Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
நான் கடவுள் - இந்துத்துவக் கொலைகள் புனிதமாக்கப்படும் அரசியல்
தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி
கௌதம சித்தார்த்தன்

ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதுகுறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டே இருக்கும். ‘நான் கடவுள்’ படம் பற்றிய ‘உலகத்தரமான’ செய்திகளும் ஓயாமல் வந்து கொண்டேதானிருந்தன.

படம் வெளியானதும் எளிய வாசக மன நிலையுடனும், உத்வேகத்துடனும் ஆர்வமாய் படத்தை எதிர் கொண்டேன். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அற்புதமான பின்னணி இசை, ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கும் ஒளிப்பதிவு எல்லாவற்றையும் மீறி படத்தின் அடிநாதமாக இயங்கும் ஒரு குரல் இந்துத்துவாவின் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்ததைக் கண்டு நான் முதலில் பெரும் வியப்படைந்தேன்.

Naan Kadavul இதற்குக் கதை கொடுத்து வசனம் எழுதிய ஜெயமோகன், (வெறும் வசனம் மட்டுமல்ல கதையும் இவருடையதுதான். இது குறித்து விரிவாக பின்னர்...) ஒரு இந்துத்துவா ஆசாமி என்று பல்வேறு விமர்சனங்கள் நவீன தமிழ் இலக்கிய தளத்தையே ஒரு காலத்தில் நாறடித்திருக்கின்றன. இப்பொழுது ‘ஜெயமோகன் ஒரு இந்துத்துவா ஆசாமி’ என்றால் நம்மை அறுதப் பழசாகப் பார்ப்பார்கள். அது ஒரு Cliche விமர்சனம். சரி. அவர் அதிலிருந்தெல்லாம் விலகி சீரிய படைப்பாளியாக, தமிழ் கூறு நல்லுலகை நல்வழிப்படுத்தும் சிந்தனைகளைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உள்மடிப்புகளாக வைத்திருக்கும் சில வசனங்களையும், காட்சியமைப்புகளையும் பார்த்தால் வியப்பாயிருக்கிறது. ஏனெனில், நவீன இலக்கிய தளத்தில் ஒரு சீரிய படைப்பாளி என்பவன் முற்போக்கான அம்சங்களில் கவனம் செலுத்துபவனாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்பவனாகவும் இந்துத்துவா போன்ற மத மாச்சரியங்களுக்கு எதிரான சமூகப் போராளியாகவும் இருப்பவன் என்று தானே நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன் இது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இந்தப் படத்தைப் பார்க்கும் எளிய வாசகனுக்குக் கூட இதிலுள்ள இந்துத்துவா தன்மை தெரியுமே, முற்போக்கு தளத்தில், இலக்கிய தளத்தில் உள்ள வாசகன் புரிந்து கொள்வானே என்றெல்லாம் பதறிப் போகவில்லை. மிகத் தெளிவாக, நிதானமாக, ஆணித்தரமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக அவரைப் பாராட்டவேண்டும். ஏனெனில், ஒரு போராளி என்பவன் எந்தத் தருணத்திலும் தான் சார்ந்த கருத்துக்களை செயல்படுத்துவதிலேயே முதன்மையாக இருப்பான் என்பது போராளிகள் பற்றிய பிம்பம். ஜெயமோகன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துக்களை செயல்படுத்தியிருக்கும் போராளி.

வெறுமனே இது ஒரு இந்துத்துவா படம் என்று மேலோட்டமாய் சொல்லாமல் காட்சி ரீதியாகவே பார்க்கலாம்:

காசி என்கிற அந்த நகரத்தைப் படமாக்கியிருக்கும் காட்சி ரூபங்கள் பார்வையாளனை வியக்க வைக்கின்றன. காசி பற்றிய படிமம் பிரம்மாண்டமாக நம்முடைய மனதுக்குள் கட்டமைக்கப்படுகிறது. திரும்பிய புறமெங்கும் காவி உடை தரித்த ஸ்வாமிகள், ஞானிகள், துறவிகள், பிராமணர்கள் என்று காசியின் ஜிகினா உலகம் விரிகிறது. திரும்பிய புறமெங்கும் சமஸ்கிருத ஸ்லோகங்களும், மந்திர உச்சாடனங்களும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து விரிவான விளக்கம் வருகிறது. ‘‘இந்த அகோரிகள் தன்னை சாமின்னு சொல்வாங்க. எரியும் பிணத்துக்கு முன்னாடி நின்னு இவர்கள் ஆசீர்வதிச்சா அடுத்த பிறவி கிடையாது. (அந்த ஆன்மா முக்கியடைந்து விடும்) ஆண்டவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கலாம் ஆனா அடுத்த பிறவியைத் தடுத்து நிறுத்தற சக்தி இவங்களுக்கு இருக்குது. யாருக்கு அடுத்த பிறவியைக் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும்.’’ என்றெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.

‘‘உனக்கு இந்தப் பிறவியிலிருந்து மோட்சமும் அடுத்த பிறவியிலிருந்து விடுதலையும் கிடைக்கட்டும்’’ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்துடன் ஒரு பிணத்துக்கு ஆசீர்வாதம் செய்கிறார் நாயகன் ருத்ரன். அவன் ஒரு அகோரி, சாதாரணமானவன் கிடையாது போன்ற பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகளுடன் அறிமுகமாகிறார்.

