டிசம்பரில் தொடங்கும் ‘சிவாஜி’ படப்பிடிப்பு
டிசம்பர் 1ம் தேதி ரஜினி நடிக்கும் ‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்திலாவது ஐஸ்வர்யா ராயை ரஜினிக்கு ஜோடியாக்கி விட வேண்டும் என்று ரஜினி தரப்பில் இருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், ‘கால்ஷீட் நஹி’ என்று சொல்லிவிட்டார் ஐஸ். இதனையடுத்து அந்த சான்ஸ் தனக்குக் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தார் த்ரிஷா.
ஆனால், ஸ்ரேயாவைத் தனக்கு ஜோடியாக போடுமாறு ரஜினியே சொல்லிவிட்டதால் கதாநாயகி பிரச்சினைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது திரைக்கதையை மெருகேற்றும் வேலையில் ஷங்கர் தனது உதவியாளர்களுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரஜினியும் அவ்வப்போது கலந்து கொண்டு திருத்தங்கள் கூறி வருகிறார்.
படத்திற்கு வசனம் எழுதுவது எழுத்தாளர் சுஜாதா. இது அவருக்குத் திரையுலகில் வெள்ளிவிழா ஆண்டாகும். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இன்றளவும் வெற்றிகரமான வசனகர்த்தாவாக இயங்கி வருகிறார். தற்போது ‘சிவாஜி ‘முதல் கட்ட படப்பிடிப்பிற்கான வசனங்களைத் தயார் செய்வதில் சுஜாதா மும்முரமாக உள்ளார்.
மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மானும், வைரமுத்துவும் படத்திற்கான பாடல்களை சிரத்தையுடன் உருவாக்கி வருகின்றனர். ரஜினிக்கு இருக்கும் மாஸ் ஆடியன்ஸை மனதில் வைத்து இசையமைத்து வருவதாகக் கூறும் ரஹ்மான், முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம். பாடலைக் கேட்டு ரஜினி, ‘குட்’ சொல்லியிருக்கிறார்.
படப்பிடிப்பை டிசம்பர் 1ம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்குவதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பாக, கேரளாவிற்குச் செல்லவிருக்கிறார் ரஜினி. அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து மூலிகை மசாஜ் செய்து தனது உடலை மெருகேற்றவிருக்கிறார்.
பின்னே, கதாநாயகியுடன் தோன்றும் காட்சிகளில் தாத்தா மாதிரி தெரியக்கூடாதல்லவா?
|