கேரளா இறக்குமதி நித்யாதாஸ்
தமிழ் ரசிகர்களை ரட்சிப்பதற்காக கேரளாவிலிருந்து மேலும் ஒரு அழகுப் பிசாசு வந்திருக்கிறது, நித்யாதாஸ் என்ற பெயரில்.
தமிழ் சினிமாவிற்கு கேரளா தந்த கொடையாக நிறைய பேரைச் சொல்லலாம். இயக்குநர்கள், பாடகர்கள் என கோலிவுட்டில் இருக்கும் கேரள தொழில்நுட்பக் கலைஞர்களின் லிஸ்ட எந்தளவிற்குப் பெரியதோ, அதே அளவிற்கு பெரியது அங்கிருந்து வந்த நடிகைகளின் லிஸ்ட்டும்.
அம்பிகா, ராதா, நதியா, மீரா ஜாஸ்மின், நவ்யா, கோபிகா, அசின், மல்லிகா, ரேணுகா என நீளும் அந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நித்யாதாஸ். ‘மனதோடு மழைக்காலம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி ஆகிறார் நித்யா.
நித்யா தாஸ் மலையாளத்தில் அறிமுகமான படம் ‘பறக்கும் தளிகா’. (இந்தப் படம்தான் தமிழில் ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது). திலீப்க்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் ஹிட். இதனையடுத்து ‘கண்மாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ஒரு ரவுண்டு முடித்து விட்டு இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார்.
‘மனதோடு மழைக்காலம்’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது ஷாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‘தினந்தோறும்’ பட இயக்குநர் நாகராஜ் இந்தப் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ‘அற்புதம்’ படத்தை இயக்கிய அற்புதன் தான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
‘மனதோடு மழைக்காலம்’ ரிலீஸானால், தமிழ் ரசிகர்களின் மனதில் இதமான சாரலாய் நுழைந்து விடுவேன் என்று சொல்லும் நித்யாதாஸ் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார்.
பின்னே, தமிழில்தானே டப்பு அதிகம்!
|