‘‘நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இவங்களுக்கு நல்லாவே தெரியும். காலமுகன், கபாலிகன், உக்கிரன், ஊர்த்துவன்னு 108 கூட்டம் இருக்குது இவர்கள் காசிக்கு காவல் தெய்வமா இருக்கிற காலபைரவனோட வாரிசுகள்னு ஐதீகம். துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இவங்க கண்களுக்குத் தட்டுப்பட்டா அந்தக் கால பைரவராகவே மாறிடுவாங்க...’’ என்று அந்தக் காசி பண்டிதர் ருத்ரனை முன்வைத்து இவர்களைப் பற்றிச் சொல்கிறார்.

அப்படியானால் காசி மிகவும் புனிதமான நகரமா? அங்கு துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இல்லையா? எவ்வளவு அழகாக காசியின் புனிதத்துவத்தைக் கட்டமைத்திருக்கிறார். புனிதங்கள் உடைபடும் பிரதிகளை பின்நவீனத்துவப் பிரதி எனச் சொல்வார்கள். காசி என்கிற புனிதத்தை உடைப்பதற்குப் பதிலாக அது ஒரு மாபெரும் புனிதஸ்தலமாக கட்டமைப்பதன் மூலம் இது இந்துத்துவா பிரதியாக உருமாறுகிறது.

படம் தென் தமிழ்நாட்டுக்கு வரும்போது அங்கே இருக்கும் பிச்சைக்காரர்களை வைத்துத்தான் படம் நகர்கிறது. ஆனால் காசியைக் காட்டும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் கூட காட்டப்படாததின் அரசியல் கவனிக்கத்தக்கது.

இந்த இடத்தில் வங்காளப் படமான கௌதம் கோஷின் ‘அந்தர்வாலி யாத்ரா’ ஞாபகம் வருகிறது. (மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்)

‘கங்கை நதிக்கரையில் இறந்து போனால் மோட்சம் பெறுவார்கள்’ என்கிற ஐதீகத்தில் ஏராளமான குடும்பங்கள் தங்களது இறுதிக் காலத்தில் கங்கைக்கு வந்து சேருவார்கள். இந்தப் புனிதத்துவம் கொண்ட படிமத்தை முன்னிறுத்தி எவ்வளவு அற்புதமான ஒரு பின்நவீனத்துவப் படைப்பை (அந்தக் காலகட்டத்தில் கலகத் தன்மை கொண்ட இந்த வார்த்தையே புழக்கத்தில் இல்லை) உருவாக்கியிருக்கிறார்.

அந்திமத்தின் இறுதிப் பிடியில் இருக்கிற 90 வயதைத் தாண்டிய ஒரு தொண்டு கிழத்திற்கு உயிர் போகமாட்டேன் என்கிறது. சோதிட சாஸ்திரிகள் வரவழைக்கப்பட்டு கிரகச் சூழ்நிலைகளைக் கணித்து, ‘‘அவருக்கு திருமணம் செய்து வைத்தால்தான் சாவு வரும் அவரால் தனியாகப் போகமுடியாது’’ என்று கூறுகிறார்கள். உடனே ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த இளம்பெண், கிழவன், அந்த கங்கைக் கரையில் இருக்கும் ஒரு வெட்டியான் (கதாநாயகன்) மூவரைச் சுற்றியும் படர்ந்திருக்கிற கங்கை நதி என்று நீள்கிற இக்கதையின் அடியோட்டம் கங்கை நதியின் அழுக்கையும், ஆபாசத்தையும் முன்னிறுத்துகிறது. கங்கையின் இந்துத்துவ அரசியலை சுக்கு நூறாய் உடைக்கிறது.

தீபா மேத்தா போன்ற ஒரு வணிகத்தன்மை கொண்ட கலைப்பட இயக்குனர் கூட வாட்டர் படத்தில் காசியின் பிம்பத்தை உடைக்க முயற்சிக்கிறார். இவர் இந்தியத் தன்மைகளில் பற்று கொண்டவர். இவருடைய காமசூத்ரா படம் இங்கு நினைவு கூறத்தக்கது. நான் கடவுள் இந்தப் போக்குக்கு எதிராக நிற்கிறது. சிறு தெய்வங்களான நாட்டார் தெய்வங்களின் மாற்று வழிபாட்டு முறைகளுக்கும், அவைகளுக்குள் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பங்களுக்கும் எதிராக ஒரு உணர்வோட்டத்தை ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது இன்னொரு போக்கு.

ஏழை எளியவர்களும், விளிம்பு நிலையாளர்களும் தங்களது துயரங்களைச் சொல்லியழும் ஒரு இடமாக ‘மாங்காட்டுச் சாமி’ இருக்கிறார். அவர் உடல் ஊனமுற்றவர். இழிந்த சனங்கள் என்று மேல் மட்டத்தில் அன்புடன் வர்ணிக்கப்படும் மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பவர். கண் திறந்தும் பார்க்க மாட்டார். வாய் திறந்தும் பேசமாட்டார். இவரை தனது உறுமுகின்ற குரலால் ‘‘அப்புறம் என்னடா இவன் சாமி?’’ என்று எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். ‘‘நான் கடவுள்’’ என்று கர்ஜிக்கிறான்.

