குசேலன் தோல்வி - விநியோகஸ்தர்கள் அதிருப்தி
குசேலன் படம் தோல்வியடைந்ததால் விநியோகஸ்தர்கள் பெரும் நட்டம் அடைந்துள்ளனர். இழப்பீடு வழங்கவில்லையென்றால் அடுத்து ரஜினி படம் எதையும் வாங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குசேலன் படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமே இல்லாததால், என்ன காரணம் என்று ரசிகர்களிடமே கேட்டபோது, குசேலன் படத்தில் வரும் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
படத்தில் நிஜ சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினியிடம் ஆர்.சுந்தர்ராஜன் அரசியலுக்கு வருவீர்களா? என ஒரு கேள்வி கேட்பார். அதற்குப் பதிலளிக்கும் ரஜினிகாந்த், “சினிமாவில் பேசற வசனத்தை நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யிறது, அது யாரோ எழுதிக்கொடுத்து நான் பேசறது” என பதிலளிப்பார்.
இதுவரை ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்குகளுக்காகவே அவரது படங்களை பலமுறை பார்த்த அவரது ரசிகர்களை இந்த வசனம் கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது. எனவே இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று ரசிகர் மன்றங்கள் சார்பில் ரஜினிக்கு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. இதனையடுத்து குசேலன் படத்திலிருந்து அதிருப்திக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டது.
இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் படத்தை அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உரிய நஷ்ட ஈடு வழங்கவில்லையெனில், ரஜினியின் அடுத்த படத்தை வாங்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து 7 கோடி ரூபாய் வழங்க ரஜினி முன்வந்துள்ளார். ஆனால், ஏற்பட்ட நஷ்டம் இதைவிட அதிகம் என்பதால் விநியோகஸ்தர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கதை மட்டுமே படத்தின் நாயகன் என்பதை ரஜினி உள்ளிட்டவர்கள் உணர்ந்தால் சரி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|