Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஆகஸ்ட் 2008

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
அய். இளங்கோவன்

I.Ilangovam தலித் கிறித்துவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கிறித்துவ மதப் பீடங்களும்; தலித் - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகளும் இடையறாமல் குரல் கொடுத்து வருகின்றன; போராட்டங்கள் நடத்துகின்றன. இத்தகைய போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முனைந்து ஆதரிக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், அந்த மத அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரங்கட்டப்படுகிறபோது, நாம் மவுன சாட்சியாக இருக்க வேண்டியதில்லை. தோழமையைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் சில நெருடல்களையும், வருத்தங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

சாதிய சமூகமாக இருக்கும் இந்தியாவில், தங்களுக்குப் போதிய அங்கீகாரம் வேண்டும் என்றுதான் தலித் மக்கள் பிற மதங்களுக்கு மாறினார்கள். இந்து மதம் சுமத்திய ஜாதி - தீண்டாமை, கல்வி மறுப்பு, வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபட நினைத்தபோது ஆதரவு அளிக்கும் புகலிடமாக பிற மதங்கள் இருந்தன. கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், பவுத்தம் போன்ற சமத்துவ மதங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவற்றுள் கிறித்துவமும், இஸ்லாமும் பலம் பொருந்திய மாற்று மதங்களாக இங்கே இருக்கின்றன. பல நூறு கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் அவை நடத்துகின்றன. ஆனால் இம்மதங்களைத் தழுவிய தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இவர்கள் அளிக்கின்றார்களா? சட்டப்படி தான் நாங்கள் நடந்து கொள்கிறோம் என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் சமூகநீதிக் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதே நமது ஆதங்கம்.

தலித் மக்களின் நெடுநாள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவரும் அரசைக் கண்டிக்கும் கிறித்துவ, முஸ்லிம் அமைப்புகளும் தாங்கள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில், காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குகின்றனவா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அறிவாளிகளும், திறமையாளர்களும் மட்டும்தான் அரசு நிர்வாகத்துக்கும், ஆட்சிப்பொறுப்புக்கும் வேண்டும் என்றால், அங்கே பிரதிநிதித்துவம் என்கிற ஜனநாயகக் கருத்துக்கு இழுக்கு நேரும் என்கிறார் அம்பேத்கர். இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவமே அன்றி வேறல்ல. இந்நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தலித்துகளுக்கு இந்த 60 ஆண்டுகளாகப் போதிய பிரதிநிதித்துவத்தை ஏன் வழங்கவில்லை?

அரசு வேலைவாய்ப்பிலும், மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிக் கொண்டுள்ளது. இச்சூழலில் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் செயல்படுவதைப்போல இரு மடங்கு கூடுதலாக செயல்படுகின்றார்களா என மக்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் தேவையாக உள்ளது. அரசு நிர்வாகம் மற்றும் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத ஆயிரக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்று போராடும் அதே வேளை கிறித்துவர்களாலும், முஸ்லிம்களாலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு ஆகியவற்றின் நிலை குறித்தும் நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகத்தில் மட்டும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்திலுள்ள 67 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 69 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், மத சிறுபான்மையினர் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் 63 கல்லூரிகள் உள்ளிட்ட 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது ஏட்டளவில் தான் உள்ளது. குறிப்பாக, தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை. அரசு உதவிபெறும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைத் தவிர, எஞ்சியுள்ள எந்த மருத்துவ, பொறியியல், மருத்துவம் சாராத பட்ட / பட்டய வகுப்புகளிலும் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் இதோ:

அரசு உதவி பெறும் சுமார் 160 தனியார் கல்லூரிகளில் இருக்கும் மொத்தப் பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 9,866. இதில் 618 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் எவரும் இல்லை. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326. இவர்களில் 838 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினரோ ஒருவர் மட்டுமே. ஆக, மொத்தமுள்ள 15,192 (ஆசிரியர் - ஆசிரியர் அல்லாதோர்) பணியிடங்களில் ஒருவர் மட்டுமே பழங்குடி இனத்தவர். அதுவும் கூட பெருக்கும் பணியில் இருப்பவர். ஆசிரியர்களில் 30 பேர் இயலாதோர். 25 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 52 பேர் இயலாதோர். 42 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. மொத்தமுள்ள இந்த 15,192 பணியிடங்களில், 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. பார்க்க முடியாதவர்கள் பார்க்கிறார்கள்; நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று மேடை தோறும் மதப்பிரச்சாரம் செய்யும் கிறித்துவ கல்வி நிலையங்களின் உண்மை முகம் இதுதான்!

மேலும் இதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவெனில், அரசுக் கல்லூரிகளிலுள்ள மொத்தப் பணியிடங்கள் 4,915. அதே போல அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அரசு வழங்கும் 100 சதவிகித மானிய உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 9,866 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 618 பேர் மட்டுமே தலித்துகள். இட ஒதுக்கீட்டின்படி 9,866 பணியிடங்களில், 1,883 தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 1,265 தலித் விரிவுரையாளர் பணியிடங்கள் இத்தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமலேயே விடப்பட்டுள்ளன.