ஒவ்வொரு ஊரிலும் சின்ன அளவில் மக்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கும், அவரால் முடிந்த தீர்வுகளைச் சொல்வதற்கும் ஒரு சாமியாடியோ, பூசாரியோ, குறி சொல்லியோ இருப்பார்கள். தங்களுக்கு வேத சாஸ்திரம் பற்றியெல்லாம் தெரியாத அப்புராணிகளாக இருப்பார்கள். (நான் இந்த இடத்தில் அடையாளப்படுத்துவது போலிச்சாமியர்களை அல்ல) இவர்களைத்தான் எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். பெருந்தெய்வங்களை முன் வைத்து நாட்டார் தெய்வங்களின் ஆற்றலை அழித்தொழிக்கும் (அல்லது பெருந்தெய்வங்களுக்குள் வசப்படுத்திக் கொள்ளும்) பிராமணத்துவக் குரல் மாங்காட்டுச் சாமிகளை ஊனமுற்றவனாக்குகிறது.

தன்னைக் கொண்டுபோக வரும் வில்லனிடமிருந்து காப்பாற்றச் சொல்லி, அந்த மாங்காட்டுச் சாமியிடம் நாயகி அம்சவல்லி கதறியழும்போது, பாலா அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்:

மாங்காட்டுச் சாமியின் பார்வையின் அமானுஷ்யம் தாங்காமல் வில்லன் பின்வாங்குவது போல. (மசாலாத் தன்மையில் அல்ல; பென்ஹர் படத்தில் ஜீசஸின் பார்வையை எதிர்கொள்வதுபோல)

அப்படிச் செய்திருந்தால் ‘Hero worshipஐ உடைப்பது’ என்கிற பாலாவின் பாணியாவது வந்திருக்கும். ஆனால், ‘‘நான் சாமியில்லே.. என்னால் காப்பாத்த முடியாது... மேலே ஒருத்தன் இருக்கான். ஈஸ்வரனா... மனுஷ ரூபத்தில... சாமியா இருக்கான்.. அவனாலதான் காப்பாத்த முடியும்.’’ என்று நிராதரவாய் நாயகனிடம் விரட்டுகிறார்.

படத்தின் இறுதியில் நாயகன் ருத்ர தாண்டவமாடியவாறு, காசிக்குப் போகும்போது எல்லாரும் மரியாதை கலந்த பயத்துடன் நிற்பார்கள். மாங்காட்டுச் சாமி மாத்திரம் குற்றவுணர்வுடன் தலை குனிவதுபோல ஒரு காட்சி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிக்கான அர்த்தம் என்ன?

இறுதிக் காட்சியில் குருட்டுப் பிச்சைக்காரியான அம்சவல்லி, நாயகனிடம் எல்லா மதங்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து பேசுவாள்:

‘‘எல்லாப் பாவத்தையும் கழுவுகிறார் ஏசு சாமின்னாங்க... ஆனா ஒரு பாவமும் பண்ணாத என்னை ரட்சிக்கலையே...

எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்றாங்களே.. என்னை இப்படிப் படைச்சது கூட அந்த அல்லா சாமிக்குப் பெருமையா சாமி...

தெருவுக்குத் தெரு இருக்கற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா எந்த சாமியும் என்னை ஏறெடுத்தும் பார்க்கலையே சாமி...”

என்று அழுது புலம்புகிறாள். இதுதான் ஜெயமோகனின் இந்துத்துவா குசும்பு.

கிறிஸ்தவ ஏசு சாமியும் மோசம், இஸ்லாமிய அல்லா சாமியும் மோசம், ஆனால் இந்து கடவுள்களைத் திட்டும் போது மாத்திரம் ராமனையோ, கிருஷ்ணனையோ, எல்லாம் வல்ல சிவனையோ, விஷ்ணுவையோ, பிரம்மாவையோ திட்டவில்லை. மாறாக, ஏழை எளிய ஜனங்கள் கும்பிடுகிற தெருவுக்குத் தெரு இருக்கிற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா மோசம். ‘எல்லாரையும் படைத்த பிரம்மா ஏன் என்னை மட்டும் இப்படிக் கொடுமையாகப் படைத்தான்...’ என்று அவளால் ஏன் கேட்க முடியாமல் போய்விட்டது? அவள் பேசுவதற்கு கவித்துவமாகவும் காவியசோகமாகவும் இருக்கும் வசனம் இதுதானே?

இது போன்ற காட்சியமைப்புகளுக்கும் வசன வியாஜ்ஜியங்களுக்கும் பெயர் என்ன சுவாமிகளே?

24.2.2009 தேதியிட்ட ஜெயமோகன் வலைப்பதிவில், நான் கடவுள் சில கேள்விகள் 2 என்ற பகுதியில் 7வது கேள்வியைக் கவனியுங்கள்.

கே: நான் கடவுளில் ஒரு தொடர்ச்சியின்மை உள்ளதே?

