ஆங்கிலத்தில் இருந்து சுட்டேனா? ஏ.ஆர். முருகதாஸ்
கஜினி படத்தின் கதை ஆங்கிலப் படமொன்றின் தழுவல் என்று கூறப்படும் குற்றச்சாட்டை படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முற்றிலும் நிராகரிக்கவில்லை.
“ஆங்கிலப் படத்தை இன்ஸ்பிரேஷனுக்காக எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அதை அப்படியே தமிழில் தரவில்லை. இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி முழுவதுமாக மாற்றினேன். அதனால்தான் சாதாரண ரசிகனும் கஜினியை ரசிக்கிறான்.
கஜினி கதையை முன்னணி ஹீரோக்கள் நிராகரித்ததாகக் கூறப்படுவது தவறு. நான் கதை கூறிய ஹீரோக்களுக்கு நேரம் பொருந்தி வரவில்லை என்பதுதான் உண்மை.
சூர்யாவுக்கு கால்ஷீட் இருந்தது. அதனால் சேர்ந்து வேலை பார்த்தோம். இருவருக்குள்ளும் சாதிக்கும் வெறி இருந்தது. அது பிரமாதமா ஒர்க் அவுட்டாச்சு.
பெரிய படங்கள் என்று நான் திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக அமைந்து விடுகிறது. கஜினிக்கு 99 நாள்தான் படப்பிடிப்பு. ரமணாவை விட பட்ஜெட்டும் கம்மிதான். ஆனால் திரைக்கதை வலுவாக இருந்ததால் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடிந்தது.
அடுத்து ரஜினிகாந்த் சாரை வைத்து ஒரு படம் இயக்க ஆசை. வாய்ப்பு அமைய வேண்டும்.
இப்போது சிரஞ்சீவியை வைத்து ‘ஸ்டாலின்' என்ற தெலுங்குப் படத்தை இயக்குகிறேன். இது கஜினியின் ரீமேக் இல்லை. தெலுங்குப் படம் என்பதற்காக நான் காம்ப்ரமைஸ் எதுவும் செய்யவில்லை” என்கிறார்.
இந்தப் படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சும்மா ரூ.2 கோடிதான்.
|