கனரா வங்கி தேனா வங்கியை விழுங்குமா?
கிருஷ்ணா
கனரா வங்கி நிர்வாகம், தேனா வங்கியை தன்னோடு இணைத்துக் கொள்வதைப் பற்றி ஆய்வதற்காக எர்ன்ஸ்ட் யங்க் (Ernst and Young) என்ற பன்னாட்டு நிறுவனத்தை நியமித்திருப்பதாக மே மாதம் 9 ம் தேதி பரவலாக செய்தி வெளியானது. பி.டி.ஐ (Press Trust of India) தகவல்தான் அனைத்துப் பத்திரிகை செய்திகளுக்கும் ஆதாரமானது.
கடந்த இரண்டு, மூன்று மாத காலமாகவே அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது இந்த செய்தி வெளியானவுடன் உறுதியானது. E&Y போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில கோடி ரூபாய் தொகையாவது பெறாமல் தங்கள் பணியை மேற்கொள்ளமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கனரா வங்கி நிர்வாகம் அவ்வாறு செலவு செய்து பணியை மேற்கொள்ளச் சொல்கிறதென்றால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த அளவிற்குப் போகாது. எனவே முன்புபோல் இச்செய்தியை புரளி என்று புறந்தள்ள முடியாது.
அரசுக்குத் தெரியாமலா இவ்வளவும்..?
“பொதுத்துறை வங்கிகளின் அதிகபட்ச பங்குகள்அரசு வசம் இருக்கின்றன (Biggest stake Holders). அரசின் இசைவோ, அனுமதியோ பெறாமல் இரண்டு பொதுத்துறை வங்கிகள் இணைவதென்றே பேச்சே இல்லை. (இப்படியிருக்க) ஒரு வங்கி இன்னொன்றைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள நிறுவனமொன்றை (Financial Consultant) ஆலோசனை சொல்ல நியமித்திருக்கும் செய்தி பற்றி அரசு மௌனம் சாதிப்பது தேனா வங்கியின் 10,000 ஊழியர்கள் மற்றும் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் மனத்தில் சந்தேகங்களை விதைக்கிறது. இந்த அச்சத்தைப் போக்கும் வண்ணம் மத்திய அரசிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று, வேறெந்த வங்கியும் தேனா வங்கியை எடுத்துக் கொள்ள நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டியது தேனா வங்கி உயர்நிர்வாகத்தின் கடமையாகும்”,
-தேனா வங்கி ஊழியர் சங்கம்(BEFI) நிர்வாகத்திற்கு அளித்துள்ள மெமோரண்டத்திலிருந்து
|
செய்தி வெளியான அன்றே தேனா வங்கியில் உள்ள BEFI உடன் இணைந்த சம்மேளனமும், அகில இந்திய BEFI தலைமையும் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இணைப்பை மறுத்து தேனா வங்கி சேர்மனும் அன்றே அறிக்கை வெளியிட்டுள்ளார். “இணைப்பு பற்றி கனரா வங்கி நிர்வாகமோ, மத்திய அரசோ எங்களை எந்த வகையிலும் கலந்தாலோசிக்கவில்லை. எனவே இப்படி எந்த ஒரு முயற்சியும் நடைபெறவே இல்லை” என்று மறுத்துள்ளார் தேனா வங்கி சேர்மன் திரு. P.L. கெய்ரோலா. BEFI யுடன் இணைந்த கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் உயர்ந்த அமைப்பான அதன் பொதுக்குழு மே 18-19 தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் இணைப்பு முயற்சியை கண்டித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் தேனா வங்கியிலோ, கனரா வங்கியிலோ உள்ள முக்கிய சங்கங்களான AIBEA, AIBOC இணைப்புச் சங்கங்கள் இப்படி ஒரு செய்தியைக் கண்டு கொள்ளவே இல்லை.
கனரா வங்கியின் சேர்மன் திரு. M.B.N. ராவ் E&Y நிறுவனத்தை நியமித்ததை உறுதி செய்யத் தயாரில்லை. ஆனால் “ மேற்கிந்தியாவில் பரவலாக உள்ள ஒரு வங்கியை நாங்கள் இணைத்துக் கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று கூறுகிறார். இது “தேனா வங்கியா என்று சொல்ல முடியாது” என்கிறார்.