ப: ஆம் உள்ளது. மூன்று காரணங்கள். ஒன்று நெடுங்காலம் எடுத்து நிறைய சேர்ந்து அவற்றில் சிறந்த பகுதிகளை மட்டுமே தொகுத்து உருவாக்கியமையால் உருவானது. அது ஒரு சரியான வழியா என்பது வேறு விஷயம். அது பாலாவின் வழி.

இன்னொன்று சில காட்சிகள் வெட்டுப்பட்டுள்ளன: அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளைக் கொடுக்கும்படிக்கோர, ‘முப்பது வெள்ளிக்காசுக்குக் காட்டிக் கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ் கூட்டம் இல்லை’ என்று கன்யாஸ்திரீ சொல்ல, ‘அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்த காட்சி, அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.

வசனத்தில் ஜெயமோகனுக்கு நிகர் ஜெயமோகன்தான்.

Naan Kadavul ‘படத்தில் இடம் பெறாத காட்சிகள் குறித்தெல்லாம் விமர்சனம் செய்பவன்’ என்று கிண்டலடிக்க வேண்டாம். தனது வலைப்பதிவில் இது ஏதோ உலகிலேயே மிகப்பெரிய விஷயமாகப் போட்டு தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கும் அவல நிலையில் அவரையுமறியாது பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்து விட்டது.

‘நான் கடவுள்’ என்கிற தலைப்புப் பற்றிப் பார்க்கலாம்:

10.2.09ல் வந்த ஜெயமோகன் வலைப்பகுதியில் நான் (கிட்டத்தட்ட) கடவுள் என்ற கட்டுரையில் ‘மிக விரிவாகவே’ எழுதியிருக்கிறார்.

நான் கடவுள் என்ற அந்த மந்திரம் தமிழர்களுக்குப் புரியாத ஒன்று என்பது படிப்படியாக பிடி கிடைத்தபின் அதன் மூலவரியை இரண்டாவது தலைப்பாகக் கொடுத்தோம். அப்போதும் அந்த ஐயமே நீடித்தது, மூலமந்திரமே இங்குள்ளவர்களுக்கு புரிந்ததாக இல்லை.

நான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிடதங்கள் ஆயின. அவற்றை வேதாந்தங்களின் முடிவு என்ற அர்த்தத்தில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள் முழுக்க அறிந்துவிட முடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்ச சாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப் பற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.

வேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக் கூறலாம் (நேதி நேதி நேதி) ‘இதுவல்ல இதுவல்ல இதுவல்ல’ நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி) ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்ற அறிதல் அடுத்தது. இவையனைத்தையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி’ நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.

அதன் அடுத்த நிலை என ‘ஈúஸô வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது ’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம், கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ ‘அது நீதான்’ அது ஒரு இறுதித்தன்னிலை.

இந்து மெய்ஞான மரபின் அடிப்படையான ஆப்த வாக்கியங்களில் ஒன்று ‘அகம் பிரம்மாஸ்மி’ எனும் ‘நான் கடவுள்’. அந்த வாசகம் இந்து நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவே இல்லை என்கிறார். ஆனால் இதைத் தெரிந்து கொள்வதினால் மட்டுமே ஒருவன் ஞானியாகி விட முடியாது. இந்த ஞான வாக்கியங்களைப் பிடித்துக்கொண்டு கரையேற முடியாது என்பதைக்கூட ஞானிகள் தான் கூறியிருக்கிறார்கள். ஆகவே ஆப்த வாக்கியங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று இவ்வளவு தூரம் ஜெயமோகன் கவலைப்படத் தேவையில்லை.

இதுபோன்ற போதகர்களைத்தான்

சட்டையிட்டு மணிதுலக்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே

என்கிறான் சித்தன் சிவவாக்கியன்.

இவர் சித்தர் பாடல்களையும் விட்டு வைக்க வில்லை. ருத்ரனைத் தேடி வரும் தனது அம்மாவிடம்,

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனது,
உடம்பாவது ஏதடி உயிராவது ஏதடி,
உடம்பிலே உயிரெடுத்த உண்மை தெய்வம் நானடி

என்கிறான். படத்தில் பார்க்கும்போது இது ஒரு சிவவாக்கியர் பாடல் என்று சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இதன் இறுதி வரிகள் திரிக்கப்பட்டுள்ளன.

உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

என்பது தான் அசல் அக்மார்க் சிவவாக்கியன். இந்த இந்துத்துவா கூத்திற்கு சிவவாக்கியனும் உடந்தை என்பது போல கடைசிவரியைத் திரித்திருக்கிறார்.

எந்த சித்தனும் ‘உண்மை ஞானி நான்’ என்று சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ‘கடவுளின் இருப்பை உனக்குள்ளே தேடிப்பார்’ என்பதுதான். இதே ரீதியில் ‘தூமை’ குறித்தும் கட்டுடைத்துப் பார்க்கலாம்.

