ஜிம்பாப்வே தேசத்திலிருந்து ஒரு இளம் போராளி
சந்திப்பு: வி.தமிழ்ச்செல்வி
ஜிம்பாப்வேயின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் இணை அமைச்சர் பாட்ரிக் ஜுவாவோ (வயது 40) அவர்களை சந்தித்துப் பேசிய போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர அனுபவம் மிக்க இளம் போராளியின் இரத்த நாளங்களின் தெளிவான, உறுதியான துடிப்பை பார்க்க முடிந்தது. வயதையும் உருவத்தையும் மிஞ்சி நின்றது அந்த இளம் போராளியின் அனுபவம். தான் பிறந்தே இராத நூற்றாண்டுகளில் தன் நாட்டில் நிகழ்ந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிகழ்வுகளைக் கூட தன் நுனி நாக்கிலே சரளமாக உச்சரித்த அந்த வாலிபன் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிரானவன் என்ற முத்திரையை பதித்தார்.
எங்கள் நாட்டில் 4500 வெள்ளையர்கள் கையில் 90% நிலம் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தோம். இதுதான் அமெரிக்க, பிரிட்டிஷ், ஏகாதிபத்தியங்களை எங்கள் ஆட்சி மீது கடுங்கோபம் கொள்ளச் செய்த செயலாக அமைந்தது. இதை இப்படியே விட்டுவிட்டால் இந்த நிலை தென் ஆப்பிரிக்கா, நமீபியாவிற்கும் பரவி விடும் என்பதால் எங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தாக்குதலை தொடுக்கின்றன என்று துவங்கிய அவர் தமது தேசத்தின் விடுதலை போராட்டத்தை விவரித்தார்.
1894-ல் ஜிம்பாபேவின் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. பகத்சிங்கைப் போல். 1957-ல் யூத்லீக் தொடங்கியது. 1959-ல் இளைஞர் ஜனநாயகக் கட்சி 1961-ல் ஆப்பிரக்க தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கியது. 1966-ல் ஏப்ரல் 28-ம் தேதி முதல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தொடர் போராட்டம் தொடங்கியது. 1980-ல் 14 வருட போராட்டத்திற்கு பிறகு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திரம் கிடைத்தாலும் ஜிம்பாப்வே நாட்டை இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கம், தன் கட்டுப்பாட்டில் தான் வைத்து இருப்பதாக கூறும் அவர், அமெரிக்காவின் ஆதிக்கம் பிரிட்டிஷ் அரசைக் காட்டிலும் குறைவு என்கிறார். அரசாங்கம் உங்கள் கையில் இருக்கும்போது பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி உங்களையும், உங்கள் நாட்டையும் கட்டுப்படுத்துகின்றது என்று கேட்டால், மிகவும் எளிது 1. நிதியுதவி. 2 வர்த்தகம் மற்றும் முதலீடு என்கிறார்.
மேலும் 1980 சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வளர்ச்சி என்பது 1982-1990-ல் கல்வி வளர்ச்சி. பிறகு 1997-ல் நில சீர்திருத்தம். அதை ஒட்டி டோனி பிளேயர் சமரசம் செய்து கொள்ள வந்தார். “we Said No” (முடியாது என்றோம்)
எங்கள் நாடு 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மிகச் சிறிய நாடு, சென்னை நகரம் போல் என்று கூறுகின்றார்.
எங்கள் நாட்டில் இளைஞர்களின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எங்கள் நாட்டில் இளைஞர்களின் சக்தி என்பது 43%. இதில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு என்பது 65%. இந்த இளைஞர்களின் சக்தி தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கவும் எங்களுக்குப் பலமளிக்கிறது என்கிறார்.
பெண்களைப் பற்றிக் கூறும்போது, எங்கள் நாட்டில் அவர்களின் எண்ணிக்கை என்பது பாதிக்கு பாதி (50%) பெண்கள் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றார்கள். நான் இணை மந்திரியாக இருக்கும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி துறையின் மத்திய மந்திரி ஓர் பெண். அவர் பெயர் டாக்டர் ஒலிவியா முச்சீனா (Dr.Olivia Muchena). அதேபோல் தற்போதைய ஆளும் கட்சியான “ZANUPF”-ன் துணைத்தலைவர் ஓர் பெண் என்று பெருமிதத்தோடு கூறுகின்றார்.
வங்கியினைப் பற்றி கூறும்போது மொத்தம் 13 வங்கிகள் என்றும் அதில் மூன்று வெளிநாட்டு வங்கிகள், ஐந்து தனியார் வங்கிகள், ஐந்து அரசாங்க வங்கிகள் என்றும் கூறும் அவர், அனைத்து வங்கிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகள் என்றும் அனைத்தும் அரசாங்கத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட நிலையில் தான் இயங்கி வருகின்றன என்றும் கூறுகின்றார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|