‘அழகு மயில்’ வித்யா பாலன்
கேரள அழகு மயிலான வித்யா பாலன்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பான புதுவரவு. ‘பரினீதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்யாவை நோக்கிப் படையெடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
சர்ப் எக்செல் விளம்பரப் படத்தின் மூலம் மாடலிங்காக அறிமுகமானவர் வித்யா. தொடர்ந்து 25 விளம்பரப் படங்களில் நடித்தார். இருப்பினும் அவரது மனதில் வெள்ளித்திரை ஆசை விடாமல் தொடர்ந்து வந்தது. அவரது இந்த ஆசைக்கு விதை போட்டவர் ஷப்னா ஆஸ்மி. வித்யா காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி விழா ஒன்றுக்கு விருந்தினராக வந்திருக்கிறார் ஷப்னா ஆஸ்மி.
அப்போது அவருடன் உரையாடிய வித்யா, தனக்கான இலக்கு சினிமாதான் என்று முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இப்போது ஸ்டார் ஆகவும் ஆகிவிட்டார். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்திருந்தாலும், ‘பரினீதா’ படத்திற்காக வித்யாவுக்கு 40 ஸ்கிரீன் டெஸ்ட்டும், 17 மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டதாம்.
அதன்பின்புதான் வித்யா கதாநாயகியாக செலக்ட் ஆனார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. படத்தில் வித்யாவின் நடிப்பு அனைத்து பத்திரிகைகளிலும் சிலாகிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு சரியான போட்டி இவர்தான் என்பது பாலிவுட் ஜாம்பாவான்களின் கருத்து.
அதனால் இப்போது வித்யா பாலன் குடியிருக்கும் தெரு தயாரிப்பாளர்களின் போக்குவரத்தால் திண்டாடி வருகிறது. ஆனால், ஷப்னா ஆஸ்மியைத் தனது ரோல் மாடலாகக் கொண்டிருக்கும் வித்யா, படங்களைத் தேர்வு செய்வதில் பொறுப்புடன் செயல்படுகிறார்.
மலை போல் குவிந்த வாய்ப்புகளில் பொறுக்கி எடுத்து, எண்ணி மூன்றே வாய்ப்புகளை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதிகப் படங்கள் எனக்கு முக்கியமல்ல, முதல் படத்தில் கிடைத்த பெயரைத் தொடர்ந்து தக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம் என்கிறார் வித்யா.
வாழ்த்துக்கள். அப்படியே தமிழ் சினிமா பக்கமும் வந்து போங்க!
|