இந்தப் படத்திலேயே உச்சபட்ச இந்துத்துவாக் கூத்து நீதிமன்றக் காட்சிகள்தான். ஏற்கனவே காவல் நிலைய உயர் அதிகாரியிடத்தில், தன்னைப் ‘பகவான்’ என்றும் ஒருவனைக் கொலை செய்தது குறித்து ‘பகவான் ஆசீர்வாதம் செய்துவிட்டார்’ என்றும் தெரிவித்திருக்கிறான் ருத்ரன். ஒரு கொலைக் குற்றவாளியான ருத்ரன் நீதி மன்றத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக ஆர்தர் வில்சனின் கேமரா உபயத்திலும் இளையராஜாவின் இசைத்துணுக்குகள் வழிய ஒரு அமானுஷ்யமான தோற்றத்தில் உட்கார்ந்திருக்கிறான். சுற்றிலும் காவல் துறை அதிகாரிகள் பயபக்தியுடன் நிற்கிறார்கள்.

நீதிபதி (பிராமணத் தோற்றத்துடன்) உள்ளே நுழைகிறார். எல்லோரும் எழுந்து நிற்க ருத்ரன் மட்டும் கால் மேல் கால் போட்டபடி. பக்கத்திலிருக்கும் காவலர் ‘ஜட்ஜ் வந்திருக்கிறார் எழுந்து நில்லுங்கள்’ என்று மிகவும் பவ்வியமாக ருத்ரன் காதருகில் சொல்கிறார். ருத்ரன் உறுமலுடன் அதை அலட்சியப்படுத்துகிறான். நீதிபதி இந்தச் செய்கைகளையும் அவனது தோற்றத்தையும் பார்த்துக் கை கூப்பித் தொழுகிறார்.

(சூத்திரத் தோற்றத்துடன் உள்ள) உயர் காவல் அதிகாரியை அந்த வழக்கு குறித்து விசாரிக்கிறார். காவல் அதிகாரி மிகச்சரியான ஆங்கில மொழியில் பேசமுடியாமல் தப்பும் தவறுமாகத் திணறுகிறார்.

அவரை ‘‘கழிசடை...கழிசடை... உனக்கெல்லாம் யாருய்யா வேலை குடுத்தது...?’’ என்று ஆவேசமாகத் திட்டுகிறார் நீதிபதி.

பிறகு, ருத்ரனைப் பார்த்து, ‘‘எந்த ஊரு தம்பி?’’ என்ற கேட்க, இந்தியில் கம்பீரமான குரலில் உறுமுகிறான். ‘‘எனக்கு எல்லைகளே கிடையாது.’’ என்று தமிழிலும் பகர்கிறான்.

‘‘இதோ பாருங்கோ... உங்களுக்கு ஊரு தேசம்னு எதுவும் இல்லாம இருக்கலாம்... ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கோல்லியோ... என்னை மதிக்காட்டாலும் அதை மதிச்சித்தானே ஆகணும்...’’ என்கிறார் நீதிபதி.

‘‘உங்க நீதி நியாயம் சர்க்கார் இதெல்லாம் என்னைக் கட்டுப்படுத்த முடியாது... நீங்கள்லாம் என்னை வணங்க வேண்டியவங்க... நான் சாதாரண மனுஷனில்ல. காவல் தெய்வம். வாழக் கூடாதவங்களுக்கு நான் கொடுக்கற தண்டணை மரணம். வாழவே முடியாதவங்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்...’’ என்று ஆசீர்வாதம் செய்கிறான். ‘‘மிருத்யுதேவ்...(மரணதேவன்) அகம் பிரம்மாஸ்மி.. நானே கடவுள்...’’ என்று உறுமுகிறான்.

இதில் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விஷயம்: ருத்ரன் கடைசி வரைக்கும் நீதிமன்றக் கூண்டில் ஏறவேயில்லை. கால்மேல் கால் போட்டபடி விதவிதமான காட்சியமைப்புகளில் உட்கார்ந்து ‘போஸ்’ தருகிறான். அவனது அலட்சியமான உறுமலைக் கண்டு பயந்துபோகும் நீதிபதி வழக்குக் கோப்புகளை எடுத்து உயர் காவல் அதிகாரியின் முகத்தில் வீசி எறிகிறார்.

‘‘உண்மையான குற்றவாளியைப் பிடிக்க முடியாம யாரையோ புடிச்சிக் கொண்டாந்து நிறுத்திட்டே...’’ என்று திட்டுகிறார்.

‘‘இவன் மாதிரி ஒரு பரதேசி எங்கேயோ உட்கார்ந்துகிட்டு ஒரு சீப் மினிஸ்டரோட தலையைக் கொண்டு வாடான்னு ரவுடித்தனம் பண்ணதுக்கு இந்த கவர்மெண்டும் கோர்ட்டும் என்ன செய்ய முடிஞ்சது...?’’

இந்தப் படத்தை இயக்கிய பாலா பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்று கேள்வி. கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு வடநாட்டு சாமியாருக்கும் நிகழ்ந்த ஒரு நிழல் யுத்தத்தை இங்கு முன் வைத்து அந்த சாமியாரை எதுவும் செய்ய முடியாத சூழலை ‘தோற்றுப் போன திராவிட அரசியலின் பரிதாபமாய்’ எள்ளி நகையாடுகிறார். ஆனால் அதே சமயத்தில் நடந்த ‘இந்துத்துவ அரசியலின் பரிதாபத்தை’ப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

ஜெயேந்திரரின் நீதிமன்றப் பிரவேசங்கள் குறித்து ஏன் விவாதிக்கவில்லை? ஒரு தர்க்கத்துக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதன் எதிர் பார்வையையும் கவுண்டர் பாயிண்ட் ஆக முன் வைக்க வேண்டும். தர்க்கத்தின் அடிப்படை பற்றிப் பேசுபவர் தானே இவர்? அந்த நிகழ்வையும் ஒரு நபர் பேசுகிற வசனமாக வைத்தால் என்ன?

ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் மாறாக, அந்த வரலாற்று நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தது இதுதான் என்பது போன்ற கட்டமைப்பையும் சிருஷ்டித்திருக்கிறார் ஜெயமோகன். இது தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி.

ஒரு சின்ன திருப்புக் காட்சி மூலம் நாம் இதை வேறு தளத்தில் அவதானிக்கலாம்.

தமிழின் அனைத்து ஊடகங்களிலும் ஜெயேந்திரரின் நீதிமன்ற வழக்குகளையும், வியாஜ்ஜியங்களையும் அப்பட்டமாக வெளியிட்டும், வாதிட்டும், அது குறித்த பிரச்னைகளை எள்ளி நகையாடியும் நடந்த நிகழ்வுகளை திரிக்கப்படாத வரலாறு சொல்லும்.

எல்லாம் வல்ல சர்வேஸ்வரனின் மறுபிறப்பு என்றும் கடவுளின் அவதாரம் என்றும் பெரும்பான்மையான உயர்வர்க்கத்தினரின் பூஜையறையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஜெயேந்திரருக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். ‘‘சுப்பிரமணி... சுப்பிரமணி... சுப்பிரமணி...’’ என்று நீதிமன்ற டவாலி சத்தம் போட்டதும் ஜெயேந்திரர் பதறியடித்துக் கொண்டு போய் நீதிமன்றக் கூண்டில் நின்றது, காவல் அதிகாரிகள் ‘அன்பான’ வார்த்தைகளால் விசாரித்தது, கோர்ட் அலுவலர்கள் கேலியும் கிண்டலுமாய் எதிர் கொண்டது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள இருண்ட கூடங்கள் எள்ளி நகையாடியது என்று இந்துமதத்தின் மாபெரும் பீடாதிபதியை நடத்திய விஷயங்கள் எல்லோருமே அறிந்த ஒன்றுதான். இந்த ஆரிய அரசியலின் பரிதாபத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறார் ஜெயமோகன்.

பல வருடங்கள் கழித்து வருகிற ஒரு வாசகனுக்கு, ‘ஒன்றும் பெரியளவில் நடக்கவில்லை. நடந்தது இதுதான்...’ என்று ஆவணப்படுத்தும் காரியம்தான் இது என்பதை வரலாற்றை அவதானிக்கும் எவரொருவரும் உணர்ந்து கொள்ளலாம். ஏனெனில், தாழ்த்தப்பட்ட அருந்ததிய குலத்தில் பிறந்த மாபெரும் வீரராகிய மதுரை வீரன், உயர்சாதி நாயக்கப் பெண்ணை சிறையெடுத்து விட்ட காரணத்தால், அவரை இது போன்ற மேட்டுக் குடிக் கலைகள்தான் அரச குல வாரிசு என்று மாற்றின. அதுவும் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் படிமத்தை ஆழமாக விதைத்தது இது போன்ற ஒரு சினிமாதான். ஜெயமோகனின் தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை.

இப்படி ஒவ்வொரு காட்சியாக எடுத்துவைத்துக் கொண்டு விவரித்துக்கொண்டே போகலாம். ஒரே ஆயாசமாக இருக்கிறது. பிச்சைக்காரர்களை உருவாக்கும் சமூகத்தின் மூல வேர்களைத் தேடிப் போயிருக்கவேண்டும். பிச்சைக்காரர்கள் உருவாவதற்கான சூழல் - அதன் அரசியல் - குறித்து விளக்கியிருக்கவேண்டும். மொக்கையாகத் தாண்டவன் மட்டும்தான் காரணம் என்று சொல்வது இரண்டாந்தர மூன்றாந்தரப் பார்வை. அதுமட்டுமல்லாது, அவர்களின் மீட்சிக்கான பாதை எது என்பதை கோடி காட்டாமல் அவர்களைக் கொன்றொழிப்பதுதான் ஒரே தீர்வு என்று சொல்லியிருப்பது மகா அபத்தம். ஒரு உயிரை எடுப்பதற்கான அனுமதியை இந்த சாமியார்ப் பயல்களுக்குக் கொடுத்தது யார்? இப்படியெல்லாம் விமர்சித்தால் ‘உன் கதையை நீ எழுது’ என்று குருநாதர் சுந்தரராமசாமி பாணியில் வக்கணை பேசக்கூடும்.

