உணவு பெட்ரோல் ஆகிறது
ராமசுப்பு
“ஐயோ போதும்மா, சும்மா சாதத்தை போடாதே; அப்புறம் வெயிட் போட்டு விடுவேன்” சிணிங்கினாள் மாலு.
“இதோபார் மாலு சாப்பாடு காருக்குப் போடுகிற பெட்ரோல் மாதிரி... இது இல்லேன்னா உன்னால ஓடி ஆட முடியாது” செல்லமாக கடிந்து கொண்டாள் அம்மா.
“என்ன சொன்னே; சாப்பாடு காருக்குப் போடற பெட்ரோல் மாதிரியா; பெட்ரோலே தான்” இடைமறித்தார் அப்பா.
“என்னப்பா; சாப்பாடு பெட்ரோல் ஆகுமா!" ஆச்சரியத்துடன் வினவினாள் மாலு.
“ஆமாம்; ஆமாம்; லேடஸ்ட் நியூஸ் இதுதான். அமெரிக்கா நாட்டிற்குத் தேவையான கச்சா எண்ணையை இறக்குமதி செய்யறாங்க இல்லையா; இந்த கச்சா எண்ணையின் விலை ஏறிக்கிட்டே போகுது. அதனால் இனி எத்தனால் (ETHANOL) என்கிற எரி எண்ணையை அவங்க உணவான மக்காச் சோளத்திலிருந்து (Corn) உற்பத்தி செய்து அதை பெட்ரோல் உடன் கலந்து, இனி கார்களை ஓட்டப் போறாங்களாம்”.
"அப்படியா! ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அடிப்படை உணவே சோளமாவுதான்; இதனால் உணவு பற்றாக்குறை ஏற்படாதா?"
“கரெக்டா சொன்னே மாலு; இதைத்தான் கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்டரோவும் சொல்கிறார். ஆப்பிரிக்கா, ஆசிய நாட்களில் உணவு கிடைக்காமல் பட்டினியால் மக்கள் இறந்து போகும் நிலையில், உணவை பெட்ரோலாக மாற்றுவது இழிவான செயல் என்று கண்டித்திருக்கிறார். அதுமட்டுமல்ல. இப்பொழுது அமெரிக்காவில் 280 மில்லியன் டன் சோளம் தான் விளையுது. இது அம்மக்களின் உணவிற்குப் போக சற்று மிகுதியாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கார்கள் அனைத்தும் எத்தனாலில் ஓட 35 மில்லியன் கேலன் எண்ணை வேண்டும். இதை உற்பத்தி செய்ய தனியாக 350 மில்லியன் டன் சோளம் தேவைப்படும். இதை எங்கிருந்து உற்பத்தி செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். "
“அவர் கேள்வி நியாயம் தானே’ என்றாள் மாலு.
"இதனால் காடுகளெல்லாம் அழிக்கப்பட்டு சோளம் பயிரிடும் வயல்களாக மாறும்; இது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்."
“ஐயோ ரொம்ப ஆபத்தான நிலைமைக்கு போகிற மாதிரி தெரியுது”.
“ஆமாம் மாலு; அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் மார்ச் மாதத்தில் கார் உற்பத்தி செய்யும் முதலாளிகளை அழைத்து, இனி உற்பத்தி செய்கிற ஆட்டோ மொபைல்ஸ் எல்லாம் எத்தனால்-பெட்ரோல் கலவையில் ஓடுபவைகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்."
“அமெரிக்க மக்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறாங்க”
“அமெரிக்க மக்கள் இடையே ஒரு சர்ச்சை இதைப்பற்றி நடந்துக்கிட்டு இருக்கு. உதாரணமா, கார்னல் யூனிவர்சிட்டியின் விவசாய விஞ்ஞானி பிரைமென்டல் என்பவர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கும் முயற்சி என்றும், அமெரிக்காவிலுள்ள கார்கள் அனைத்தும் எத்தனாலில் ஓட வேண்டுமானால், அமெரிக்காவிலுள்ள நிலம் முழுவதையும் வயல்களாக்கி பயிரிட்டால்தான் முடியும்; இது நடக்கிற காரியமா என்றும் சாடியுள்ளார்."
“ஏங்க நம்ம நாட்டில் இதைப்பற்றி என்ன நினைக்கிறாங்க” இடைமறித்தாள் அம்மா.
"நம்ப நாட்டில் இப்பத்தான் கரும்புச் சக்கையிலிருந்து எடுக்கிற எத்தனாலை 5 சதம் பெட்ரோலுடன் கலந்து விற்க முடிவு எடுத்திருக்காங்க. ஆனால் ஹிண்டு பத்திரிக்கை சமீபத்தில் ஒரு தலையங்கமே எழுதிட்டாங்க,, அதில் நம் நாடு அமெரிக்காவை பின்பற்ற நேர்ந்தால் காடுகள் அழிவது மட்டுமின்றி சிறு விவசாயிகளின் நிலம் கைமாறும் அபாயம் உள்ளது என்றும், வறுமைக்கு மக்கள் தள்ளப்படுவர் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது."
“இந்த எச்சரிக்கை அரசாங்கத்தின் காதில் விழுந்தால் சரி” முணுமுணுத்தாள் மாலு.
“நாம இல்ல அந்த உணர்வை ஏற்படுத்தணும்” என்றபடியே விஷயத்தை முடித்து வைத்தாள்அம்மா. .
ஆதாரம் : ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் Food Stuff as Imperial Weapon-Biofuels and Global Hunger.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|