண்டும் என்பவர்கள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
ஆனால், இடஒதுக்கீடு கூடாது என்று நாடாளுமன்றத்தில் ராஜிவ் காந்தி 10 மணி நேரம் பேசினார். ராஜிவ் காந்தியின் குரலும் அத்வானியின் குரலும் ஒரே மாதிரியாக நாடாளுமன்றத்தில் அன்று ஒலித்தது. அவர்கள் மட்டுமல்ல; தமிழ் நாட்டில் அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் இருந்த அ.தி.மு.க.வும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. நான் என்ன தவறு செய்துவிட்டேன், இந்த நாட்டிலே இருக்கக் கூடிய அதிகார அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் உள்ள கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தில் பங்கேற்கும் போதுதான் - அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எந்திரமாக இந்த அரசு மாறும். எனவே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார். 27 சதவிகித இடஒதுக்கீடு இருக்கும் வரை, வி.பி. சிங்தான் ஆட்சி செய்து கொண்டிருப்பார். இந்த இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதுதான் வி.பி. சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை.''
முன்னதாக, ஆதவன் தீட்சண்யா, இந்தியா டுடே பத்திரிகையை ஒரு பத்திரிகையாகவே மதிப்பதில்லை என்று பேசத் தொடங்கி, அவ்விதழைக் கடுமையாகத் தாக்கினார். ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், “அம்பேத்கர் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய எழுத்துக்கள், பேச்சுக்கள் அனைத்தும் நூல்களாக வெளியிடப்பட்டன. அதன் பின்புதான் அம்பேத்கர் யார் என்று தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும். அதுபோல, வி.பி. சிங்கும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பேசப்படுவார். ஏனென்றால் இந்தியாவில் 90 சதவிகித மக்கள் வாழ்க்கை பெறக் கூடிய மண்டல் அறிக்கையை, 10 ஆண்டுகள் கிடப்பில் கிடந்ததை நிறைவேற்ற ஆணை பிறப்பித்தவர் அவர்.
“இன்றும் கையால் மலத்தை அள்ளி தோளில் கொண்டு போகிறான். எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மனித உரிமை என்று பேசுகிறவர்கள் எல்லாம் வாய் மூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மலம் அள்ளுபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியருக்கு உள் இடஒதுக்கீடு கிடைக்கிறதென்றால், அருந்ததியருக்கு கிடைக்காதா? நாங்கள் செய்யும் இழி தொழிலுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் இடஒதுக்கீடு கேட்கும்போது மட்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை என்று சொல்கிறார்கள். கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் நிதி உதவியோடு நடக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டிலும் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் விகிதாச்சார அடிப்படையில் வகுப்புவாரி உரிமை சரியாக கிடைக்கும்'' என்றார்.
- நம் செய்தியாளர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|