சரி. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் கதையின் உள்மடிப்புகளாய் வைத்திருப்பதை இயக்குனர் பாலா அவதானிக்கவில்லையா? என்ற பிரம்மாண்டமான கேள்வி நம்முன் எழுகிறது. ஏனெனில் பாலா பெரியார் பாசறையிலிருந்து வந்தவர். எனக்குத் தெரிந்து, நம் தமிழ் மஹா இயக்குனர்கள் பெரும்பாலோனோர் தங்களைப் பற்றித் தங்களது வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி வானளாவ இறுமாந்திருக்கிறார்கள். எனக்குக் கதையைப் பற்றிக் கவலையில்லை. எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் நான் கை வைத்தால் அது காவியம் என்கிற போக்குதான் அனைவரிடமும் உருவாகியிருக்கிறது. பர்மா பஜார்களில் விற்கிற உலக சினிமா டிவிடிக்களை வாங்கி வந்து அதில் வருகிற மாதிரி காட்சியமைப்புகளுக்குத்தான் மெனக்கெடுவார்களேயொழிய, உள்ளடக்கம் என்ன, கதையின் வேர்கள் எந்த திசையில் கடிவாளமில்லாமல் ஓடுகின்றன. கதையின் உள்மடிப்புகளாக சொருகி வைத்திருக்கும் திரைக்கதையின் அரசியல் என்ன? என்பது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

ஆனால், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்கிற அடைமொழிக்காக கூச்சமேயில்லாமல் சிற்சில நிழல் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள்.

இந்த நான் கடவுள் கதை ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலின் கதையென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் டைட்டிலில் கதை: பாலா என்ற பெயரில் தான் வருகிறது. வசனம்தான் ஜெயமோகன். இது குறித்து எந்த வணிக இதழ்களும், இலக்கிய இதழ்களும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில், இயக்குனர் திலகங்கள் கதாசிரியனிடம் கதையை வாங்கிக் கொண்டு வசனம் என்று மட்டுமே டைட்டில் போடுவதென்பது உலக இலக்கியம் பேசுகின்ற மேதாவிகளாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்கள். தன்னை மாபெரும் படைப்பாளி- படைப்புக் கர்வம் கொண்டவன் என்றெல்லாம் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் ஜெயமோகன் ஒரு திரைப்பட வாய்ப்பு வந்த அடுத்த நிமிடம் படைப்பாவது கர்வமாவது என்று அந்தர் பல்டியடித்திருக்கிறார்.

இது ஏழாம் உலகத்தின் பாதிப்புதான். கதையின் உள்நாதம் பாலாதான் என்று தப்பிக்கக் கூடும். அப்படியல்ல புதுமைப்பித்தனின் சிற்றன்னைக்கும் உதிரிப்பூக்களுக்கும் சம்பந்தமேயில்லை. ஆனால், கதை: புதுமைப்பித்தன் என்று மகேந்திரன் போட்டார். இதையெல்லாவற்றையும் விட பல படிகள் மேலாக பூ இயக்குனர் சசி. கதை: ச. தமிழ்ச்செல்வன் என்று போட்டது மட்டுமில்லாமல் ஒரு சில காட்சியமைப்புக்காக தனுஷ்கோடி ராமசாமிக்கும் சீன இயக்குனர் ஷாங் யிமுவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். காலம் மாறிக் கொண்டிருக்கிறது பாலா...

கதை வசனத்தைத் தவிர்த்து இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்ற சில நல்ல அம்சங்களையும் கவனப்படுத்த வேண்டும். பாலாவின் இயக்கம் பற்றிய செயல்பாடுகள் நுட்பமாகவும் அதே சமயத்தில் ஆழ்ந்த கலையுணர்வை அடிமனசில் மீட்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. முக்கியமாக அரசியல் கிண்டல்கள், சினிமா பற்றிய கிண்டல்கள் மிக அழகாகவும் பாராட்டும்படியாகவும் வந்திருக்கின்றன. மிகப் பெரிய துணிச்சலுடன் பல்வேறு காட்சிகளை முன்வைத்துப் பார்வையாளனின் முகத்தில் அறைந்து தள்ளுகிறார் பாலா.

காவல் நிலையத்தில் எம்ஜியார், சிவாஜி, ரஜினி போன்ற வேடமிட்ட மூன்று பிச்சைக்காரர்களும் ஆடிப்பாடுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு உருவங்களை பிச்சைக்காரப் பயலுகளாகச் சித்தரிப்பதற்கு ஒரு தெளிவான அரசியல் பார்வையும் அலட்சியமான துணிச்சலும் வேண்டும். அடுத்து சிம்புவின் பாடலுக்கு ஆட்டம் போடும் நயன்தாரா என்னும் பிச்சைக்காரக் கிழவன், அவர்களது குத்தாட்டமும் கோமாளியாட்டமும் எல்லாமே கிண்டலடிக்கப்படுகிறது. ‘மடையர்களே இந்த பிச்சைக்காரப்பயல்களிடம்தான் நாட்டை ஆள்கிற பொறுப்பை ஒப்படைக்கிறீர்களா?’ என்று தமிழ் மகா ஜனங்களை எள்ளி நகையாடுகிறார் பாலா. இதுவரையிலான எந்த ஒரு படத்திலும் வராத - எடுக்க முடியாத - இக்காட்சிகள் ஒரு தீவிரமான அரசியல் படத்துக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போவதான உணர்வு அந்தக் கணங்களில் நம்மைப் பற்றிக் கொள்கிறது. பாலாவின் துணிச்சலைக் கண்டு நான் வியந்து கொண்டிருந்த என் வியப்பு அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போய்விட்டது. இந்தப் படத்தை ரஜினிகாந்த் மிக அற்புதமான படம் என்று பாராட்டுகிறார். அந்தப் பாராட்டையும் அவருடன் சேர்ந்து நின்று இயக்குனர் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட படங்களையும் சுவரொட்டிகளாக அடித்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்படுகிறது.