“இந்த செய்தியும், தேனா வங்கி சேர்மனின் மறுப்பறிக்கையும் போதுமானது.எனவே எந்த விதமான சங்க நடவடிக்கைகளும், ஏன் கண்டன சுற்றறிக்கை கூட தேவை இல்லை” என்பது இரண்டு வங்கிகளிலும் உள்ள BEFI அல்லாத மற்ற உறுப்பு சங்கங்களின் நிலையாக உள்ளது. தேனா வங்கியில் எல்லா மண்டல அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம், கூட்டாக சாசனம் சமர்பித்தல் போன்ற நடவடிக்கைகளை மே 8ம் நாள் நாடெங்கிலும் மேற்கொண்டதன் மூலம் இந்த விஷயத்தை இலேசாக எடுத்துக் கொள்ளவதற்கில்லை என்ற திசைவழியை BEFI சம்மேளனம் மேற்கொண்டிருக்கிறது.
மீண்டும் “பொதுத்துறை வங்கிகள் இணைப்பு” என்ற அஜெண்டா கனரா வங்கியின் இந்த நடிவடிக்கை மூலமாக முன்னுக்கு வந்துள்ளது. தற்போது பேசப்படும் இந்த இணைப்பாகட்டும், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட யூனியன் வங்கி- பாங்க் ஆப் இந்தியா இணைப்பு முயற்சியாகட்டும், அதற்குப் பின்னால் என்ன நோக்கம் உள்ளது என்பது இரண்டாவது நரசிம்மம் கமிட்டி வாயிலாக மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
“வங்கிகள் இணைப்பு என்பது கிளைகளின் எண்ணிக்கையையும், ஊழியர்கள் எண்ணிக்கைகையும் வெகுவாகத் குறைப்பதில் சென்று முடிவடைய வேண்டும்”. அதற்கு அவர் கொடுக்கும் பெயர் Right sizing என்பது.
நரசிம்மம் கமிட்டி அடிக்கோடிட்டு சொல்லக்கூடிய செய்தி : “பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 33ரூ வரை இருந்தால் போதும்: 67ரூ வரை தனியாரிடம் ஒப்படைக்கலாம்”. என்ற நோக்கில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு 2000 ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. இத்துடன் அந்நிய நேரடி முதலீட்டை 74% வரை அனுமதிப்பதற்கான முயற்சியும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் உண்மை புரியும். பொதுத்துறை வங்கிகளை இணைத்து, பல்லாயிரக் கணக்கான கிளைகளை மூடி, பல பத்தாயிரம் ஊழியர்களை வீட்டுக்கனுப்பி, பொதுத்துறை வங்கிகளை உள்நாட்டு, வெளி நாட்டு முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்ப்பதுதான் மத்திய அரசில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களின் நோக்கம்.
எனவேதான், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு கட்டாயமாக எதிர்க்கப்பட வேண்டியதாகிறது. ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பாலேயே யூனியன் வங்கி- பாங்க் ஆப் இந்தியா இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது. பத்துலட்சம் ஊழியர்கள் ஒன்றிணைந்து UFBU என்ற பதாகையின் கீழ் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்களாலும் இடது ஜனநாயக கட்சிகளின் கடுமையான எதிர்ப்பாலும் தான் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் தேஜ கூட்டணி அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
|
E&Y நிறுவனத்தை ஓராண்டிற்கு முன்பு தேனா வங்கி நிர்வாகம் தங்கள் வங்கியில் எவ்வாறு Core Banking Solutions (CBS)ஐ அமுல்படுத்தலாம் என்று ஆய்ந்து சொல்வதற்காகப் பயன்படுத்தியது. அந்த வகையில் இந்நிறுவனத்திடம் தேனா வங்கியின் அனைத்து விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன. தொழில் தார்மீகத்தைக் (Professional ethics) கடந்து இந்த விவரங்களை எல்லாம் தற்போது கனரா வங்கியுடன் இணைப்பிற்காக இந்நிறுவனம் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. |
இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பால்தான் அந்நிய நேரடி மூலதனம் 74% ஆக உயர்த்தப்படாமல் உள்ளது- உள்நாட்டுத் தனியார் துறை வங்கிகள் பன்னாட்டு பகாசூர வங்கிகளால் கபளீகரம் செய்யப்படாமல் உள்ளது.
வங்கித்துறை பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறையாக, பாமரனையும் பல்லக்குத் தூக்கியையும் ஏணியில் ஏற்றிவரும் அமைப்பாக நீடிக்க வேண்டுமானால், பொதுத்துறை தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் பல்லாயிரக்கணக்கான கிளைகள் திறக்கப்பட வேண்டும். கிராம மக்களின், விவசாயத்தின் மேம்பாட்டிற்கு மேலும் உதவும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் தளமாக மாற்றப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு மூலமாகவும் வங்கிக் கடனுதவி மூலமாகவும் கிடைத்து வந்த சமூகநீதி மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் அடிப்படையாக, சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையிலான பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட முயற்சிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த தேசபக்த கடமையில் முன்னணி போர்ப்படையாக வங்கி ஊழியர்கள் இயக்கம் மாற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|