Dalit status in Minorities colleges
Dalit status in minorities colleges தமிழகத்தில் உள்ள 63 கல்லூரிகளில், சிறுபான்மை இனத்தவர்கள் அரசு உதவி பெற்று நடத்தும் 50 கல்லூரிகளில், ஒரு தலித் கூட விரிவுரையாளராக இல்லை. இப்படி தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் 50 கல்லூரிகளில் 45 கல்லூரிகள் மத சிறுபான்மையினரால் நடத்தப்படுபவை. 14 கல்லூரிகளில் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு தலித் விரிவுரையாளர் மட்டுமே பணியில் உள்ளார். ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்' என்று உரக்க பேசும் கிறித்துவ, முஸ்லிம் கல்லூரிகளில், வருத்தப்பட்டு வருகிற தலித் மக்களுக்கு எந்த இளைப்பாறுதலும் தரப்படுவதில்லை. எங்களிடம் வராதீர்கள் என்ற நிலைதான் உண்மையில் நிலவுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இத்தகைய அவல நிலை தொடருவது வெட்கக்கேடானது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியதுமாகும். பெரும்பான்மை சமூகத்தினர் நடத்தும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஓரளவுக்காவது கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளிலோ இடஒதுக்கீடு முற்றாக இல்லை. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தலித் மக்களுக்கும் தலித்துகளின் வேலைவாய்ப்புக்கும் எதிரானøவயா? என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 30(1) இன் முன்பு அதே அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 16(4) 46 மற்றும் 335 ஆகியவை செல்லத்தக்கவை அல்லவா?

மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்ட இடஒதுக்கீட்டுச் சட்டம், இந்திரா சகானி - எதிர் - மய்ய அரசு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவாறு ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது : 1) இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2) 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது பின்னடைவுப் பணியிடங்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 3) பணி நியமனம் செய்யும் ஆண்டில் உள்ள பணியிடங்களையே இடஒதுக்கீட்டிற்கு உட்படுத்த வேண்டும் (மொத்தப் பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அலகாகக் கொள்ளக்கூடாது). 4) பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை (நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நீங்கலாக). 5) சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்' நீக்கப்பட வேண்டும்.

இத்தீர்ப்பினால் பல மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு, 50 சதவிகிதத்திற்குக் குறைக்கப்பட்டது (தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் உள்ள இடஒதுக்கீடு தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது). இத்தீர்ப்புரையால் பதவி உயர்வில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இருந்த இடஒதுக்கீடு இல்லாமல் போனது. இந்திரா சாகானி வழக்கின் தீர்ப்புரை ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்ய அரசமைப்புச் சட்டம் 1995 மற்றும் 2000த்திலும் திருத்தப்பட்டது. அரசமைப்பு (திருத்தச்) சட்டம் 1995 இன் மூலம், தலித் மற்றும் பழங்குடி இனத்தவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 16(4ஏ) சேர்க்கப்பட்டது:

‘16(4அ) Nothing in this article shall prevent the state from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4) or clause (4A) as a separate class of vacancies to be filled up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty percent reservation on total number of vacancies of that year’

1995 மற்றும் 2000 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு குறித்த வழக்குகளின் தீர்ப்புரைகளில் சொல்லப்பட்ட தடைகளுக்கு நிவாரணம் அளிப்பதாக இருந்தன.

இந்திரா சகானி - எதிர் - மய்ய அரசு வழக்குத் தீர்ப்புக்குப் பின்னர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இனவாரி இடஒதுக்கீட்டினை எதிர்த்து எண்ணற்ற வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றான டி.எம்.ஏ பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடக அரசு (2003)) வழக்கில், பதினோறு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்வியை வர்த்தகப் பொருளாக, அதாவது கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(g)இன்படி வாணிபம் செய்யும் அடிப்படை உரிமை எனத் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பின்படி அரசு உதவி / மானியம் பெறாத எந்த ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டிலும், அரசு தலையிட முடியாது. இக்கல்வி நிறுவனங்களில் இனவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவோ, அரசு இடங்கள் இவை எனவோ எதையும் கோர முடியாது. இத்தீர்ப்புரை கல்வி வாணிபத்தை அங்கீகரித்தது மட்டுமின்றி, கல்வி தருவது அரசின் கடமை என்ற நிலையையும் மாற்றியமைத்தது. அரசும் கல்வி தரும் தன் அடிப்படைப் பொறுப்பிலிருந்து விலகி இத்தீர்ப்புரைக்கு ஆதரவாக இருந்தது.

மோசமான விளைவுகளுக்குக் காரணமான இத்தீர்ப்புரை பற்றி எந்த ஓர் அரசியல் கட்சியும், சமூக நீதி இயக்கமும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. மக்களுக்கு கல்வி தரும் பெரும் பொறுப்பைப் பற்றி கடந்த 16 ஆண்டுகளாக கவலையற்றவர்களாகவே இவர்கள் உள்ளனர். டி.எம்.ஏ. பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடகா அரசு வழக்கின் தீர்ப்பே 2002ஆம் ஆண்டு முதல் புற்றீசல் போன்ற சுயநிதி பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் தோன்ற முதன்மைக் காரணமாகி இருக்கிறது.

டி.எம்.ஏ. பாய் வழக்கினைத் தொடர்ந்து இஸ்லாமிக் அகாடமி ஆப் எஜுகேஷன் - எதிர் - கர்நாடக அரசு வழக்கில் (2003), அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சுயநிதிக்கல்வி நிறுவனங்களில் அரசு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றும்வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த இனவாரி இட ஒதுக்கீடு தொடரலாம் என தீர்ப்புரைத்தது. இந்தத் தீர்ப்புரையைத் தொடர்ந்து பி.ஏ. இனாம்தார் - எதிர் - மகாராட்டிரா வழக்கில், சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்புரைத்தது. இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள் அடங்கிய கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்றைக்குமே இல்லாமல் ஆகியிருக்கிறது.

இவ்வளவு பெரிய ஆபத்தினை சமூகம் எதிர்கொண்டுள்ளபோதும் இன்றைய அரசியல் கட்சிகள், மற்றும் சமூக நீதி இயக்கங்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் போலி அரசியல் முழக்கங்கள் மட்டும் தொடர்ந்தபடி உள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com