மெயின் ஸ்ட்ரீமில் எல்லாமே சாதாரணமான விஷயங்கள் அல்லது காமெடியான விஷயங்கள். இதுதான் கொடுமை. தன்னைக் கிண்டல் செய்யும்போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அது வேறு யாரோ மூன்றாவது நபரை என்பதுபோல சம்மந்தப்பட்ட நபரும் சேர்ந்து அதில் பங்கெடுத்துக்கொள்ளும்போது அந்தப் பகடி வடிவேலு காமெடியாக மாறிப்போய் விடுகிறது.

‘புதுப்பேட்டை’ படத்தின் இறுதியில், ‘ஒரு கொடூரமான ரவுடியும் கொலைகாரனுமான மிகப்பெரிய சமூக விரோதி, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கிறான். 15 கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்வித் தந்தையாகிறான்’ என்று படத்தை முடித்திருப்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே காணக்கிடைக்காத காட்சி. ‘தீயவனுக்குத் தண்டனை’ என்ற தமிழ் சினிமா சென்டிமெண்ட் ஐ உடைத்திருக்கிறார். இந்த மிகப் பெரிய அரசியல் விமர்சனம், வடிவேலு காமெடிகளால் சூழப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரிய காமெடியாகப் போனதுதான் துயரம்.

எலி என்கிற பிச்சைக்காரச் சிறுவன், ‘தனது சகாவை ஒரு பெரிய தொழிலதிபராக்கி ஒரு நடிகையைக் கட்டி வச்சிரலாம்னு பாக்கிறேன்’ என்கிறான்.

அரசியலில் குதித்தால் யார் யாரெல்லாம் என்னென்ன மந்திரி என்று இலாகா பிரிக்கும் காட்சிகள் என்று அரசியல் அங்கதங்கள் பாலாவுக்கு மிகச் சாதுர்யமாக வருகின்றன.

இது போன்ற காட்சிகளுக்காக பாலாவை நிரம்பப் பாராட்டலாம். இசை இந்தப் படத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. காட்சிகளுக்கேற்பவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் தொனியின் மாறுபாடுகளுக்கேற்பவும் விரிவாக விவாதிக்கும் அளவுக்கு ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் அமைத்திருக்கிறார் இளையராஜா.

கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு இந்தப் படத்தை எந்தவிதமான பாசாங்குமில்லாத யதார்த்தமான புறத்தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிற அதே சமயம் காட்சி அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கிற ஆளுமைகளின் அகத் தோற்றத்தையும் முன் வைக்கிறது.

ஆர்தர் ஏ. வில்சனின் கேமரா இந்தப் படத்தில் ஒரு பாத்திரமாகவே பங்காற்றுகிறது. காசியின் சனாதனமான சலனங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார்.

ஆஸ்காரையெல்லாம் வைத்து அளவிட முடியாத நடிகன் என்று ஆர்யாவைப் பற்றிச் சொல்லலாம். அவரது உடல்மொழியைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டை கண்முன்னால் நிகழ்த்தும் மாமிசபட்சிணி.

விளிம்பு நிலையாளர்களின் வாழ்வுநலன்களில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி வருபவர் பாலா. இதில் அவரையுமறியாமல் அவர்களுக்கு எதிராக மாறியிருக்கிறார்.

இந்த விளிம்பு நிலை மக்களைக் கொல்வதுதான் இதற்கான தீர்வு என்பது முழுக்க முழுக்க இந்துத்வா கோட்பாடு. போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் இவர்களுக்குக் கிடைத்த தண்டனை இது. இந்தப் பிறவிப் பயனை இவர்கள் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பதுபோன்ற இந்துத்துவப் புனிதங்களை முன்வைத்து இந்தக் கொலைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போக்கு ஆபத்தானது.

- கௌதம சித்தார்த்தன் (unnatham@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
anbu
2009-04-07 04:31:00
sekar.anbarasan@yahoo.com

hai .iam anbu this keetru web side is very use full.
very intrasted.thankes for keetru

Ragavan
2009-08-04 02:22:00
ragavansam@hotmail.com

Migha azhagaga vanthirukkiradhu ungalin naan kadavul paarvai... kaamasutra padam eduthathu mira nair endru ninaikkiren...
baalavin angathangal...virakthi athigam ullavargalin.. oru kuroora nagaichuvai...miga iyalbaaga vandhulladhu.... naan kadavul baalavai oru coward aaga thaan kaattukiradhu...miga athigamaana samathaanangal...thappaana purithalkal...padamengilum nirainthirukkiradhu...vilimbu manithargalai patriya araikurai gnanam...idhu podhum ngira oru lethargy..complacency...edhuvo...naan kadavul oru araivekkaattuththanam...



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP